Tuesday, October 26, 2010

ஆ............எங்கே என் இட்லி???!!!!

குஞ்சம்மா கூப்பர்டிநோவுக்கு என்னிக்கு போனாளோ அன்னிக்கே என் கற்பனை குதிரையும் நேரா மாட்டாஸ்பத்திரிக்கு போய் அட்மிட் ஆகி coma ல படுத்துடுத்து. ஏன், என்ன காரணம்னு எல்லார மாதிரி நீங்களும் கேட்டீங்கன்னா அவங்களுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும் சொல்லுவேன். ஏன்னா குதிரைக்குன்னு தனியா ஆஸ்பத்திரி கட்டாம விட்டுட்டாங்களே!!!!!!!

சரி சரி தொடப்பத்தை கீழே போடுங்க. குஞ்சம்மா கதையோட ஆறாவது பாகம் எங்க எங்கன்னு என்னை பார்க்கும் போதெல்லாம் ஊர் மக்கள் ஏக்கமா கேக்கும் போது (நம்பறதும் நம்பாததும் உங்க கைல)வேற என்ன சொல்லி நான் சமாளிக்கறது? என் கற்பனை குதிரையோட பரிதாபமான நிலையை அவங்களுக்கு விவரமா சொல்ல நான் என்ன லூசா? சரி சரி...இந்த கேள்விக்கு பதில் தேடி அனாவசியமா உங்களோட பொன்னான நேரத்தை வீணாக்குவானேன்?

இப்ப விஷயத்துக்கு வருவோம். போன வருஷம் நான் வறுத்த மிக்சரை கொஞ்சம் சுவை பார்த்திருந்தீங்கன்னா உங்களுக்கு எங்க ஊர் ஊத்தப்பம் கதை பத்தி நல்லா தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு இதோ ஒரு குட்டி அறிமுகம். போன வருஷம் எங்கூர் தமிழ் பெண்கள் புதுசா கட்டுப்படும் இந்து கோவிலுக்கு நிதி திரட்ட அன்னலட்சுமி ஓட்டல்காரனே மூக்கில் விரல் வைக்கறா மாதிரி பொட்டிக்கடை வச்சு, ஆயிரக்கணக்கில் ஊத்தப்பம் வார்த்து, அதை சாம்பார்ல குளுப்பாட்டி ஜொள்ளோழுகும் பல வட இந்தியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் வித்து கல்லாப்பெட்டியை ரொப்பினாங்க. இந்த வருஷமும் நம்ம கலாசாரத்தை விட்டு குடுக்காம சாம்பாரை காமிச்சே எல்லோர் பான்ட் பாக்கெட்ல கை விட்டு பர்சை எடுக்கறதுன்னு தீர்மானம் பண்ணி மறுபடி போட்டோம் பொட்டிக்கடையை. ஒரே ஒரு குட்டி வித்யாசம் தான்.

ஊர் பெண்கள் எல்லாருமா சேர்ந்து காந்தித் தாத்தாவின் நினைவு நாளை ஒட்டி 'வாய் மூடா பட்டினி' ன்னு ஒரு புதிய ஸத்யாக்ரஹ மறியல் போராட்டத்தை தொடங்கி இந்த வருஷம் ஊத்தப்பத்தை வெற்றிகரமா கவுத்துட்டாங்க. 'இனியொரு ஊத்தப்பம் வார்க்க மாட்டோம், இது சத்தியம்' அப்படீன்னு எல்லார் நெத்தியிலும் சுலோகம் எழுதி ஒட்டிக்காத குறை ஒண்ணு தான். எங்கூர் தாய்க்குலத்தின் இந்த சினத்தோட வீரியத்தை தாங்க முடியாம வீட்டில் எல்லாக் கணவர்களும் பயந்து போய் தோசைக்கல்லையும், கரண்டியும் தலையை சுத்தி தூக்கி போட்டுட்டாங்கன்னு கேள்வி. 'ஊத்தப்பம் போயே போச்சு' ன்னு பகவத்கீதை புஸ்தகத்து மேல அடிச்சு சத்தியம் பண்ணினப்பரம் தான் புடவையை இழுத்து சொருகிண்டு பொட்டிக்கடைக்குள்ள நுழையவே நுழைஞ்சாங்க எங்க பெண்கள்.

