Showing posts with label நடனம். Show all posts
Showing posts with label நடனம். Show all posts

Monday, November 20, 2017

வாழ்க உன் குலம்! வளர்க உன் தொண்டு!

போன வாரம் நடந்த தமிழ்ச்சங்க கலை நிகழ்ச்சிகளில் மிக அதிகமாக மேடையேற்றப்பட்டது நடன நிகழ்ச்சிகள் தான்.  நமக்கு நடுவில் இவ்வளவு நாட்டிய பேரொளிகளா அப்படீன்னு நான் கண்ணிடுக்கி ஆச்சர்யப்படும் அளவு சக ரிச்மண்ட் வாசிகள் நேத்து அரங்கத்தை அவங்க குதிகாலால் கலக்கினாங்க. ஒரு மத்திய தர குடும்பத்தலைவி அன்போடு செய்யற பாயசத்துல  இங்கொண்ணும் அங்கொண்ணுமா ஏகாந்தமா மிதக்குமே முந்திரிப் பருப்பு அதே போல நாலு நடனங்களுக்கு நடுவில் ஒரு நாடகம், ஒரு பட்டிமன்றம் அப்படீன்னு தூவி  அம்சமா தொகுத்து வழங்கியிருந்தாங்க ரிச்மண்ட் தமிழ்ச்சங்க நிர்வாக குழு.  


ஐந்தாறு பேர் கொண்ட குழுவா மேடை ஏறி விறு விறுன்னு சுழன்று ஆடிய பெண்கள் ரொம்பவே அசத்தினாங்க..  அவங்க கை காலை வெட்டின ஜோர்ல எனக்கு தான் வலது தோள்பட்டையில் கொஞ்சம் முணுமுணுன்னு வலி.  வீட்டுக்கு வந்தவுடனே மறக்காம Bengay தடவிட்டு தான் படுத்தேன்.  Sympathy வலியை நான் என்னிக்கும் குறைவா எடை போடறது கிடையாது.


மேடை ஏறிய அஞ்சே நிமிஷத்துல குறைஞ்சது 1000 கலோரியை அசால்ட்டா எரிச்ச அந்த பெண்களை பார்த்து நான் வயிறெரிஞ்சுது உண்மை தான்.  இட்லிப்பானை  மாதிரி என் ரெண்டு காதுலயும் அவங்க ஆட்டத்தை பார்த்து புகை வந்ததுக்கு காரணம் இல்லாம இல்லை.  சரி இதை ஏன் இப்படி ஊருக்கே சொல்லி ஷேம் ஷேம் ஆகணும்னு கேட்டீங்கன்னா அரிச்சந்திரனோட பக்கத்து வீட்டு மாமாவின் சின்ன வயசில்  தொலைந்து போன தங்கச்சி மகளா நான் இருப்பது தான் அதுக்கு காரணம்.  எவ்வளவு கசப்பான உண்மையா இருந்தாலும் மறைக்க முடியறதில்லை.


நீங்க அதிர்ச்சி  அடையாம இருப்பீங்கன்னா ஒரு விஷயத்தை இப்போ சொல்லுவேன்.  நானும்  கடந்த சில நாட்களா நாட்டிய வகுப்புகளுக்கெல்லாம் போயிட்டு வரேன்.  பரதம், குச்சிப்புடி மேல பரிதாபப்பட்டு விட்டுட்டு மேல்நாட்டு வழக்கமான ஸ்டெப் dance மற்றும் tango இப்படி சில விபரீத முயற்சிகள்ல இறங்கியிருக்கேன்.  இது என்னடா ரிச்மண்டுக்கு வந்த சோதனைன்னு நீங்க பதறுவது புரியாமல் இல்லை.  என்ன செய்யறது?  பக்கத்து உடற்பயிற்சி கூடத்துக்கு போன ஜென்மத்து கடன் பாக்கி மாதிரி வருஷா வருஷம் பெரிய தொகையா கட்டி என்னை டென்சன் ஆக்குவது என் கணவர் தான்.  நான் பாட்டுக்கு நிம்மதியா என் sofa உண்டு என் சேர் உண்டுன்னு வாழ்க்கையை ஓட்டறது அவருக்கு ஏதோ அஜீரணத்தை தருதுன்னு நினைக்கிறேன்.  பேமிலி membership எடுத்து கொடுத்து என்னை நல்வழியில் நடத்த முயற்சி செய்யறார்.  நான் சாதாரண வழியிலயே  நடக்க மாட்டேன்.  இதுல என்னை நல்வழில வேற நடத்தணும்னா சுலபமான காரியமா?


