Sunday, October 9, 2016

சுடச்சுட சுண்டல்!

அமெரிக்காவில் நவராத்திரி கொண்டாடும்  பெண்கள் அனைவர் சார்பிலும் தான் இதை நான் சொல்லறேன்.  வீட்டுக்கு வீடு கணினியோட குடும்பம் நடத்துற கணவர்கள் இருந்து எங்களுக்கு  என்ன பிரயோஜனம்?  எத்தனை தரம் தும்மினோம் , எத்தனை தரம் ஏப்பம் விட்டோம்  அப்படீன்னு பார்க்கறதுக்கு எல்லாம் app வந்தாச்சு.  ஆனா பேக்கு மாதிரி  நவராத்திரி ஒவ்வொரு நாளும் ஐந்து மணி நேரம் Evite invitations ஐ தூக்கிண்டு ரோடு ரோடா அலையும் எங்களுக்கு உதவ ஒரு app ஐயும் இது வரை காணும். 

இந்த கணவர்கள் குழு எங்கயாவது கூட்டு சேர்ந்தா GOP கட்சி உறுப்பினர் Donald Trump ஒரு அக்மார்க் வில்லனா இல்லை அரை லூசா அப்படீன்னு தீவிரமா தர்க்கம்  பண்ணி நேரத்தை வீணாக்கறதை விட்டுட்டு கால் கடுக்க தெருத்தெருவா சுண்டல் வாங்க சுத்தற மனைவிகளுக்கு உதவ ஒரு app எழுதலாம்.  

எங்க ஊருல போன வருஷத்தை விட கூடுதலா ஒரு ஐம்பது வீடாவது இந்த வருஷம் கொலு வச்சு கூப்பிட்டு இருக்காங்க.  மின்னல் மீனா அப்படீன்னு பெயர் எடுக்கற அளவுக்கு சும்மா சுனாமி மாதிரி சுத்தி சுத்தி சுண்டல் பாக்கெட் வாங்கி, நவராத்திரி ஆரம்பிச்சு நாலே நாளுல சுரம் வந்து படுக்கற நிலையில் இருக்கிறேன்.  வாட்ஸாப்ப், Evite பத்திரிகைகளையே சமாளிக்க முடியாம முழி பிதுங்கற எங்களை போற வீட்டு கொலுவில் பார்க்கறவங்க வேற ஆசையா கூப்பிடராங்க.  இனி யார் கையிலாவது  குங்குமச்சிமிழ் பார்த்தா சட்டுன்னு தலை மேல் போட்டுக்க ஒரு முக்காடை இப்ப தான் கைப்பையில் எடுத்து வச்சிருக்கேன்.   வாழ்க்கையோட சவால்களை சமாளிக்க நாம் தயாரா இருக்கறது அவசியம் இல்லையா? 

இதெல்லாம் ஒரு சவாலான்னு எங்களை பார்த்து சிரிச்ச விதி இன்னிக்கு காலையில் 'இக்கட சூடு' ன்னு ஒரு பெரிய புயலை எங்க ஊர் பக்கமா தூக்கி போட்டு பார்த்தது.  ஹா!!! ஜுஜுபி!!! இதுக்கெல்லாம் அசர்றதுக்கு இந்திய பெண்கள் என்ன கை சூப்பும் வாண்டுகளா?  பட்டு புடவை, நகை நட்டு போட்டு அம்மன் ரோல் கே ஆர் விஜயா மாதிரி ஒரு இந்திய பெண்கள் அணி இன்று மாலை  சுமார் 3 மணி தருவாயில் வீட்டை விட்டு குடை சகிதம் கிளம்பி கொட்டும் மழைல முழ நீள லிஸ்டில் உள்ள அத்தனை கொலு வீட்டுக்கும் போனது என்னவோ மறுக்க முடியாத உண்மை.  எப்படி நிச்சயமா சொல்லறேன்னா அது எங்க அணி தான்.  என் தோழிகளும் நானும் அந்த அடாத மழையிலும் விடாது குடை பிடிச்சு கொலு வீடுகளுக்கு போனதை நினைச்சா எனக்கே புல்லரிச்சு உடம்பு சில்லிட்டு போறது.  இது மழைல நனைஞ்சதால வந்த சில்லுப்பு இல்லைன்னு சொன்னா வீட்டுல தான் யாரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க. 

ரொம்ப சுவையான ஒரு சம்பவம் இன்னிக்கு நடந்தது.  வழக்கம் போல் ஒரு வீட்டுக்குள் நுழையும் போதே நாங்க சுருதி பெட்டி மேல பாய்ஞ்சு ஆன் செய்து பாட தயாரான அந்த நேரம் இன்னொரு நல்ல தோழி குடையோட நுழைந்தாள்.  அருமையான பாடகி.  எங்க எல்லோருக்கும் ஒன்னு ரெண்டு பாட்டு சில வருஷங்களுக்கு முன்னாடி சொல்லி கொடுத்திருக்கா. சரி அதுல ஒரு பாட்டை எல்லோருமே சேர்ந்து பாடறதுன்னு தீர்மானம் பண்ணி ஆரம்பித்தோம்.

