Thursday, December 16, 2010

முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி??

டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.

தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே சூப்பரா ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி விட்டு டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?

ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.

சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?

கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.

ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.

முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!

ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.

என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.

எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?

------------------------------------

This was written for and published in the RTS blogpage earlier this year. Hope you enjoy it!

Tuesday, November 23, 2010

சித்ரகுப்தா, எடு உன் லெட்ஜரை!

அறிவிப்பு - இது வழக்கம் போலான நகைச்சுவை பதிவு அல்ல. மனிதத்தோல் போர்த்திய சில மிருகங்களின் அரக்கத்தனத்தில் மனமொடிந்து நான் எழுதிய பதிவு தான் இது. ஆரோக்யமான இருதயம் இருந்தால் மட்டுமே இதை படிக்கவும்.

----------------------------------------

அரக்கத்தனமும் அசுரத்தனமும் உலகத்தில் தலைவிரித்து ஆடும் போது கடவுள் அவதாரம் எடுத்து உலகத்தை காப்பார் என்பது நம் புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்தி சொல்கிற ஒரு விஷயம். இன்டர்நெட் வலைப்பூ மூலமாக இத்தனை நாட்களாக இனிமையான விஷயங்களை மட்டுமே பொழுது போக்குக்காக படித்து கொண்டிருந்த எனக்கு நேற்று ஒரு பலமான சாட்டை அடி. மனிதாபிமானம், மனித நேயம் - இதெல்லாம் வெறும் பைத்தியக்கார கனவுகளோ என்று எண்ண வைக்கும் அதிபயங்கரமான அசுரத்தனம் ஒன்றை நேற்று வலைப்பூ மூலம் முதல் தடவையாக பார்த்து தெரிந்து கொண்ட எனக்குள் ஏதோ உறைந்து போன மாதிரியான உணர்வு.

பாசமான உறவுகள், இனிமையான நண்பர்கள் மற்றும் அருமையான சமூக தோழமைகள் - இது தான் நான் சாதாரணமாக வாழும் ஒரு dettol போட்டு அலம்பிய உலகம். நான் பார்க்க உதித்து, அஸ்தமிக்கும் அதே சூரியனின் கீழ் மனிதத்தோல் போர்த்திய பல அசுரர்கள் நடமாடுவது நம்ப விரும்பாமல் நான் இத்தனை நாட்கள் மறுத்திருந்த ஒரு உண்மை. ஆனால் இன்று கண்கட்டவிழ்ந்து ஒரு முட்டாளின் சொர்கத்திலிருந்து வெளியே வந்து விட்ட நான் அதிகம் உணர்வது சீற்றமா, துக்கமா, அருவருப்பா, வெறுமையா? எனக்கு சொல்ல தெரியவில்லை.

பெண்களுக்கு சுதந்திரமும், கல்வியும், வேலை வாய்ப்புக்களும் பெருகி இருக்கும் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் பல இடங்களில் இன்னும் பல இளம் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படுகிறார்கள் என்ற செய்தியை ஜீரணிக்க முடியாமல் கஷ்டப்படுவது முட்டாள்தனமென்றால் ஆமாம், நான் முட்டாள் ராஜ்யத்தின் மகாராணி தான். அதிலும் மூன்று, நாலு, ஐந்து வயது பச்சிளம் குழந்தைகளை அவர்களோட தாய் தந்தை மற்றும் உறவினர்களே சிகப்பு விளக்கு பகுதிகளில் ஒரு சில நூறு ரூபாய் தாட்களுக்காக விற்று விடுவதை கேட்டு இதயக்கூடு காலியாகி ஸ்தம்பித்து நிற்பது பைத்தியக்காரத்தனமென்றால் ஆமாம் நான் சட்டையை கிழித்து கொண்டு அலையாத ஒரு பைத்தியக்காரி தான்.

மூக்கில் சளி வந்தால் தானாக துடைக்க தெரியாத மூன்று வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தார் ரோட்டில் தடுக்கி விழுந்தால் சராய்த்து ரத்தம் வரும் கால் முட்டியை பார்த்து பயத்தில் வீறிடும் நாலு வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தன் பெயரையே முழுசாக இன்னும் எழுத தெரியாத ஒரு பச்சிளம் ஐந்து வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? குண்டு திராட்சை கண்களால் பீதியுடன் ஏறிட்டு பார்க்கும் குழந்தையை பலாத்காரம் பண்ணக் கூட ஒரு மனிதனுக்கு மனம் வருமா? சிவன் தலையில் ஊற்றெடுத்து பொங்கி ஓடும் கங்கை நதியில் சாக்கடை நீரை கொட்டக் கூட ஒரு மனிதனால் முடியுமா?

ஒரு மனிதன் அல்ல, பல மனிதர்களால் முடியும் என்பதை நேற்று பார்த்த செய்தியில் தெரிந்து கொண்டேன். ஒரு மூன்று வயது பெண் குழந்தையை gang rape செய்து, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி ரயில் தண்டவாளத்தில் குப்பை போல தூக்கி விட்டெறிந்து விட்டு போன மனிதர்கள் எந்த நரகத்திலிருந்து தப்பி வந்த அசுரர்கள்? இவர்கள் வாழும் இந்த பூமியில் இன்னும் மழை எப்படி பெய்கிறது? சுனாமி இவர்களை எல்லாம் இழுத்து கடலில் மூழ்கடிக்காமல் ஏன் இன்னும் விட்டு வைத்தது? அந்த குழந்தையை பெற்று விற்ற தாய் தந்தை ஏன் இன்னும் பஸ்பமாகவில்லை? ஆஸ்பத்ரியில் உயிருக்கு அந்த குழந்தை போராடும் போது பச்சிளம் குழந்தைகளிடம் தங்கள் ஆண்மையை காண்பிக்கும் இந்த அராஜகர்களேல்லாம் எப்படி உயிரோடு நடமாடலாம்? இந்த அவலைப் பெண்கள் சுவாசிக்கும் அதே காற்றை இந்த அரக்கர்களும் எப்படி சுவாசிக்கலாம்?