ஸ்டெப் டான்ஸ் வகுப்பறைக்குள்ள முதல் தடவை எட்டிப் பார்த்த போது வயித்துக்குள்ள இருந்த வெங்காய  ரவா தோசை மைக்கேல் ஜாக்சன் மாதிரி குதியாட்டம் போட்டது.   ‘காக்க காக்க கனகவேல் காக்க’ முணுமுணுத்துண்டே தான் அந்த அறைக்குள்ள நுழைஞ்சேன்.  என் பெற்றோர் பண்ண புண்ணியம் என்னை என்னிக்கும் கை விடாதுன்னு எனக்கு நானே பல முறை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டியிருந்தது.   அறைக்குள்ள நுழைஞ்சு  சுத்தி முத்தி பார்த்தா இன்முகத்தோட என்னை வரவேற்ற பத்து பெண்களுமே என்னை விட வயதில் மூத்தவங்க.  அப்படியே பூரிச்சு போய்ட்டேன். ஆஹா இவங்களே ஆடும் போது நாம ஆடிட மாட்டோமா?  இப்படி நினைச்சு சந்தோஷத்துல நெஞ்சை நிமிர்த்தி தைரியமா நின்ன  என்னை பார்த்து விதி கை கொட்டி சிரிச்சது அப்போ எனக்கு தெரியாம போச்சு.


எங்க நடன வகுப்பு ஆசிரியை அப்போ உள்ளே நுழைஞ்சார்.  ரொம்ப சிரித்த முகமா அமைதியா இருந்த அவரைப் பார்த்த உடனே ஒரு பெரிய டம்ளர் ஓட்ஸ் கஞ்சி குடிச்ச தெம்பு எனக்கு.  அந்த டீச்சரம்மா சஷ்டியப்தபூர்த்திக்கும் சதாபிஷேகத்துக்கும் நடுவுல எங்கயோ இருப்பார்னு என்னோட யூகம்.  


Dance ஆட ஆரம்பிக்கும் முன் கை  காலை நீட்டி stretch செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய டீச்சரம்மா முதல்ல குனிஞ்சு அவரவர் காலை தொட சொன்னார்.  ஹுக்கும்! அவர் பாட்டுக்கு சுலபமா சொல்லிட்டார். என்னை சுத்தி எல்லோரும் இடுப்பு வரை முழுசா மடங்கின போது என் முதுகு அரை இஞ்சுக்கு மேல மடங்குவேனா அப்படீன்னு மக்கர் பண்ணி மானத்தை வாங்கினதை பத்தி ஒரு நிமிஷமாவது அவர் யோசனை பண்ணியிருப்பாரா?.  கைக்கு எட்டாத தூரத்தில் இருந்த என் கால்களை ஏக்கத்தோட பார்க்கறதை தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?


அடுத்து இசைத்தட்டை போட்டு விட்டு நாங்க ஆட வேண்டிய steps ஐ  சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாங்க அந்த அம்மா.  முதல்ல வலது காலை ஒரு step முன் வச்சு உடனே பின் வைக்கணுமாம்.  என்னதிது?? சின்ன வயசிலேர்ந்து முன் வச்ச காலை எப்பவும் பின் வைக்கக் கூடாதுன்னு சொல்லி தானே  வளர்த்திருக்காங்க.  என்னடா இந்தம்மா தெளிவா இப்படி குழப்பறாங்களே ன்னு தீவிர யோசனையில் இருந்த நான் அடுத்த நாலு steps ஐ சரியா கவனிக்காம கோட்டை விட்டுட்டேன்.


அதோட பலன் இசைத்தட்டை ஓட விட்டுட்டு dance ஆரம்பிச்சப்போ  அவங்க வலது பக்கமா போனா நான் இடது பக்கமா போய் ஒரு பெரியம்மா மேல அடிக்கடி முட்டி மன்னிப்பு கேட்டது தான்.  தப்பு செய்தா மன்னிப்பு கேக்கறதுல எங்க குடும்பத்துல யாரையுமே மிஞ்ச முடியாது.  இதை நினைச்சு எனக்கு கொஞ்சம் பெருமை தான். சில நேரம் தப்பு செய்யறதுக்கு முன்னாடியே கூட உஷாரா மன்னிப்பை கேட்டுடுவோம்.  பிற்காலத்துல எப்பவாவது உதவுமே!  என் மேல மோதி மோதி வாழ்க்கைல ரொம்பவே அடிபட்டுட்ட அந்த பெரியம்மா வை அப்புறம் அந்த வகுப்புல ஏனோ பாக்கவே முடியலை. பார்த்தா கண்டிப்பா இன்னொரு முறை மன்னிப்பு கேட்டுடுவேன்.


