Tuesday, December 19, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3

இந்த வாரக்கடைசியில் இந்தியாவை விட்டு கிளம்பணும். அதுக்குள்ள நிறைய கச்சேரிகளையும் , காண்டீன்களையும்  பார்த்திடணும்னு  சபதம் எடுத்து தினமும் ரெண்டு அல்லது மூணு கச்சேரி சபாக்களுக்கு  விடாமல் படை எடுக்கிறேன்.

Ola டாக்சி கம்பெனி ஆளுங்க காந்தி சிலைக்கு பக்கத்துல எனக்கும் சிலை எழுப்ப ஏற்பாடு பண்ணறாங்கன்னு ஒரு வதந்தி இருக்கு. இந்த ரெண்டு வாரத்தில், கொண்டு வந்த அந்நிய செலாவணில முக்காலுக்கும் மேல நான் ஓலா டாக்சிக்கு கொடுத்தேங்கறது உண்மை தான். அதுக்காக காந்திக்கு சமமா எனக்கு சிலை எழுப்பரதெல்லாம் அதிகமா படறது.  ஏதோ மனசுல பட்டதை சொல்லறேன். அப்புறம் அவங்க இஷ்டம்.

சென்னைல மக்கள் தொகை பெருக்கத்தை கண் கூடா பார்க்கணும்னா சாயந்திரம் நாலு மணிக்கு மேல ஏதாவது ஒரு கச்சேரிக்கு கிளம்பி வந்தா போதும். தெருவுக்கு தெரு ஒரு கச்சேரி இருந்தாலும் சாயந்திரம் நடக்கும் எல்லா கச்சேரிகளிலும் கும்பல் அலை மோதுவது ஆச்சர்யம் தான். 

நாலு நாள் முன்னாடி அபிஷேக் ரகுராம் அவர்களின் கச்சேரிக்கு போயிருந்தேன்.  இடம் கிடைக்காதோன்னு ரெண்டு மணி நேரம் முன்னாடியே போய் இடம் பிடிச்சது நல்லதா போச்சு. சீக்கிரமா போய் இடம் பிடிக்கற நல்ல பழக்கத்தை சின்ன வயசுல என் அப்பா கிட்ட தான் கத்துண்டேன்.  ராத்திரி எட்டு மணி ரயிலுக்கு காலை பத்து மணிக்கே ஸ்டேஷன் போய் உக்காந்து ப்லாட்போர்ம் பெருக்கி துடைப்பதை கண் கொட்டாம ஆசையா பார்க்கற குடும்பம் எங்களது தான்.

அபிஷேக்கோட கச்சேரிக்கு சீக்கிரம் போனது நல்லதா போச்சு. முதல்ல உட்காரும் சேரெல்லாம் காலி. அப்புறம் நடை பாதைல ஒரு இன்ச் இடத்தை கூட வேஸ்ட் பண்ணாம  மக்கள் உட்கார்ந்தாங்க. வேற வழி தெரியாம சபா ஆட்கள் ஒரு பெரிய ஜமக்காளத்தை மேடைக்கு கீழ விரிக்க ரெண்டு நிமிஷத்துல அதுவும் கூட full ஆகவே அடுத்து மக்கள் பாய்ஞ்சது மேடைக்கு ஏறும் படிக்கட் மேல தான். அபிஷேக் சாரோட  மடி மட்டும் தான் பாக்கி இருக்குன்னு ஆனதும் தான் கதவை ஒரு வழியா பூட்டினாங்க. ஸ்பைடர் மேன் மாதிரி சுவத்துல ஒட்டிக்க கூடிய திறமை மட்டும் மனிதனுக்கு இருந்திருந்தா இன்னும் நூறு பேராவது குறைஞ்சது அந்த அருமையான கச்சேரியை ரசிச்சிருக்கலாமேன்னு என்னால நினைக்காம இருக்க முடியலை.

நிறைய சபாக்களில் காலை 9 மணியிலேர்ந்தே கச்சேரிகள் ஆரம்பம். வெளிநாட்டிலேர்ந்து வரும்  நிறைய இளம் பாடகர்கள் இந்த நேரத்துல  தான் பாடறாங்க. ரொம்ப  அருமையா பாடற இந்த இளம் வித்வான்களின் திறமையை கேட்க நிறைய கும்பல் இல்லாதது வருத்தமா தான் இருக்கு. பகல் உணவை முடிச்சப்புறம் ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்து காபி குடிக்கற நேரமா தான் மக்கள் சபா கான்டீனை பார்த்து போறாங்கன்னு என்னோட அனுமானம். அவங்களை சொல்லியும் குத்தமில்லை. காப்பின்னா அது கான்டீன் காப்பி தான். ரொம்பவே சூப்பர். 

இப்பல்லாம் அடிக்கடி எனக்கு கனவுல குழிப்பணியாரமும்,  கீரை வடையுமா  வருது.  எப்பவாவது தான் வாழைப்பூ வடையும் வாழைக்காய் பஜ்ஜியும் வரும்.  எது வந்தாலும் வராட்டாலும் ஒவ்வொரு கனவிலும் கரெக்ட்டா ஆஜராவது சபா கேன்டீன் காப்பி தான்.  வாரக்கடைசியில் ஊருக்கு போன பிறகு என் குடும்பத்தினருக்கு அடுத்து நான் ரொம்ப மிஸ் பண்ணுவது இந்த கான்டீன் காப்பியா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

பாட்டை தலை ஆட்டி ரசிக்கறச்சே பேசாம கண்ணை மூடிக்கறது தான் நமக்கு நல்லது என்பதை இந்த இரண்டு வார அனுபவம் எனக்கு கற்று கொடுத்திருக்கு. இல்லைன்னா அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் நம்ம கிட்ட ராகம் பேரை கேட்க வாய்ப்பிருக்கு.  ஏதோ பத்துல நாலு ராகம் தட்டு தடுமாறி சொல்லிடுவேன்.  மிச்சது multiple choice ல ஜம்முனு விட்டுடுவேன். ராகம் தெரிஞ்சா மட்டும் தான் கண்ணை திறந்து வச்சுக்கறது.  ராகம் புரியலைனா கண் மூடி த்யானத்துல ஆழ்ந்திடுவேன்.  அனாவசியமா நம்மை யாரும் அப்போ தானே கேள்வி கேட்க மாட்டா. வாழ்க்கை நமக்கு எத்தனையோ பாடங்களை கத்து கொடுக்கிறது. அதுல இது ரொம்ப முக்கியமான ஒண்ணு அப்படிங்கறது என்னோட அபிப்ராயம். 

ரெண்டு வாரமா என்னை தொடர்ந்து வந்து என் கூட கச்சேரி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறி இந்த கச்சேரி கலாட்டா தொடரை இத்துடன் முடித்து கொண்டு விடை பெறுகிறேன்.

- மீனா சங்கரன்
வர்ஜீனியா, அமேரிக்கா

4 comments:

Anonymous said...

Very nice Meena. Immensely enjoyed your field reports.

-Ravi

Anonymous said...

Awesome Meena����
Arthi

Mythili Sivakumar said...

I m motivated to attend atleast one Kacheri if not for the music but for the coffee. Semma promotion😂

Meena Sankaran said...

Thanks so much Ravi and Arthi. Very happy that you both enjoyed this blog. :-)

Mythili, a good cup of coffee is as good a reason to attend a kutcheri as any so go for it. Just be sure to let me know about your experiences at the sabha. :-)