ஊத்தப்பத்துக்கு டாடா காமிச்சிட்டு போர்ட்ல இந்த வருஷம் நாங்க எழுதின புது மெனு - இட்லி, மெதுவடை, சாம்பார், சட்னி, சாம்பார் வடை மற்றும் தயிர் வடை. சரவணபவன் chef ஐ அழ வைக்கணும்னு கங்கணம் கட்டிண்டு களத்துல இறங்கின எங்க பெண்களோட கை மணத்துல ஊரே வெங்காய சாம்பார்ல மணத்துது அந்த இரண்டு நாட்களும். சிசிங் சிசிங் ன்னு கல்லாப்பெட்டி சத்தம் போட போட உற்சாகமா வேலை நடந்துக்கிட்டிருந்த அந்த இரண்டாம் நாள் தான் அது நடந்தது.

நானும் என் தோழியும் ஆளுக்கு கிட்டத்தட்ட நூறு இட்லி வீட்டில் செய்து கொண்டு போய் விற்பனைக்கு பொட்டிக்கடையில் கொடுக்க வேண்டிய நாள் அது தான். நாலு நாளுக்கு முன்னாடியே போய் பொன்னி புழுங்கல் அரிசி, முழு உளுந்து எல்லாம் புதுசா வாங்கி 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' ரேஞ்சுல எங்க கடமையை செய்ய நாங்க தயாரா இருந்தோம். முதல் நாள் மாவை அரைத்தும் ஆச்சு. சில பேர் அவங்க அரைச்சு முடிச்சு திரும்பரத்து முன்னாடி அவங்க வீட்டு மாவு பொங்கி வழியறது ன்னு அலுத்துக்கறதை நான் கேள்விப்பட்டிருக்கேன். அதென்னவோ எங்க ரெண்டு பேருக்கும் அந்த மாதிரி பிரச்சனை என்னிக்குமே இருந்தது இல்லை.

போருக்கு போன கணவன் திரும்புவானான்னு வழி மேல் விழி வைச்சு பார்க்கும் மனைவி மாதிரி நாங்களும் முதல் நாள் அவங்கவங்க வீட்டு இட்லி மாவு அண்டாவை ஏக்கத்தோட ரொம்ப நேரம் பார்த்துகிட்டு உக்காந்திருந்தது தான் மிச்சம். மாவு மேல் நோக்கி நகர்றா மாதிரி எனக்கு தெரியலை. எனக்கு வயத்துல புளி கரைக்க ஆரம்பிச்சது அப்ப தான். அண்டாவுக்கு குளுருதோன்னு ஒரு சந்தேகத்துல ஒரு போர்வையை எடுத்து அதுக்கு இதமா போர்த்தி விட்டேன் முதல்ல. வீட்டில் எல்லாரும் சூடு தாங்காம உடம்பில் போட்ட முக்கால் வாசி துணியை உருவி விட்டுட்டு நெத்திக்கண்ணை திறந்து என்னை சுட்டுண்டே கைவிசிரியை தேடி அலயறதை கண்டும் காணாம நான் வீட்டு சீதோஷன (heater setting) பெட்டியை இன்னும் பெருசா தட்டி விட்டு கூட பார்த்தேன். ஊஹூம்......சூட்டுல தலை மயிர்க்கால் பொசுங்கினதே தவிர மாவு பொங்கரத்துக்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை.