ஒரு மணி நேரம் நாட்டியம் அப்படிங்கற பேருல என் இடுப்பை டிங்கு வாங்கின டீச்சரம்மா கடைசியில ஒரு பத்து நிமிஷம் யோகா பயிற்சி செய்ய சொல்லி என் வயித்துல பால் வார்த்தாங்க.  நல்லா காலை நீட்டி படுத்து  இழுத்து மூச்சு விடணுமாம்.  அம்மா பரதேவதா!  வாழ்க உன் குலம்!  வளர்க உன் தொண்டு! சொதப்பாம நான் செய்ய கூடிய ஒரு விஷயத்தை ஒரு வழியா சொன்னியேம்மா.  இது தான் சாக்குன்னு டக்குனு படுத்துட்டேன்.  இழுத்து மூச்சு விட விட கண்ணை அழுத்தி தூக்கம் வர மாதிரி வேற இருந்தது. சரியா அப்போ பார்த்து class முடிஞ்சுடுத்து.  பக்கத்துல இருந்த அந்த இடிபட்ட அம்மாவையே கை  கொடுக்க சொல்லி எழுந்து ஒரு வழியா நொண்டி நொண்டி வீடு வந்து சேர்ந்தேன்.


எதுக்கு இவ்வளோ பெரிய கதையை சொன்னேன்னா என்னை  போல நாட்டிய பேரொளிகளை எங்கப் பார்த்தாலும் நீங்கள் அவங்க முயற்சியை பாராட்டணும்னு தான். வாழ்க்கைல எவ்வளோ அடிபட்டு மேடை ஏறினாங்களோ அப்படீன்னு ஒரு நிமிஷம் நீங்க கருணையோடு அவங்கள பார்க்கணும் அப்படிங்கறது தான் என் ஆசை.


சமீப தமிழ்ச்சங்க கலை விழாவில் நடனமாடி கலக்கிய ஆண் பெண் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-மீனா சங்கரன்

Tuesday, July 20, 2010

அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்பு?

அதிர்ச்சி அடையாமல் கேட்பீங்கன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுவேன். எதுக்கும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தே கேளுங்க. நீங்கள் கர்ப்பிணியாகவோ, இருதய நோய் உடையவராகவோ இருந்தால் இந்தப் பதிவை மேற்கொண்டு படிக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ரெடியா? இதோ கேளுங்க.

நான் உல்லாச விடுமுறைப் பயணம் ஒன்றை முடித்து கொண்டு ஊர் வந்து சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆகியிருக்கும். ஜெட் லாக் என்று பேர் பண்ணி கொண்டு என் தோழிகளின் அருமையான நளபாகத்தை அனுபவித்து கொண்டிருந்த போது தான் அந்த போன் கால் வந்தது. வாரக்கடைசியில் நடக்கவிருக்கும் கோவிலுக்கு நிதி திரட்டும் நாட்டிய விழாவில் பங்கு கொள்ள முடியுமா என்று என்னை கேட்க ஊரில் நாட்டிய ஆசிரியையாக இருக்கும் என் தோழி தான் கூப்பிட்டாள்.

அச்சச்சோ! என்னங்க ஆச்சு? மூச்சு விட மறந்துட்டீங்களா? பரவாயில்லை ஆசுவாசப் படுத்திக்கோங்க. உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க. பரதக்கலைக்கும் எனக்கும் அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் உள்ள அதே தொடர்பு தான். (சும்மா ர்ய்மிங்கா இருக்கட்டுமேன்னு சொன்னேங்க. வேற ஒண்ணும் இல்லை..ஹி ஹி). அதுவும் நடிகை ஊர்வசியின் தங்கையா அப்படீன்னு பலரால் கேட்கப்பட்ட எனக்கு பரத நாட்டிய மேடைக்கு அழைப்பா? மேடை தான் தாங்குமா? அதுவும் சமீபத்தில் தான் ஒரு சின்ன பூகம்பம் வந்து உலுக்கி விட்டு போன எங்க ஊருக்கு இப்படி ஒரு கெட்ட நேரமா? அப்படியே ஆடி போயிட்டேன்.

