Saturday, September 25, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - நாலாவது பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம். பயணிகள் களைப்பாறும் தனி அறை.)

{முழங்கால் வரை தூக்கி கட்டியிருந்த பச்சையில் சிகப்பு கோடு போட்ட சின்னாளம்பட்டு புடவையில் ரெண்டு ஜப்பானிய சூமோ விளையாட்டு வீரர்கள் கால் நீட்டி உட்காரக்கூடிய அளவு பெரிய வட்ட சோபாவின் நடுவில் குஞ்சம்மா சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்கிறாள். அறைக்குள் 'குஞ்சம்மா, உனக்கு காப்பி போட தெரியுமாம்மா?' என்று கேள்வியுடன் வேகமாக நுழைந்த செந்திலின் பின்னால் மைதிலி ஓட்டமும் நடையுமாக வருகிறாள்.}

குஞ்சம்மா: யோவ், இன்னாத்துக்கு இந்த ஓட்டம் ஓடற? காந்தி தாத்தான்னு நெனப்பா ஒன் மனசுல? ஒங்க ஊட்டம்மா பாவம்யா. மலை மேலேந்து உருட்டி விட்ட கல்லாட்டமா எப்படி உருண்டுகிட்டு வருது பாரு. யக்கா, இப்படி குந்து நீ மொதல்ல.

மைதிலி: (மூச்சிரைக்க கையால் நெஞ்சை நீவி விட்டபடி) குந்தறேம்மா குந்தறேன்.

செந்தில்: அது ஒண்ணும் இல்லை குஞ்சம்மா. எனக்கு ரெண்டு வேளை காப்பி சாப்பிடலைனா உடம்பும் மூளையும் லேசா மரத்து போயிடும். இவ கிட்ட நாளை காப்பிக்கு இன்னிக்கே ஆர்டர் பண்ணியாகணும். அதான் உனக்கு காப்பி போட தெரியுமான்னு கேக்க ஓடி வரேன்.

குஞ்சம்மா: காப்பியா? அந்த கண்ணராவியயா நீங்கல்லாம் குடிக்கிறீங்க? அதுக்கு ஒரு கப்பு எலி மருந்த குடிச்சுட்டு போய் கட்டய நீட்டுங்களேன்.

செந்தில் மற்றும் மைதிலி: (அதிர்ச்சியோடு) என்னது?

குஞ்சம்மா: பின்ன காப்பீல இன்னாயா சத்திருக்கு? ஊர்ல என் தங்கச்சி குப்பம்மா இப்படி தான் காப்பி காப்பின்னு அலைஞ்சிகிட்டு குடிக்கும். இன்னா ஆச்சு? ஒரு நாள் சோர்வு சாஸ்தியாயி மயக்கம் போட்டு விழுந்திருச்சு. ஊட்டாண்ட இருக்கிற ஒரு நர்சம்மா வந்து பாத்து காப்பி குடிச்சு குடிச்சு குப்பு ஒடம்புல ரத்தத்துக்கு பதில கழனி தண்ணி தான் ஓடுதுன்னு சொல்லிட்டு போயிருச்சு.

மைதிலி: அய்யய்யோ அப்புறம்?

குஞ்சம்மா: அப்புறம் இன்னா, காப்பிய கடாசிட்டு நாங்க குடும்பத்தோட பாதாம்கீர்ல எறங்கிட்டோம். ஆனா எனக்கு இந்த பவுடர் பாதாம் பாலெல்லாம் தொண்டை குழிககுள்ள எறங்காதுக்கா. காலைல நல்லா ஒரு பிடி பாதாம் பருப்ப ஊற வச்சு, அரைச்சு, சூடா ஒரு தம்ளர் பால்ல கரைச்சி குடிக்கணும். இல்லைனாக்க ஒரு வேலை ஓடாது. நல்லா லண்டன் பாதாமா வாங்கி வச்சிருக்கா எனக்கு. அமரிக்கா ஆப்பரிக்கா பாதாம்லாம் சொத்தை. என் ஒடம்புக்கு ஆவாது.