கஷ்டத்துல கடவுள் கிட்ட முறையிடறது காலம் காலமா நடக்கற ஒரு விஷயம் தானே. கூவி அழைத்தால் அந்த குமரன் குரல் குடுக்காமலா போயிடுவான்? இப்படி நினைச்சு நான் அவன் கிட்ட புலம்பிண்டே தூங்கி அலாரம் வைத்து முழிச்ச போது காலை மணி நாலு. உயிரை கைல பிடிச்சுகிட்டு வந்து அண்டாவை திறந்து பார்த்ததும் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதென்னவோ உண்மை தான். சந்தோஷத்துல நம்ம அவ்வைப்பாட்டி மாதிரி கணீர்னு சத்தமா 'பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா' ன்னு பாட துடிச்ச என் குரலை விடிகாலை தூக்கத்துல எழுப்பினா பக்கத்து வீட்டுக்காரங்க விளக்குமாத்தால விளாசுவாங்க அப்படீங்கற ஒரே பயம் தான் தான் தடுத்து நிறுத்தினது. எப்படியோ சந்தோஷக்கண்ணீர் கண்ணை மறைக்க முதல் 28 இட்லியை அடுப்பில் ஏத்தின போது மணி காலை நாலரை.

நமக்கு ஒரு வழியா நல்ல காலம் பொறந்திடுத்துன்னு நம்பிக்கையோட ஒரு கப் காப்பி கலந்து குடிச்சிட்டு தெம்பா மறுபடி அடுத்த ஈடு இட்லி வைக்க பானையை திறந்தா அந்த கால சிவாஜி படத்துல அவர் ரெண்டு கையாலே நெஞ்சை பிடிச்சிண்டு தடுமாறி சாயறா மாதிரி ஒரு அதிர்ச்சி சீன். பானைக்குள்ள ஒரு இட்லியை கூட காணும். என்னோட 28 இட்லியும் எங்க போச்சு? ஒ......ஒரு நிமிஷம்.....இதென்ன இட்லி தட்டுல ஏதோ வழ வழன்னு ஒட்டிண்டு இருக்கு? ஆ...............என் இட்லி. மொட்டை மாடில கார்த்தால காயப் போட்ட கூழ் வடாம் மாதிரி இதென்ன இப்படி சப்பையா இருக்கு? அந்த பிரம்மன் வெத்தலையை வெள்ளையா படைச்சிருந்தான்னா இப்படி தான் இருந்திருக்குமோ?

துக்கம் தொண்டையை அடைக்க பின்னாலே சலனம் கேட்டு நான் திரும்பி பார்த்தா எங்க வீட்டு நாய் யாரு தனக்கு போட்டியா வீட்டுல ஊளையிடரான்னு பார்த்திட்டு போக உள்ள வந்திருந்தது. அந்த விடிகாலை நேரத்துல என் துக்கத்தை பகிர்ந்துக்க ஆளில்லாமல் என் நாயை கட்டிண்டு ஒ ன்னு கொஞ்சம் அழுது முடிச்சேன். ஒரு மூச்சு அழுது மனசை கொஞ்சம் தேத்திண்டு ஒரு tray யில் என் சப்பை இட்லிகளை (ஈசா இது என்ன சோதனை???) வரிசையா அடுக்கி அதை மறைக்க ஒரு அம்பது குண்டு ரவா இட்லியை செய்து set up பண்ணி மறைச்சு வச்சேன்.

ஒரு வழியா பொழுது விடிஞ்சது. டான்னு ஒன்பது மணிக்கு ஒரு தோழர் வந்து என் இட்லிகளை பொட்டிக்கடைக்கு எடுத்துப் போக வந்தார். நான் மட்டும் இப்படி கொஞ்சம் கூடுதலா வறுத்த ரவை மாதிரி மாநிறமா இல்லாமல் வெள்ளையாய் இருந்தேன்னா நிச்சயம் எனக்கு அன்னிக்கு வெக்கத்துல காது மடல் சிவந்திருக்கும் ன்னு நான் பரிபூரணமா நம்பறேன். ஒரு வழியா அவர் கிட்ட இட்லிகளை அனுப்பிட்டு நானும் பின்னாடியே அங்க போக தயாராகி கிட்டிருந்த போது தான் என் தோழி போன் செய்தாள். அமெரிக்கா மிலிடர்யில bomb தயார் பண்ணனும்னா தன்னை தான் ரெசிபி கேட்கணும்னு வாயில துப்பட்டாவை பொத்திண்டு அழுதா அவ. அவளோட இட்லிக்கு எதிரா உலகத்துலேயே எந்த ஆயுதமும் இருக்காதுன்னு அவளோட கணவர் அடிச்சு சொல்லறதா வேற சொல்லி வருத்தப்பட்டா. 'போனா போறது, விட்டுத்தள்ளு' ன்னு நான் என் சோக சப்பைக்கதையை அவளோட பகிர்ந்திண்டு சமாதானப்படுத்தினேன்.

