Tuesday, December 19, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3

இந்த வாரக்கடைசியில் இந்தியாவை விட்டு கிளம்பணும். அதுக்குள்ள நிறைய கச்சேரிகளையும் , காண்டீன்களையும்  பார்த்திடணும்னு  சபதம் எடுத்து தினமும் ரெண்டு அல்லது மூணு கச்சேரி சபாக்களுக்கு  விடாமல் படை எடுக்கிறேன்.

Ola டாக்சி கம்பெனி ஆளுங்க காந்தி சிலைக்கு பக்கத்துல எனக்கும் சிலை எழுப்ப ஏற்பாடு பண்ணறாங்கன்னு ஒரு வதந்தி இருக்கு. இந்த ரெண்டு வாரத்தில், கொண்டு வந்த அந்நிய செலாவணில முக்காலுக்கும் மேல நான் ஓலா டாக்சிக்கு கொடுத்தேங்கறது உண்மை தான். அதுக்காக காந்திக்கு சமமா எனக்கு சிலை எழுப்பரதெல்லாம் அதிகமா படறது.  ஏதோ மனசுல பட்டதை சொல்லறேன். அப்புறம் அவங்க இஷ்டம்.

சென்னைல மக்கள் தொகை பெருக்கத்தை கண் கூடா பார்க்கணும்னா சாயந்திரம் நாலு மணிக்கு மேல ஏதாவது ஒரு கச்சேரிக்கு கிளம்பி வந்தா போதும். தெருவுக்கு தெரு ஒரு கச்சேரி இருந்தாலும் சாயந்திரம் நடக்கும் எல்லா கச்சேரிகளிலும் கும்பல் அலை மோதுவது ஆச்சர்யம் தான். 

நாலு நாள் முன்னாடி அபிஷேக் ரகுராம் அவர்களின் கச்சேரிக்கு போயிருந்தேன்.  இடம் கிடைக்காதோன்னு ரெண்டு மணி நேரம் முன்னாடியே போய் இடம் பிடிச்சது நல்லதா போச்சு. சீக்கிரமா போய் இடம் பிடிக்கற நல்ல பழக்கத்தை சின்ன வயசுல என் அப்பா கிட்ட தான் கத்துண்டேன்.  ராத்திரி எட்டு மணி ரயிலுக்கு காலை பத்து மணிக்கே ஸ்டேஷன் போய் உக்காந்து ப்லாட்போர்ம் பெருக்கி துடைப்பதை கண் கொட்டாம ஆசையா பார்க்கற குடும்பம் எங்களது தான்.

அபிஷேக்கோட கச்சேரிக்கு சீக்கிரம் போனது நல்லதா போச்சு. முதல்ல உட்காரும் சேரெல்லாம் காலி. அப்புறம் நடை பாதைல ஒரு இன்ச் இடத்தை கூட வேஸ்ட் பண்ணாம  மக்கள் உட்கார்ந்தாங்க. வேற வழி தெரியாம சபா ஆட்கள் ஒரு பெரிய ஜமக்காளத்தை மேடைக்கு கீழ விரிக்க ரெண்டு நிமிஷத்துல அதுவும் கூட full ஆகவே அடுத்து மக்கள் பாய்ஞ்சது மேடைக்கு ஏறும் படிக்கட் மேல தான். அபிஷேக் சாரோட  மடி மட்டும் தான் பாக்கி இருக்குன்னு ஆனதும் தான் கதவை ஒரு வழியா பூட்டினாங்க. ஸ்பைடர் மேன் மாதிரி சுவத்துல ஒட்டிக்க கூடிய திறமை மட்டும் மனிதனுக்கு இருந்திருந்தா இன்னும் நூறு பேராவது குறைஞ்சது அந்த அருமையான கச்சேரியை ரசிச்சிருக்கலாமேன்னு என்னால நினைக்காம இருக்க முடியலை.

நிறைய சபாக்களில் காலை 9 மணியிலேர்ந்தே கச்சேரிகள் ஆரம்பம். வெளிநாட்டிலேர்ந்து வரும்  நிறைய இளம் பாடகர்கள் இந்த நேரத்துல  தான் பாடறாங்க. ரொம்ப  அருமையா பாடற இந்த இளம் வித்வான்களின் திறமையை கேட்க நிறைய கும்பல் இல்லாதது வருத்தமா தான் இருக்கு. பகல் உணவை முடிச்சப்புறம் ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்து காபி குடிக்கற நேரமா தான் மக்கள் சபா கான்டீனை பார்த்து போறாங்கன்னு என்னோட அனுமானம். அவங்களை சொல்லியும் குத்தமில்லை. காப்பின்னா அது கான்டீன் காப்பி தான். ரொம்பவே சூப்பர். 

இப்பல்லாம் அடிக்கடி எனக்கு கனவுல குழிப்பணியாரமும்,  கீரை வடையுமா  வருது.  எப்பவாவது தான் வாழைப்பூ வடையும் வாழைக்காய் பஜ்ஜியும் வரும்.  எது வந்தாலும் வராட்டாலும் ஒவ்வொரு கனவிலும் கரெக்ட்டா ஆஜராவது சபா கேன்டீன் காப்பி தான்.  வாரக்கடைசியில் ஊருக்கு போன பிறகு என் குடும்பத்தினருக்கு அடுத்து நான் ரொம்ப மிஸ் பண்ணுவது இந்த கான்டீன் காப்பியா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

பாட்டை தலை ஆட்டி ரசிக்கறச்சே பேசாம கண்ணை மூடிக்கறது தான் நமக்கு நல்லது என்பதை இந்த இரண்டு வார அனுபவம் எனக்கு கற்று கொடுத்திருக்கு. இல்லைன்னா அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் நம்ம கிட்ட ராகம் பேரை கேட்க வாய்ப்பிருக்கு.  ஏதோ பத்துல நாலு ராகம் தட்டு தடுமாறி சொல்லிடுவேன்.  மிச்சது multiple choice ல ஜம்முனு விட்டுடுவேன். ராகம் தெரிஞ்சா மட்டும் தான் கண்ணை திறந்து வச்சுக்கறது.  ராகம் புரியலைனா கண் மூடி த்யானத்துல ஆழ்ந்திடுவேன்.  அனாவசியமா நம்மை யாரும் அப்போ தானே கேள்வி கேட்க மாட்டா. வாழ்க்கை நமக்கு எத்தனையோ பாடங்களை கத்து கொடுக்கிறது. அதுல இது ரொம்ப முக்கியமான ஒண்ணு அப்படிங்கறது என்னோட அபிப்ராயம். 

ரெண்டு வாரமா என்னை தொடர்ந்து வந்து என் கூட கச்சேரி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறி இந்த கச்சேரி கலாட்டா தொடரை இத்துடன் முடித்து கொண்டு விடை பெறுகிறேன்.

- மீனா சங்கரன்
வர்ஜீனியா, அமேரிக்கா

Thursday, December 14, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 2

நான் வெளிநாட்டிலேர்ந்து சென்னைக்கு  வந்து இறங்கி இன்னியோட ஒரு வாரம் ஆகிறது.  தினமும் தேடித் தேடி கச்சேரி சபாக்களை விஜயம் பண்ணினதுல  இப்போ எந்த கச்சேரிக்கு போனாலும் கண்ல படற மாமா மாமிகளை பார்த்து சிரிச்ச முகமா ''சௌக்கியமா, இன்னிக்கு கேன்டீன்ல என்ன மெனு'' ன்னு கேக்கற அளவுக்கு என் நட்பு வட்டம் பெருகியிருக்குன்னா பாருங்களேன்!

ஊருக்கு வந்திறங்கிய ரெண்டாம் நாள் சாயந்திரம் நான் போன இடம் இன்னிக்கு சங்கீத உலகத்தின் சிகரத்தில் இருக்கும்  ஒரு சகோதரிகளின் கச்சேரிக்கு.  அதெப்படி வாயை திறந்தாலே இவங்க  ரெண்டு பேருக்கும் பாட்டு சும்மா காசி அல்வா மாதிரி  வழுக்கிக் கொண்டு வந்து விழறது. அப்படிங்கற அதி முக்கிய ஆராய்ச்சியை அதிக நேரம் செய்யாமல் கச்சேரியை ரசிக்க ஆரம்பிச்ச நான் உட்கார்ந்திருந்தது எட்டாவது வரிசையில்.