மைதிலி: அதுக்கென்ன வாங்கிட்டா போறது குஞ்சம்மா.

செந்தில்: நாங்களாவது காப்பி குடிக்கலாமா குஞ்சம்மா? இல்ல உனக்கு அதுவும் ஒத்துக்காதா?

குஞ்சம்மா: தோ பாருயா. நெருப்பு சுடும்னு தான் சொல்ல முடியும். இல்ல குளுருது, நான் தீக்குளிச்சு தான் தீருவேன்னு நீ அடம் பிச்சா நா இன்னா செய்ய முடியும், சொல்லு? நீயே போட்டு குடிப்பென்னா அந்த கண்ணராவிய தாராளமா குடிச்சுக்க.

மைதிலி: குப்புவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டீங்கல்ல? இனிமே வீட்டுல யாருக்கும் காப்பி கிடையாது. நம்மளும் பாதாம்கீரே குடிக்கலாம்.......................... அய்யய்யோ ஏன் கால் செருப்பை கழட்டறீங்க?

செந்தில்: சும்மா உள்ள சங்கை ஊதி கெடுத்தானாம்னு கூட்ஸ் வண்டி வேகத்துல வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டுருந்ததை நானே அநியாயமா கெடுத்துண்டேனே, அதை மெச்சிக்க என் மூளையைநானே நாலு சாத்து சாத்திக்கலாம்னு பாக்கறேன்.

மைதிலி: ஏர்போர்ட்ல வந்து அச்சுபிச்சுன்னு ஏதாவது பண்ணாதீங்க.

குஞ்சம்மா: அக்கா, அண்ணே ஏதோ சொல்லிட்டு போவட்டும், விட்டிரு. ஒன் பாதாம்கீர் சூப்பரா இருந்திச்சுக்கா. அதான் தேர்வுக்கு கூட்டியார சொன்னேன். ஒரு நாலஞ்சு முக்கியமான விஷயத்த பேசிட்டோம்னா ஊட்டுக்கு கிளம்பிரலாம். எது இருக்கோ இல்லையோ, மொதல்ல எனக்கு ஒரு laptop குடுத்துருங்க என்ன? MAC இருந்திச்சுனா ரொம்ப நல்லது. இல்லேனா அதுக்குன்னு டென்சன் ஆவாதீங்க. PC வச்சிக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். இன்டர்நெட் ஸ்பீட் மட்டும் ஒரு 120 mbps இருக்கணும். தெனமும் Facebook ல தங்கச்சி குப்பு, என் ஆயா செல்லாயி, சித்தி மவளோட ஓரவத்தி ராசாத்தி எல்லாரையும் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன். அதனால காலையில நான் வேலைக்கு வர கொஞ்சம் லேட்டாவும். நாஷ்டா சாப்பிடாம எனக்காக குந்தியினு இருக்காதீங்க. நான் தப்பால்லாம் நெனைக்க மாட்டேன், சரியா? பாதாம் பால் பண்ணி ஒரு லோட்டாவுலஎனக்கு விட்டு வச்சிட்டு ஒங்க ஜோலியை பாத்துக்குனு போய்கினேயிருங்க. பால் சூடா இல்லேன்னா நோ டென்சன். நா வந்து சுட பண்ணிக்குவேன்.

செந்தில்: பாத்தியா மைதிலி? எவ்வளோ நல்ல மனசு குஞ்சம்மாவுக்குன்னு. அவளே சுட பண்ணிப்பாளாம்! உன் பிரார்த்தனைக்கு முருகன் செவி சாய்ச்சுட்டான் பாரு. குஞ்சம்மா இருக்கறப்போ இனிமே என்ன கவலை உனக்கு?

-தொடரும்

No comments: