Showing posts with label உடல்பயிற்சி. Show all posts
Showing posts with label உடல்பயிற்சி. Show all posts

Monday, November 20, 2017

வாழ்க உன் குலம்! வளர்க உன் தொண்டு!

போன வாரம் நடந்த தமிழ்ச்சங்க கலை நிகழ்ச்சிகளில் மிக அதிகமாக மேடையேற்றப்பட்டது நடன நிகழ்ச்சிகள் தான்.  நமக்கு நடுவில் இவ்வளவு நாட்டிய பேரொளிகளா அப்படீன்னு நான் கண்ணிடுக்கி ஆச்சர்யப்படும் அளவு சக ரிச்மண்ட் வாசிகள் நேத்து அரங்கத்தை அவங்க குதிகாலால் கலக்கினாங்க. ஒரு மத்திய தர குடும்பத்தலைவி அன்போடு செய்யற பாயசத்துல  இங்கொண்ணும் அங்கொண்ணுமா ஏகாந்தமா மிதக்குமே முந்திரிப் பருப்பு அதே போல நாலு நடனங்களுக்கு நடுவில் ஒரு நாடகம், ஒரு பட்டிமன்றம் அப்படீன்னு தூவி  அம்சமா தொகுத்து வழங்கியிருந்தாங்க ரிச்மண்ட் தமிழ்ச்சங்க நிர்வாக குழு.  


ஐந்தாறு பேர் கொண்ட குழுவா மேடை ஏறி விறு விறுன்னு சுழன்று ஆடிய பெண்கள் ரொம்பவே அசத்தினாங்க..  அவங்க கை காலை வெட்டின ஜோர்ல எனக்கு தான் வலது தோள்பட்டையில் கொஞ்சம் முணுமுணுன்னு வலி.  வீட்டுக்கு வந்தவுடனே மறக்காம Bengay தடவிட்டு தான் படுத்தேன்.  Sympathy வலியை நான் என்னிக்கும் குறைவா எடை போடறது கிடையாது.


மேடை ஏறிய அஞ்சே நிமிஷத்துல குறைஞ்சது 1000 கலோரியை அசால்ட்டா எரிச்ச அந்த பெண்களை பார்த்து நான் வயிறெரிஞ்சுது உண்மை தான்.  இட்லிப்பானை  மாதிரி என் ரெண்டு காதுலயும் அவங்க ஆட்டத்தை பார்த்து புகை வந்ததுக்கு காரணம் இல்லாம இல்லை.  சரி இதை ஏன் இப்படி ஊருக்கே சொல்லி ஷேம் ஷேம் ஆகணும்னு கேட்டீங்கன்னா அரிச்சந்திரனோட பக்கத்து வீட்டு மாமாவின் சின்ன வயசில்  தொலைந்து போன தங்கச்சி மகளா நான் இருப்பது தான் அதுக்கு காரணம்.  எவ்வளவு கசப்பான உண்மையா இருந்தாலும் மறைக்க முடியறதில்லை.


நீங்க அதிர்ச்சி  அடையாம இருப்பீங்கன்னா ஒரு விஷயத்தை இப்போ சொல்லுவேன்.  நானும்  கடந்த சில நாட்களா நாட்டிய வகுப்புகளுக்கெல்லாம் போயிட்டு வரேன்.  பரதம், குச்சிப்புடி மேல பரிதாபப்பட்டு விட்டுட்டு மேல்நாட்டு வழக்கமான ஸ்டெப் dance மற்றும் tango இப்படி சில விபரீத முயற்சிகள்ல இறங்கியிருக்கேன்.  இது என்னடா ரிச்மண்டுக்கு வந்த சோதனைன்னு நீங்க பதறுவது புரியாமல் இல்லை.  என்ன செய்யறது?  பக்கத்து உடற்பயிற்சி கூடத்துக்கு போன ஜென்மத்து கடன் பாக்கி மாதிரி வருஷா வருஷம் பெரிய தொகையா கட்டி என்னை டென்சன் ஆக்குவது என் கணவர் தான்.  நான் பாட்டுக்கு நிம்மதியா என் sofa உண்டு என் சேர் உண்டுன்னு வாழ்க்கையை ஓட்டறது அவருக்கு ஏதோ அஜீரணத்தை தருதுன்னு நினைக்கிறேன்.  பேமிலி membership எடுத்து கொடுத்து என்னை நல்வழியில் நடத்த முயற்சி செய்யறார்.  நான் சாதாரண வழியிலயே  நடக்க மாட்டேன்.  இதுல என்னை நல்வழில வேற நடத்தணும்னா சுலபமான காரியமா?