தர்பார் ராக வர்ணத்திலே சபையை சுண்டி இழுக்க ஆரம்பித்த   ரெண்டு பேரும் அடுத்தடுத்து ஆரபி, ஹிந்தோளம் மற்றும் பந்துவராளி கீர்த்தனைகளை அருமையாய் பாடி ஒட்டு மொத்தமா மக்களை மயக்கி கை தட்டலை வாங்கினது குறிப்பிடத்தக்கது..  ரசிப்போட உச்சத்துல  தலையை இப்படியும் அப்படியுமா ஆட்டினதுல நாலாவது பாட்டு முடியறதுக்குள்ள எனக்கு கழுத்துல சரியான சுளுக்கு.  எனக்காவது பரவாயில்லை. பக்கத்துல ஒரு மாமா  சபாஷ், பலே சொல்லி சொல்லியே நாக்கு வறண்டு, ஓய்ந்து போய் உக்காந்திருந்தார் பாவம்.

எல்லா சங்கீத வித்துவான்களுக்கும்  விதூஷிகளுக்கும் இந்த  ரசிகையோட பணிவான வேண்டுகோள் இது தான்.  அடுத்தடுத்து எல்லாப் பாட்டையும் நீங்க அசத்தலா பாடிக்கொண்டே போனா   ரசிகர்களோட நிலைமை என்னன்னு கொஞ்சமாவது நீங்க  யோசனை பண்ணி பார்க்கணும்.  அப்பப்போ நடுவுல கொஞ்சம் சுமாரா ஒரு பாட்டு பாடினா தானே நாங்களும் ஒரு வாய் மோரோ, தண்ணியோ குடிச்சு  ஆசுவாசப்படுத்திக்க முடியும்?  நீ இரங்காயெனில் புகல் ஏது அப்படீன்னு அடுத்த சபாவுக்குள்ள நுழைஞ்சு உங்களை பார்த்து நான் பாடறதும் பாடாததும் உங்க கைல தான் இருக்கு, சொல்லிட்டேன்.

முதல் நாலு பாட்டு வரை  தெம்பா தலை ஆட்டிண்டு இருந்த  எனக்கு வந்த சோதனை அடுத்ததா சகோதரிகள் பாடின சஹானா ராக ''கிருபை நெலகொன்ன'' கீர்த்தனை மூலமா தான்.  சஹானா ராகம் சும்மாவே சொக்குப் பொடி போடும்.  எனக்கோ ஜெட் லாக்.  இந்த சகோதரிகள் வேறு  தேன்ல குழைச்சு நெய்ல தோச்ச குரலில்  மக்களை அசத்தித் தான் ஆவோம்னு  கங்கணம் கட்டிண்டு பாடினா நானும் தான் என்ன செய்ய முடியும்? 

எட்டாவது வரிசைல  கண் சொக்கி போய் உட்கார்ந்திருந்தது என் குத்தமா?  பிரிய மாட்டேன்னு அடம் பிடிச்ச இமை ரெண்டயும்  கையால எத்தனை நேரம் தான் நானும் பிரிச்சு பிரிச்சு விட முடியும்?  எடுத்த முயற்சியில் கை  விடா விக்ரமாதித்தன் போல என் கன்னத்தை நானே வேகமா பட்டு பட்டுன்னு அடிச்சு கூட பார்த்தேன்.  மேடையிலிருந்த சகோதரிகள் என்னை மரியாதையா (?) பார்த்தது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த மாமா மாமி எல்லாம்  என் கிட்டேர்ந்து  நைசா நகர்ந்து அடுத்த வரிசைக்கு போய் உட்கார்ந்தது தான் மிச்சம். தூக்கம் கலைஞ்ச பாடு இல்லை.

சரி, கான்டீன் பக்கம் போய் ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு வருவோம்னு நினைத்து கடிகாரத்தை பார்த்தா ராத்திரி மணி ஏழே முக்கால்.  அடடா எட்டாக போறதான்னு  உடனே பாய்ஞ்சு கான்டீனுக்கு தலை தெறிக்க ஓடினேன்.  ஏன் என்ன அவசரம்னு விவரமில்லாம நீங்க கேட்டாலும் நான் பொறுமையா தான் உங்களுக்கு பதில் சொல்லுவேன்.