அடுத்த பிரச்சனை ஊர் மக்களை எந்த முகத்தோட போய் பாக்கறது? இட்லி சகோதரிகள்னு கிண்டலடிச்சு கை கொட்டி சிரிக்க மாட்டாளா? பாம்பே படத்துல மனீஷா கொய்ராலா போட்டுக்கறா மாதிரி அழகா முக்காடு போட்டுண்டு பொட்டிக்கடைக்கு போகலாமான்னு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் யோசனை செய்து பின்னாடி அதை கைவிட்டுட்டு 'சத்யமேவ ஜெயதே'ன்னு தைர்யமா முகத்திரை இல்லாமையே அங்க போய் பார்த்தா என்ன ஆச்சர்யம்! எங்களோட அவமானச் சின்னமான ஒரு இட்லி கூட பொட்டிக்கடையில காணும். விசாரிச்சதுல கல்லோ சப்பையோ ஒரு இட்லியை கூட மிச்சம் வைக்காம வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடாங்க எங்க ஊர் வட இந்தியர்கள்னு தெரிஞ்சுகிட்டோம். நாங்க பேசிட்டு இருக்கும் போதே ஒரு தட்டு இட்லியோட எங்களை கடந்து நடந்து போன ஒரு சர்தார்ஜியை 'அண்ணா'ன்னு பாசமலர் ஸ்டைல்ல கட்டிக்கணும்னு தோணித்து ஆனா ஏனோ செய்யலை. திடீர்னு லேசான மனசுடன் நானும் என் தோழியும் வடை தட்ட ஆரம்பிச்சோம்.

Tuesday, October 5, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - ஐந்தாவது பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கூப்பர்டினோவில் உள்ள செந்தில், மைதிலி தம்பதியினரின் வீடு

மைதிலி: வலது கால் எடுத்து வச்சு உள்ள வா குஞ்சம்மா.

செந்தில்: ஏன் ஆர்த்தி கரைச்சு உள்ள கூப்பிடலையா? அந்த குறை எதுக்கு உனக்கு? அதையும் பண்ணிடேன். நான் வேணும்னா 'கௌரி கல்யாணம் வைபோகமே' பாடவா?

குஞ்சம்மா: யக்கா, வூட்டு வாசல்ல வச்சு அய்யாவ பாட்டெல்லாம் பாட சொல்லாதே. அவரு பேசினாவே செங்கலை சொரண்டரா மாதிரி இருக்கு. பாடினா நான் ரொம்ப டென்சன் ஆயிருவேன்.

மைதிலி: சும்மாவா உங்க பிரெண்ட்ஸ் உங்கள 'லொள்ளாதிபதி' ன்னு கூப்பிடறாங்க? இப்போ அனாவசியமா லொள்ளு பண்ணி குஞ்சம்மாவை டென்சன் பண்ணாதீங்க சொல்லிட்டேன். நீ வா உள்ள போகலாம் குஞ்சம்மா.

செந்தில்: வீட்டுக்கு அதிபதி தான் கனவாப் போச்சு. சரி தான் ஒரு இத்துனூண்டு அவுட் அவுசுக்காவது அதிபதியாகலாம்னா அதுக்கும் வழியில்லை. லொள்ளாதிபதியா நான் இருக்கறதுல உனக்கு என்னம்மா பிரச்சனை? சரி சரி உள்ள போவோம் வாங்க.
--------------

(பத்து நாட்களுக்கு பின்)

செந்தில்: மைதிலி, நான் சொல்றேனேன்னு நீ தப்பா நெனைக்காதே. பத்து வருஷமா ஜிம்முக்கு போயும் இளைக்காதவள் என் மனைவின்னு நான் கூப்பர்டிநோவுக்கே உன்னை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன். நம்ம ஊரு படத்துல கிராமத்து தேவதைன்னு உக்கிரமான ஒரு அம்மன் சிலையை காமிப்பாங்களே, அது மாதிரி எப்படி கம்பீரமா இருப்ப நீ! இப்ப என்னடான்னா காதும் கண்ணும் பஞ்சடைச்சு போய் இப்படி ஆயிட்டியேம்மா!