முதல் சங்கதி முடிக்கறதுக்கு முன்னாடி வாசல் கதவு தட்டி குடையோடு நுழைந்தார் மற்றுமொரு தோழி.  பார்த்தா அவளுக்கும் அந்த பாட்டு தெரியுமாம்.  நுழைந்த வேகத்தில் பாய்ந்து எங்களோட  அவரும் பாட ஆரம்பிச்சார்.  கூடிய சீக்கிரத்தில் பாதி கூடம் நிரம்பி வழிந்து எல்லோரும் எங்களோட சேர்ந்து அதே பாட்டை பாட ஆரம்பித்தார்கள்.  அப்ப தான் எனக்கு அந்த ஐடியா வந்தது.   சினிமாவுல வருமே குடும்பப்பாட்டுன்னு? அது மாதிரி இப்ப எங்களுக்கு ஊர் பாட்டுன்னு ஒண்ணு  இருக்கு.  எங்க ஊர்க்காரர் எங்கயாவது தொலைஞ்சு போய்ட்டா இந்த பாட்டு முதல் வரி பாடினா போதும்.  நாங்க யாரவது அடுத்த வரியை பாடிண்டே நடந்து போய் உடனே அவரை கண்டு பிடிச்சிடுவோம்.   ஊர் பாட்டு வைத்திருக்கும் ஒரே ஊர் எங்க ஊர் தான் அமெரிக்காவில் அப்படீன்னு  நினைச்சா பெருமைபடாம இருக்க முடியலை. 

எல்லோர் வீடுகளிலும் தரும் பல விதமான சுண்டல்களை நிச்சயமா நான் அனுபவிச்சு தான் சாப்பிடறேன்.    அதுல சந்தேகமே இல்லை. இருந்தாலும் யாராவது சுண்டலோட கொஞ்சம் பஜ்ஜி பக்கோடா தந்து ஒரு கப் காப்பி தந்தால் வேண்டாம்னு சொல்லிடப்போறேனா என்ன?  நாளைக்கு போக வேண்டிய வீடுகளில் வாழும் தோழிகள் யாராவது இந்த ப்ளோக் படிப்பார்கள்னு ஒரு நம்பிக்கையோட எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுவது உங்கள் மீனா சங்கரன்.




Tuesday, May 10, 2016

காமாவுக்கு சோமா!

இப்படி ஒரு சவாலை நான் எதிர்ப்பார்க்கவே இல்லையே!  இந்த மனுஷனை என்ன தான் செய்யறது?

சின்ன வயசுல என் கூட பிறந்தவங்களோட  நான் போடாத போட்டியா? ஜெயிக்காத சவாலா?  ஒவ்வொரு ராத்திரியும் வீட்டு கூடத்துல தொங்கற அந்த ஒத்த உஷா சீலிங் fan நேர் அடியில இடம் பிடிச்சு படுக்கற போட்டியில  எவ்வளவு தில்லுமுல்லு பண்ணி என் தமக்கையோட ஜெயிச்சிருப்பேன்? சரி அப்படியே ஏதோ ஒரு போட்டியில தோத்து போயிட்டா கூட கவுந்து படுத்து அழாம இதெல்லாம் ஒரு மேட்டரா அப்படீன்னு தட்டி விட்டுட்டு அடுத்த சவாலை தேடிப்போற நான் இன்னிக்கு வாழ்க்கைல எதிர்ப்பாராத வந்த இந்த போட்டியில் ஸ்தம்பிச்சு போய் நிக்கறது என்னவோ உண்மை.

இந்த நூற்றாண்டிலேயே விஷயத்துக்கு வருவியா இல்ல நான் போயிட்டு நிதானமா அப்புறமா வரட்டான்னு நீங்க கோபமா கேக்கறது எனக்கு காதுல விழறது. ஏன்னா எனக்கு தான் பாம்பு செவியாச்சே!  உங்க நெற்றிக்கண் என் ஐயன் திருச்சிற்றம்பலத்துது  மாதிரி அம்சமா தான் இருக்கு. இருந்தாலும் அதை நீங்க தயவு செய்து மூடியே வைங்க.  இதோ வந்துட்டேன் விஷயத்துக்கு.

இன்னிக்கி என் புலம்பலின் காரணகர்த்தா எங்க ஊர் சாஸ்த்ரிகள்.   நல்ல மரியாதைக்குரிய மனிதர்.  வேதங்களை கரைச்சு குடிச்சவர்.   எங்க குடும்பத்தோட வைதீக காரியங்களை முன்னின்று அருமையா செய்து வைப்பவர்.  ஆனால் அதோட நிறுத்தாம  கல்யாணம் ஆகி கடல் தாண்டி வந்த என் வாழ்க்கைல கடந்த பத்து வருஷமா தமிழ் சீரியல் வில்லி மாதிரி விளையாடுவது தான் முடியலை.

இவர் சாதுர்ய போன் (அதான் smart phone) எப்போ வாங்கினாரோ அப்போ ஆரம்பிச்சது எனக்கு ஏழரை நாட்டு சனி.  இந்த குட்டி டப்பாவுக்குள்ள இத்தனை அதிசயமான்னு ஆச்சர்ய குறி போட்டு அதுக்குள்ள முழுசா ஐக்கியமானவர்  சில வாரங்களுக்கு பின்னாடி  அந்த குகையிலேர்ந்து வெளியே தலை தூக்கின போது இன்றைய கல்லூரி பசங்களை எல்லாம் தூக்கி சாப்படற மாதிரி சமூக வலைத்தள வல்லுநரா தான் வெளியே வந்தார்.   இன்னிக்கு வைதீகம் போக மிச்ச நேரம் எங்க குடும்ப மரத்தில் (family tree) இருக்கற எல்லாரோட (குஞ்சு குளுவான் உட்பட) பிறந்த நாள், மண நாள் மேலும் பல முக்கிய நாட்களுக்கு whatsapp, facebook மற்றும் ஈமெயில் மூலமா முதல் ஆளா வாழ்த்து சொல்வதை தொழிலாக செய்கிறார்.

காமாவுக்கு சோமா அப்படீங்கற வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?   என் பெரியப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சொற்சொடர் அது.  எங்க வீட்டு மூணாவது தெருவில் உள்ள ஒரு மாமி ஒரு நாள் அவங்க நாத்தனாரோட மச்சினர் பெண் கல்யாணத்துக்கு எங்களுக்கு பத்திரிகை வச்சு கூப்டுட்டு போனா.   அந்த மாமி கிளம்பி வாசல் கேட் கூட மூடியிருக்காது.  நானும் என் தமக்கையும் உடனே ஓடி போய் உள் அலமாரியை திறந்து அந்த கல்யாணத்துக்கு  எந்த புடவை கட்டலாம்னு முக்கியமான ஒரு சர்ச்சையில இருந்த போது தான் எங்க பெரியப்பா 'காமாவுக்கு சோமா' வை பத்தி எங்களை உக்கார வச்சு விளக்கமா சொன்னார்.   அதை சிரத்தையாக கேட்டுட்டு நாங்க விடாம கல்யாணம் போய் வந்தோம்ங்கறது வேற விஷயம்.

போன மாசம் என் சின்ன பெண்ணோட பிறந்த நாள்.  நான் பார்த்து பார்த்து அவளுக்கு பிடிச்ச பரிசுகள்  மற்றும் துணிமணிகள் வாங்கி முதல் நாளே பாக் செய்து ஆசையா அவள் எழுந்ததும் முதல் ஆளா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருந்தா, எங்க சாஸ்த்ரிகள் கத்தி கபடா இல்லாமலே என் கழுத்தை சூப்பரா வெட்டி சாய்த்தார்.   நடு ராத்திரி  12 மணிக்கு போர் களத்தில் படை வீரர்கள் மாதிரி வரிசையா whatsapp, email மற்றும் facebook மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை சகட்டு மேனிக்கு தட்டி விட்டிருக்கார்.  ஒரு தாய் என்ன தான் செய்ய முடியும்?

போன வருஷம் கொந்தளிச்சு எழுந்தேன் நான். இன்னிக்கு நானா நீங்களா பார்க்கலாம்னு கங்கணம் கட்டி எங்க திருமண நாளுக்கு என் கணவர் கண் திறந்ததும் அவர் போன் பாக்கறதுக்கு முன்னாடி நான் வாழ்த்து சொல்லி "அப்பாடா, ஒரு வழியா சாஸ்திரிகளை beat பண்ணிட்டேன்" னு சந்தோஷமா கை தட்டி கெக்கலி கொட்டின என்னை 'ஐயோ பாவம்' ங்கற மாதிரி பார்த்தார் என் கணவர். விசாரித்ததுல முதல் நாள் இரவே சாஸ்திரிகள் ஈமெயில் வாழ்த்து அனுப்பிட்டாராம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு இல்லைன்னு என் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லற நான் காந்திஜியின் கொள்கைகளை கடைசி வரை விடாமல்  கடைப்பிடிக்க  சாஸ்த்ரிகள் விடுவாரா?  காலம் தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும்.

-- மீனா சங்கரன்

Note:  There is absolutely no offense intended towards the subject of the post.  He is a highly revered man in the family and has my utmost respect.  The post is simply meant as light entertainment and should be taken as such with a pinch of salt. :-)