இந்த ஒரு வாரத்துல நான் அனுபவப்பட்டு கற்றது இது தான்.  ராத்திரி சரியா மணி எட்டு அடிச்சா சபாவில் உள்ள பாதி மாமாக்களும் மாமிகளும் கொண்டு வந்த துணிப்பையை தூக்கிண்டு கும்பலா வெளிநடப்பு பண்ணிடுவா.  அந்த சரஸ்வதியே பூலோகம் இறங்கி வந்து கச்சேரி பண்ணினாலும் இதே கதி தான்.  என்னோட காப்பி கொட்டை சைஸ் மூளையை கசக்கி நான் யோசனை பண்ணதுல தான் தெரிஞ்சுது இவா எல்லாம் சாப்பிட்டுட்டு சுகர் மாத்திரை போடற நேரம் அதுன்னு.  கிளம்பர கும்பல்ல பாதி பேர் தோசை கனவோடு வீட்டுக்கு போனா மிச்ச பேர் கான்டீன் டேபிள்ல மாத்திரை டப்பாவை திறந்துண்டு உட்கார்ந்திடுவா. இவாளுக்கு முன்னாடி போய்  கர்சீப் போட்டு சேர் பிடிக்க தான் நான் அப்படி தலை தெரிக்க ஓடினேன்.

வந்ததோ வந்தோம், காப்பிக்கு துணையா இருக்கட்டுமேன்னு ஒரு தட்டு குழிப் பணியாரத்தையும் சேர்த்து சொல்லிட்டு தான் உட்கார்ந்தேன். இந்த சகோதரிகளோ  இன்னும் குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது மேடையில் கலக்குவா போல தெரியுது.  கை  தட்ட எனக்கும் தான் தெம்பு வேண்டாமா சொல்லுங்கோ?

-மீனா சங்கரன்


Friday, December 8, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 1

சாம்பார் வடைக்கு அப்புறமா நான் அதிகமா ஜொள்ளு விட்டுக்  கணட  கனவு, மார்கழி மாசத்துல சென்னைக்கு  வந்து தினமும் ஆசை தீர பாட்டு கச்சேரிகள் கேட்பது தான்.  நான் இத்தனை நாளா கஷ்டப்பட்டு விட்ட ஜொள்ளுக்கு பலனில்லாம போகலை.  கடவுள் ஒரு வழியா இந்த வருஷம் என் கனவை நனவாக்கிட்டார்.

பெட்டி நிறைய புடவையும் மனசு நிறைய கச்சேரி ஆசையுமா நேத்து சென்னை வந்து இறங்கின எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி.  பல வருஷங்களா நானும்  சென்னைக்கு வந்து போயிண்டு இருக்கேன்.  எப்பவும் நெத்திக் கண்ணை திறந்து உக்கிரமா முறைச்சு பார்த்து, தமிழ் சீரியல் மாமியார்களை நினைவுபடுத்தும்  சூரியனை பார்த்தே பழக்கப்பட்ட  எனக்கு இந்த இளம் சூட்டோட இனிமையா வரவேற்கும் மார்கழி மாச சூரியன் புதுசு.  பயணம் ஆரம்பமே மனசுக்கும் உடம்புக்கும் இதமா இருந்தது.

காப்பி குடிச்ச கையோட கச்சேரி லிஸ்ட்டை பார்க்க காலை பேப்பரை புரட்டின எனக்கு கண்ணை இருட்டிண்டு வந்தது தான் மிச்சம்.  ஒரு ஊர்ல  இவ்வளவு சபாக்களா? ஒரே நாள்ல, ஒரே நேரத்துல இவ்வளவு கச்சேரியா? எதுக்கு போறதுன்னு  ரொம்ப நேரம் குழம்பி ஒரு வழியா இங்கி பிங்கி பாங்கி தயவுல ரெண்டு கச்சேரியை தேர்வு செய்து நிமிர்ந்த போது ஏதோ மலையை புரட்டின உணர்வு.