தொலைபேசியின் அந்தப்பக்கத்தில் இருந்து மூச்சு பேச்சு இல்லாமல் போகவே பதறிப் போன என் தோழி அவசரமாக விஷயத்தை சொன்னாள். மேடை ஏற சொல்லி கூப்பிட்டது நாட்டியமாட இல்லையாம். முருகன் தெய்வானை கல்யாணம் பற்றிய நாட்டியத்தில் கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் போல வந்து மணமக்களை பூப்போட்டு ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு சின்ன ரோல் தான், பயப்பட வேண்டாம்னு சொன்னாள். அப்பாடா.....கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில் அடித்து கொண்டிருந்த என் பல்ஸ் நிதானப்பட்டு மூச்சு சீராகி முகம் தெளிய முழுசா முப்பது நொடி ஆச்சு. விஷயம் சொல்லிவிட்டு போனை வைக்கும் முன் மாலை ரிஹர்ஸலுக்கு கட்டாயம் வந்துவிடும்படி சொன்னாள்.

ரிஹர்ஸலா? இந்த ஜுஜுபி ரோலுக்கா? எப்படி யோசிச்சாலும் நின்னு பூப்போடுவதில் சொதப்ப முடியும்னு எனக்கு தோணலை. நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சூப்பர் பட்டு புடவை கட்டி ஜிலுஜிலுன்னு நகை போட்டு மேடை ஏறி கை நிறைய பூவெடுத்து தூவணும். அவ்வளவு தானே? இதுக்கு எதுக்கு ரிஹர்ஸல்? இப்படி நினைச்சு தான் கொஞ்சம் கொழுப்பும் மிச்சம் நமுட்டு சிரிப்புமா ரிஹர்ஸலுக்கு போனேன். என் ஆணவத்தை பாத்து கலியுக கிருஷ்ணன் கண் மறைவா நின்னு கை கொட்டி சிரித்திருப்பான் போல இருக்கு.

மேடை ஏறி நாலு தப்படி நடந்து சிரித்த முகத்தோடு எங்கே நிக்கணும்னு சொல்லி கொடுத்தாங்க. மேடை ஏறுவது வரை எல்லாம் சூப்பரா செய்தேன். பிறகு தான் எல்லாமே ரிப்பேர். பளிச்சுன்னு பத்து விளக்குக்கு அடியில் நின்னு சிரிக்கணும்னா எவ்வளவு கஷ்டம்னு தெரியணும்னா என்னை கேளுங்க, நான் சொல்லறேன். இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? கண்ணாடியில் பார்க்கா விட்டால் கூட என் முகம் அப்படித் தான் அப்போ இருந்திருக்கும்னு என்னால அடிச்சு சொல்ல முடியும். சரி அதை விடுங்க. நாலு தப்படி எடுத்து மேடைக்கு அந்தப் பக்கம் போகணுமே? நடக்க முடியாமல் பின்னி போயிருந்த கால்களோடு நின்றிருந்த எனக்கு அந்த சின்ன மேடை கிரிகெட் மைதானம் போல விரிஞ்சு தெரிஞ்சது. ஒருவழியா மேடைக்கு அந்தப்பக்கம் வந்தவுடன் அடுத்த பிரச்சனை பூப்போடும் வரை கைகளை என்ன செய்யறது? மொத்தத்துல அந்த அஞ்சு நிமிஷம் முடியறதுக்குள்ளே சொதப்பி தள்ளினேன். இதுல அக்கிரமம் என்னன்னா எனக்கு முன்னால் மேடையில் நடனம் ஆடிக்கொண்டு இருந்த பதினைந்து இருபது வயசு கலைஞர்கள் எல்லாம் நூறு பேர் முன்னாடி மேடையில் ஆடுவது என்னவோ அவர்கள் தினமும் செய்யும் டெக்ஸ்ட் மெசேஜிங் போல யதார்த்தமா, இயல்பா, அற்புதமா செய்தாங்க.

மேடை ஏறி பத்து பேர் முன்னாடி நின்று ஆடியோ, பாடியோ, நடித்தோ மக்களை மகிழ்விக்கும் perfoming artists அனைவருக்கும் என் தொப்பி தூக்கி வணங்கி (hats off ) விடைபெறுகிறேன்.