ஸ்டெப் டான்ஸ் வகுப்பறைக்குள்ள முதல் தடவை எட்டிப் பார்த்த போது வயித்துக்குள்ள இருந்த வெங்காய  ரவா தோசை மைக்கேல் ஜாக்சன் மாதிரி குதியாட்டம் போட்டது.   ‘காக்க காக்க கனகவேல் காக்க’ முணுமுணுத்துண்டே தான் அந்த அறைக்குள்ள நுழைஞ்சேன்.  என் பெற்றோர் பண்ண புண்ணியம் என்னை என்னிக்கும் கை விடாதுன்னு எனக்கு நானே பல முறை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டியிருந்தது.   அறைக்குள்ள நுழைஞ்சு  சுத்தி முத்தி பார்த்தா இன்முகத்தோட என்னை வரவேற்ற பத்து பெண்களுமே என்னை விட வயதில் மூத்தவங்க.  அப்படியே பூரிச்சு போய்ட்டேன். ஆஹா இவங்களே ஆடும் போது நாம ஆடிட மாட்டோமா?  இப்படி நினைச்சு சந்தோஷத்துல நெஞ்சை நிமிர்த்தி தைரியமா நின்ன  என்னை பார்த்து விதி கை கொட்டி சிரிச்சது அப்போ எனக்கு தெரியாம போச்சு.


எங்க நடன வகுப்பு ஆசிரியை அப்போ உள்ளே நுழைஞ்சார்.  ரொம்ப சிரித்த முகமா அமைதியா இருந்த அவரைப் பார்த்த உடனே ஒரு பெரிய டம்ளர் ஓட்ஸ் கஞ்சி குடிச்ச தெம்பு எனக்கு.  அந்த டீச்சரம்மா சஷ்டியப்தபூர்த்திக்கும் சதாபிஷேகத்துக்கும் நடுவுல எங்கயோ இருப்பார்னு என்னோட யூகம்.  


Dance ஆட ஆரம்பிக்கும் முன் கை  காலை நீட்டி stretch செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய டீச்சரம்மா முதல்ல குனிஞ்சு அவரவர் காலை தொட சொன்னார்.  ஹுக்கும்! அவர் பாட்டுக்கு சுலபமா சொல்லிட்டார். என்னை சுத்தி எல்லோரும் இடுப்பு வரை முழுசா மடங்கின போது என் முதுகு அரை இஞ்சுக்கு மேல மடங்குவேனா அப்படீன்னு மக்கர் பண்ணி மானத்தை வாங்கினதை பத்தி ஒரு நிமிஷமாவது அவர் யோசனை பண்ணியிருப்பாரா?.  கைக்கு எட்டாத தூரத்தில் இருந்த என் கால்களை ஏக்கத்தோட பார்க்கறதை தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?


அடுத்து இசைத்தட்டை போட்டு விட்டு நாங்க ஆட வேண்டிய steps ஐ  சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாங்க அந்த அம்மா.  முதல்ல வலது காலை ஒரு step முன் வச்சு உடனே பின் வைக்கணுமாம்.  என்னதிது?? சின்ன வயசிலேர்ந்து முன் வச்ச காலை எப்பவும் பின் வைக்கக் கூடாதுன்னு சொல்லி தானே  வளர்த்திருக்காங்க.  என்னடா இந்தம்மா தெளிவா இப்படி குழப்பறாங்களே ன்னு தீவிர யோசனையில் இருந்த நான் அடுத்த நாலு steps ஐ சரியா கவனிக்காம கோட்டை விட்டுட்டேன்.


அதோட பலன் இசைத்தட்டை ஓட விட்டுட்டு dance ஆரம்பிச்சப்போ  அவங்க வலது பக்கமா போனா நான் இடது பக்கமா போய் ஒரு பெரியம்மா மேல அடிக்கடி முட்டி மன்னிப்பு கேட்டது தான்.  தப்பு செய்தா மன்னிப்பு கேக்கறதுல எங்க குடும்பத்துல யாரையுமே மிஞ்ச முடியாது.  இதை நினைச்சு எனக்கு கொஞ்சம் பெருமை தான். சில நேரம் தப்பு செய்யறதுக்கு முன்னாடியே கூட உஷாரா மன்னிப்பை கேட்டுடுவோம்.  பிற்காலத்துல எப்பவாவது உதவுமே!  என் மேல மோதி மோதி வாழ்க்கைல ரொம்பவே அடிபட்டுட்ட அந்த பெரியம்மா வை அப்புறம் அந்த வகுப்புல ஏனோ பாக்கவே முடியலை. பார்த்தா கண்டிப்பா இன்னொரு முறை மன்னிப்பு கேட்டுடுவேன்.