அடுத்தடுத்து நடக்கப் போகும் ரெண்டு கச்சேரிகளை கேட்க ஆவலா (ஆனா கொஞ்சம் லேட்டா) அரங்கத்தில் நுழைஞ்ச நானும் என் கணவரும்  ஆச்சர்யத்தில் அப்படியே நின்னுட்டோம் .  நாலு தக்காளியை தூக்கி கும்பலுக்கு நடுவில்  போட்டா மிக்சி இல்லாமலே நிமிஷமா சட்னி ரெடியாரா மாதிரி ஒரு மக்கள் சமுத்திரம்!  இதே வித்வான் எங்க ஊருக்கு வந்து கச்சேரி பண்ணின போது ஹாலில் ஈ ஓட்ட தனியா ஆள் போட்ட ஞாபகம். சொத்தில்  பாதி எழுதி வைக்கறேன்னு சத்தியம் பண்ணாக்கூட கச்சேரிக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்கற எங்க ஊர் மக்களை பார்த்தே பழகிட்ட எனக்கு இது ஒரு புது அனுபவம்.

எங்களுக்கு முன்னாடியே வந்து எங்களுக்காக  ரெண்டு சீட் போட்டு வச்சிருந்த என் தங்கைக்கு நான் கணக்கில்லாமல் கடன் பட்டிருக்கேன். காலேஜ் போற காலத்துல  காலை நேர அவசரத்தில்  எனக்கு பிளவுசுக்கு பட்டன் தச்சு தந்ததிலேர்ந்து இப்போ வருஷா வருஷம் நான் இந்தியா வரதுக்கு முன்னாடியே எனக்காக  பார்த்து பார்த்து துணிமணி வாங்கி, நான் ஒவ்வொரு முறையும் கண்டதையும் சாப்பிட்டு வயித்த வலியில் சுருண்டு படுக்கும் போது  விடாம என்னோட ஆஸ்பத்திரிக்கு அலைவது வரை பாசத்தில் அவளை மிஞ்ச நான் பல பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.

இதென்னடா காமெடி படம் போட்டா பாசமலர் படம் ஓடுதேன்னு நீங்க நினைக்கறது எனக்கு புரியாம இல்லை. அப்பப்போ சீரியஸ் சீன் இல்லைனா காமெடிக்கு என்ன வேல்யூ சொல்லுங்க?  சரி சரி  இதோ அடுத்த சீன் மாற்றம்.

ஜன சமுத்திரத்தில் நீச்சல் அடிச்சு ஒரு வழியா எங்களுக்கான சீட்டுக்கு வந்து சேர்ந்த போது ஒரு பன்னீர் சோடா பாட்டிலை நினைச்சு நான் ஏக்கப்பட்டது உண்மை தான் ஆனால் மேடையில் மோஹனம் ராக ஆலாபனா சூடு பிடிக்க ஆரம்பிச்சதுல பன்னீர் சோடா நினைவை  தற்காலிகமா ஒத்தி வைக்க முடிவு பண்ணி உட்கார்ந்தேன்.  ஆ......என்னதிது? இந்த பிளாஸ்டிக் சேரோட மிச்ச பாதி எங்கே போச்சு? அவசரமா மத்தவங்க சேரையெல்லாம் எட்டிப் பார்த்ததுல சேர் கம்பெனிக்காரன் ஒட்டு மொத்தமா எல்லார்க்கும் கரும்புள்ளி செம்புள்ளி அடிச்சுட்டான்னு புரிஞ்சது.  வாழ்க்கைல நான் அதிகமா எதுக்கும் ஆசைப்பட்டது கிடையாது. உட்காரற சேர்ல சீட் கொஞ்சம் பெருசா இருக்கணும்னு ஆசைப்படறது அவ்வளவு பெரிய தப்பா? தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடி ஆடி எவ்வளவு நேரம் தான் ஒருத்தர் பாலன்ஸ் பண்ண முடியும் சொல்லுங்க?

முன் சீட் சேரை பிடிச்சிண்டு ஒரு வழியா சமாளிச்சு உட்கார்ந்த போது தான் அதை கவனிச்சேன்.  கண்ணுக்கு தெரிஞ்ச வரைக்கும் எனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்தது எல்லாம் மாமாக்களும் மாமிகளும்  தான்.  சொல்லி வச்சா மாதிரி எல்லா மாமிகளின்  கொண்டையிலும் சின்னதா கிள்ளிய மல்லிப்பூ சரம்.  மாமாக்கள் எல்லோரும் இசைக்கு ஏற்ற மாதிரி தலையையும் கையையும் ஆட்டி ஆட்டி ரசிப்பதை பார்க்க ரொம்ப அழகா இருந்தது.  ஒரு சிலர் தாளம் கூட போட்டார்கள் ஆனா யார் பாடற பாடலுக்குன்னு தான் சரியா புரியலை.