மைதிலி: நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க. இந்த குஞ்சம்மாவுக்கு என்னிக்கு ஜெட் லாக் போய் என்னிக்கு வேலை செய்ய போறாளோ தெரியலையே? கல்யாணமாகி இந்த பதினஞ்சு வருஷத்துல உங்களுக்கு கூட நான் இவ்வளவு சிசுரிஷை செஞ்ச நியாபகமில்லைங்க.

செந்தில்: (மெதுவாக) செஞ்சிருந்தாத்தானே நியாபகம் வர்றதுக்கு.

மைதிலி: என்னது?

செந்தில்: அது ஒண்ணுமில்லை. குஞ்சம்மா எள்ளுன்னா நீ எண்ணையா நிக்கறையே அதை நினைச்சு நான் பெருமைப்படறேன்.

மைதிலி: (கோபமாக) கிண்டலா உங்களுக்கு?

செந்தில்: சரி சரி கோவிச்சுக்காதே. இவளுக்கு நீ வேலை செய்யவா வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கான்கார்ட் கோவில் முருகனை அப்படி வேரோடு பிடுங்கின? இது சரி வராது மைதிலி. நேத்து என்ன ஆச்சுன்னு சொன்னேனா? ஆபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தா நீ இல்லை, கடைக்கு போயிட்ட. எனக்கு ஒரே தலை வலி. சரி தான் குஞ்சம்மாவை கெஞ்சி ஒரு கப் காப்பி போட்டு தர சொல்லுவோம்னு தேடினா எங்க இருந்தா சொல்லு பார்ப்போம்?

மைதிலி: எங்க?

செந்தில்: பக்கத்து வீட்டுல Mars லேந்து புதுசா போன வாரம் குடி வந்திருக்காங்களே MRS8462 குடும்பம் அவங்க வீட்டு பிள்ளைக்கு தலை முடி வெட்ட உதவி பண்ண இவ போயிட்டா.

மைதிலி: இவளுக்கு தலை முடியெல்லாம் வெட்ட தெரியுமா?

செந்தில்: இவகிட்ட கத்தரிய குடுத்தால் கதை கந்தல் தான். இவ ஒண்ணும் முடியெல்லாம் வெட்டலை. அந்த வீட்டு பிள்ளைக்கு ரெண்டு தலை இருக்கே. ஒரு தலையை யாராவது அசைக்காம பிடிச்சா தான் இன்னொரு தலையில் முடி வெட்ட முடியுமாம். நம்ம வீட்டு மதர் தெரிஸா தன் பிடி உடும்பு பிடின்னு பெருமையா சொல்லிட்டு அங்க போய் உக்காந்து அரட்டை அரங்கம் நடத்திகிட்டு இருந்தா. நான் போய் அவங்க கதவை தட்டி 'குஞ்சம்மா எனக்கு காப்பி போட்டு தரியா'ன்னு கேட்டதுக்கு அவங்க பிரிஜ்ஜை தொறந்து ஒரு தம்ளர் ஜூஸ் விட்டு கொடுத்து 'காப்பியெல்லாம் வேணாம், ஒடம்புக்கு இது தான் குளிர்ச்சி' ன்னு கூசாம சொல்லறா.

மைதிலி: இவளை எப்படி வேலை செய்ய வெக்கறதுன்னு எனக்கு தெரியலையே! ராத்திரி சமையலுக்கு இவ கொஞ்சம் காய் வெட்டி தந்து பாத்திரம் அலம்பி போட்டா நல்லா இருக்கும் ஆனா இந்த பூனைக்கு யார் மணி கட்டறது?

-தொடரும்