ஒரு மணி நேரம் நாட்டியம் அப்படிங்கற பேருல என் இடுப்பை டிங்கு வாங்கின டீச்சரம்மா கடைசியில ஒரு பத்து நிமிஷம் யோகா பயிற்சி செய்ய சொல்லி என் வயித்துல பால் வார்த்தாங்க.  நல்லா காலை நீட்டி படுத்து  இழுத்து மூச்சு விடணுமாம்.  அம்மா பரதேவதா!  வாழ்க உன் குலம்!  வளர்க உன் தொண்டு! சொதப்பாம நான் செய்ய கூடிய ஒரு விஷயத்தை ஒரு வழியா சொன்னியேம்மா.  இது தான் சாக்குன்னு டக்குனு படுத்துட்டேன்.  இழுத்து மூச்சு விட விட கண்ணை அழுத்தி தூக்கம் வர மாதிரி வேற இருந்தது. சரியா அப்போ பார்த்து class முடிஞ்சுடுத்து.  பக்கத்துல இருந்த அந்த இடிபட்ட அம்மாவையே கை  கொடுக்க சொல்லி எழுந்து ஒரு வழியா நொண்டி நொண்டி வீடு வந்து சேர்ந்தேன்.


எதுக்கு இவ்வளோ பெரிய கதையை சொன்னேன்னா என்னை  போல நாட்டிய பேரொளிகளை எங்கப் பார்த்தாலும் நீங்கள் அவங்க முயற்சியை பாராட்டணும்னு தான். வாழ்க்கைல எவ்வளோ அடிபட்டு மேடை ஏறினாங்களோ அப்படீன்னு ஒரு நிமிஷம் நீங்க கருணையோடு அவங்கள பார்க்கணும் அப்படிங்கறது தான் என் ஆசை.


சமீப தமிழ்ச்சங்க கலை விழாவில் நடனமாடி கலக்கிய ஆண் பெண் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-மீனா சங்கரன்

Thursday, March 3, 2011

வா வா வசந்தமே!

அப்பாடா! ஒரு வழியா வசந்த காலம் ஆஜர். கடந்த ஆறு மாசமா வெளியே வராதான்னு ஊர்ல எல்லாரும் ஏக்கமா எட்டி பாத்துகிட்டு இருந்த சூரியன் இப்போ தான் மனமிரங்கி பரம விசிறிகளான எங்களுக்கு காட்சி தர முன் வந்திருக்கான். வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கற நேரம் இது.

நாலு மாசமா அலட்சியப்படுத்தினதில் தெருவுல எல்லார் வீட்டு தோட்டமும் எங்க வீட்டு தோட்டத்தோட போட்டி போட்டுக்கிட்டு 'நீ மோசமா, நான் மோசமா'ன்னு பல்லிளிச்சது போன வாரம் வரைக்கும் தான். நேத்து காலையில் எதேச்சையா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம்! ஹாரி பாட்டர் மந்திரக்கோல் ஆட்டி 'ஜீபூம்பா' ன்னு சொன்னா மாதிரி எங்க வீட்டை தவிர எல்லார் வீட்டு வாசலிலும் வண்ண பூச்செடிங்க அழகழகா பூத்து என்னைய பார்த்து 'உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே' ன்னு அழகு காட்டுது. எங்க வீட்டு கிட்டே வரும் போது மந்திரக்கோலுக்கு சார்ஜ் போயிருக்குமோ? Stock market shares வாங்கி போடற எண்ணம் இருக்குறவங்களுக்கு இது நல்ல தருணம். Lowes மற்றும் Home Depot கம்பனிங்க பூச்செடி வித்தே Wallstreet ட்டை வலுவாக்கராங்கன்னு கேள்விப்பட்டேன்.

வயசில் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்யாசம் பாராட்டாம எல்லோர் முட்டியையும் ஒரே மாதிரி பதம் பார்த்துகிட்டு இருந்த குளிர் காலத்தை அடிச்சு விரட்டிட்டு ஒயிலா வசந்த காலம் எட்டிப் பார்க்கும் போது இந்த மாதிரி உற்சாகமா பூந்தோட்டமோ இல்லை காய்கறித் தோட்டமோ மக்கள் போடறது நாம எல்லாரும் நடைமுறைல பாக்கற ஒரு விஷயம் தான்.