மாமிகளில் ஒரு சிலர் ரொம்ப trendy யா ப்ளௌஸ் போட்டிருப்பதை என் தங்கை தான் சுட்டி காமிச்சா.  எனக்கு அதிலெல்லாம் கொஞ்சம் விவரம் பத்தாது. அவ சொல்லி தான் எனக்கு தெரியும் இப்போதைய trend புடவைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம ப்ளௌஸ் போடுவது அப்படீன்னு.  பச்சை புடவைக்கு நீல கலர் ப்ளௌஸ் போட்டு கலக்கிய மாமிக்கு தான் முதல் பரிசுன்னு என் தங்கையோட கலந்தாலோசிச்சதுல புரிஞ்சுண்டேன்.  குனிஞ்சு என் புடவை பிளவுசை பார்த்ததுல வெக்கமா போச்சு. யூனிபோர்ம் மாதிரி மாட்சிங்கா போட்டுண்டு வந்திருந்தேன்.  அரங்கத்துல என்னை மாதிரி மாட்சிங்கா புடவை ப்ளௌஸ் போட்டிருந்த சில பெண்களை பார்த்து 'பாவம் NRI ' யா இருக்கும்னு நினைச்சு பெருமூச்சு விட்டு மேடையில் கவனத்தை வைத்தேன். 

காப்பி ராகம் காதில் தேனா பாய்ந்ததில் திடீர்னு வயித்துக்கும்  ஏதாவது பாய்ந்தா நல்லா இருக்கும்னு தோணித்து.  இந்த அரங்கத்தில் சாப்பிட எதுவும் கிடைக்காதுன்னு நல்ல காலம் முன்னாடியே விசாரிச்சு கண்டுபுடிச்சதுல  நான் வரும்  வழியிலேயே அடையார் ஆனந்தபவன் ல காரை நிறுத்தி கார போண்டா, கார கொழுக்கட்டை மற்றும் சமோசா எல்லாம்  பாக் பண்ணி சமயோஜிதமா வாங்கிண்டு வந்துட்டேன்.  செவிக்கு மட்டும் உணவு போதும்னு சொல்ல நான் என்ன லூசா? காபியோடு ஒரு கார போண்டாவை உள்ள தள்ளின போது தேவாம்ருதமா தான் இருந்தது.

எனக்கு முன்னாடி உட்கார்திருந்த மாமா கார போண்டா வாசனைல திரும்பி  பார்த்து எங்களை கொஞ்சம் முறைச்சா மாதிரி இருந்தது.  மாமா நீங்க தப்பு தப்பா தாளம் போட்ட போது நான் உங்களை முறைச்சேனா? அப்போ நீங்க மட்டும் ஏன் என் கார வடைல கண் போடறேள்?  அப்படீன்னு நான் mind வாய்ஸ் ல மாமாவோட செல்லமா சண்டை பிடிச்ச முடிச்ச போது மேடையில்  கமாஸ் அமர்க்களப்பட்டுண்டு இருந்தது.  வித்வான் கமாஸோட இண்டு இடுக்குல எல்லாம் பூந்து விளையாடிண்டு இருந்தார்.  தமிழக் கடவுளான முருகன் மீது அழகான ஒரு தமிழ்ப் பாட்டு.  கார போண்டாவை காத்தோடு  விட்டுட்டு பாட்டில் ஐக்கியமாகி கச்சேரி சுருட்டி ராகக் கீர்த்தனையோடு முடியும் போது தான் நான் நிஜவுலகுக்கு திரும்பினேன்.

கச்சேரி முடிஞ்சு கும்பலோட வெளியில் வந்த போது தான் கவனிச்சேன் என்னை சுத்தி எத்தனை அருமையான சங்கீத வித்வான்கள் நடந்து வராங்க அப்படீன்னு.  வலது பக்கம் ஒரு மாமா வராளியை கிழிக்க இடது பக்கம் ஒரு மாமி பைரவியை முணுமுணுக்க  என்னோட கச்சேரி கனவை இவ்வளவு அருமையா நனவாக்கிய கடவுளுக்கு நன்றி கூறி நானும் ஏதோ பாட்டை முணுமுணுத்துண்டே என் கணவரோடு வீட்டை பார்த்து நடையை கட்டினேன்.

-தொடரும்