ஆனா எங்க ஊர் மக்கள் வசந்தம் வந்ததும் தோட்ட வேலையை விட உற்சாகமா இன்னொரு விஷயம் செய்வாங்க. அது தான் உடல்பயிற்சி. சூரியன் சாயல்ல வட்டமா ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்தா கூட போதும், ஏதோ பூச்சாண்டி குச்சி எடுத்துகிட்டு துரத்தரா மாதிரி தெருவில் இறங்கி ஓட ஆரம்பிச்சிடுவாங்க. விடிகார்த்தால காப்பி டீ கூட குடிக்காம ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு நிஜார் மாட்டிகிட்டு தலை தெறிக்க ஓடற சில மக்களை நிறுத்தி விசாரிச்சதுல இதுக்கு ரெண்டு முக்கிய காரணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒண்ணு புத்துணர்ச்சி. மற்றது உடல் எடை குறைப்பு.

இவங்க ஓட்டமா ஓடி கொட்டற வியர்வையை ட்யூப் போட்டு பக்கெட்டில் பிடிச்சா நாலு ரோஜா பூ செடிக்கு ஒரு வாரம் தண்ணி விடலாம். இதுல எங்கேர்ந்து புத்துணர்வு வரும்னு எனக்கு புரியலை. ஹமாம் சோப்பு விளம்பர அறிவுரையை கடைபிடிச்சா தானா புத்துணர்வு வந்திட்டு போறது. இதுக்கு போய் தலை தெறிக்க ஒடுவானேன்? எங்க குடும்பத்தில் புத்துணர்ச்சி பெற நாங்க நம்பகமான ஒரு formula கண்டு பிடிச்சு வச்சிருக்கோம். ஒரு கப் பில்டர் காப்பி + ஒரு தட்டு 'ஜானகி' பிராண்ட் தேன்குழல் = புத்துணர்ச்சி. இதை patent பண்ணலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு. பார்ப்போம். God is great.

உடல் எடை குறைப்பை பத்தி அதிகம் எதுவும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லைங்க ஏன்னா அது ஒரு சோக கதை. சரி அதை விட்டு தள்ளுவோம்.

வசந்த காலம் வந்தாலே பொதுவா எல்லா வீட்டுத் தலைவிகளுக்கும் ஒரு வினோதமான உந்துதல் வரும். பத்து வருஷ coma விலேர்ந்து திடீர்னு கண்ணை திறந்து 'அடடா இப்படி குப்பைத்தொட்டிக்குள்ள போய் வாழரோமே' ன்னு உணர்ந்தவங்க மாதிரி வசந்த காலம் வந்து பளிச்சினு வெய்யில் அடிச்ச உடனே வீட்டை சுத்தம் செய்யறதில் இறங்கிடுவாங்க. சுத்தம் பண்ணறேன்னு சொல்லி வீட்டில் உள்ள எல்லா அலமாரி சாமான்களையும் இழுத்து வெளியே போடறது இந்த சீசனுக்கே உண்டான ஒரு விசேஷம்.

அது மட்டும் இல்லை. வீட்டுத் தலைவிகளோட தானதர்ம உணர்வுகள் தலை தூக்கி நிற்கற நேரம் வசந்த காலம் தான். கணவர், குழந்தைகளோட உடம்பில் போட்டிருக்கிற துணிகளை மட்டும் விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையும் மூட்டை கட்டி 'salvation army' இல்லைனா 'goodwill' கடைங்களுக்கு தானம் செஞ்சுடுவாங்க. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கின புத்தம் புது துணிமணி எல்லாம் கூட இந்த மூட்டைக்குள்ள தான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டு Macy's கடைல spring sale ன்னு அடுத்த வருஷம் தானம் பண்ண வேண்டிய துணி மணி மற்றும் இதர சாமான்களை வாங்கரதுல பிசியாயிடுவாங்க. எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேக்கறீங்களா? நேத்து தான் நான் பத்து மூட்டை சாமான்களை தானம் செஞ்சேன். என் கணவரோட சட்டை வைக்கும் அலமாரி நான் துடைச்ச துடைப்பில வைரம் மாதிரி மின்னரதுன்னா பாருங்களேன்! கொடை வள்ளல் கர்ணனோட தங்கச்சின்னு என் கணவர் (பெருமையா ???) சொன்னது என் காதுல நல்லாவே விழுந்தது.

Kohl's கடைலேர்ந்து 20% off வசந்த கால தள்ளுபடி கூபான் இன்னிக்கு தான் வந்திருக்கு. இதுவே நவராத்திரி காலமா இருந்ததுன்னா குங்குமச்சிமிழ் எடுத்துகிட்டு கொலுவுக்கு கூப்பிட Kohl's கடைக்கு போயிடுவேன். ஏன்னா நம்ம மக்கள் எல்லாம் கூபான் பிடிச்சிகிட்டு அங்கே தானே இப்போ இருப்பாங்க?

பி.கு.- இந்த பதிவு போன வருடம் RTS தமிழ் சங்க ப்ளாகில் நான் எழுதி வெளியிடப்பட்டது.