என் கேள்விகளுக்கு பதில் எங்கே? நம் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் சொல்படி பார்த்தால் இந்த அசுரர்களை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்திருக்க வேண்டும். அவர் எங்கே? ஒ மறந்து விட்டேன். அரசன் அன்று கொல்லுவான் ஆனால் தெய்வம் நின்று தான் கொல்லுமோ? என்னால் முடியாது. எனக்கு அந்த பக்குவமும் இல்லை, பொறுமையும் இல்லை. இதோ என் கற்பனை உலகத்தில் நான் இன்றே வழங்கும் தீர்ப்புகள்.

நான் - சித்ரகுப்தா, விலகிக்கொள். இன்று ஒரு நாள் உன் லெட்ஜர் மற்றும் நாற்காலி என் கையில்.

சித்ரகுப்தன் - அப்பாடி! ஒரு நாள் எனன, ஒரு மாசம் வேணும்னாலும் நீயே இந்த வேலையை பாரு. (ஓட்டமாய் ஓடுகிறார்)

சித்ரகுப்தன் நாற்காலியில் நான் - யமதர்மா, இன்று பூமியில் ஒரு சில மனிதர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது. நீங்களே பயந்து எருமையில் ஏறி ஓட்டம்பிடிக்கும் அளவு அசுரத்தனம் எல்லாம் அங்கு நடக்கிறது. அவர்கள் முன் சூரபத்மனும், நரகாசுரனும் கமர்கட் திருடிய சிறு பிள்ளைகளாக தோன்றுகிறார்கள்.

யமதர்மன் - உனது பரிவுரை எனன மீனா?

நான் - பெண்களையும், சிறு குழந்தைகளையும் சொல்லொணா கொடுமை செய்யும் மானிடப் பதர்கள் அனைவருக்கும் இந்த நரகம் பற்றாது. புதுசாக ஒன்று நிர்மாணிக்க ஏற்பாடு செய்யுங்கள். எண்ணைக் கொப்பரைக்கு பதில் அங்கு கொதிக்கும் எண்ணைக் கடல் ஒன்றை நிறுவுங்கள். இந்தப் பாவிகளை அந்த கரையோரம் நிறுத்தி, கொதிக்கும் எண்ணை அலை அலையாய் பொங்கி அடித்து அதில் அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெந்து, புண்பட்டு, கதறி சாக வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் அசுரத்தனமாய் தீண்டிய அவர்கள் கைகளை வெட்டி விட்டு பின்பு தான் எண்ணை கடல் கரையோரம் நிற்க வைக்க வேண்டும்.

யமதர்மன் - செய்து விடுகிறேன் மீனா. வேறெதாவது கோரிக்கை உண்டா?

நான் - இன்னும் ஒன்றே ஒன்று மன்னா. இவர்களிடம் கொடுமைப்பட்ட அனைவரின் மனத்திலும் அந்த கொடூரமான நினைவுகளை அகற்றி அவர்கள் மகிழ்ச்சியோடு மற்ற நாட்களை பூமியில் கழிக்க நீங்கள் அருள வேண்டும்.

யமதர்மன் - இல்லை. அது எனக்கு அப்பாற்பட்டது மீனா. நினைவுகளை அகற்றி மகிழ்ச்சியோடு வாழ்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. உனது பரிவுரைகளை உடனே அமுலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன். இனி, நீ போய் சித்ரகுப்தனை சபைக்கு அனுப்பு.

நான் - அப்படியே ஆகட்டும் காலனே. (வெளியேறுகிறேன்)

Tuesday, October 26, 2010

ஆ............எங்கே என் இட்லி???!!!!

குஞ்சம்மா கூப்பர்டிநோவுக்கு என்னிக்கு போனாளோ அன்னிக்கே என் கற்பனை குதிரையும் நேரா மாட்டாஸ்பத்திரிக்கு போய் அட்மிட் ஆகி coma ல படுத்துடுத்து. ஏன், என்ன காரணம்னு எல்லார மாதிரி நீங்களும் கேட்டீங்கன்னா அவங்களுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும் சொல்லுவேன். ஏன்னா குதிரைக்குன்னு தனியா ஆஸ்பத்திரி கட்டாம விட்டுட்டாங்களே!!!!!!!

சரி சரி தொடப்பத்தை கீழே போடுங்க. குஞ்சம்மா கதையோட ஆறாவது பாகம் எங்க எங்கன்னு என்னை பார்க்கும் போதெல்லாம் ஊர் மக்கள் ஏக்கமா கேக்கும் போது (நம்பறதும் நம்பாததும் உங்க கைல)வேற என்ன சொல்லி நான் சமாளிக்கறது? என் கற்பனை குதிரையோட பரிதாபமான நிலையை அவங்களுக்கு விவரமா சொல்ல நான் என்ன லூசா? சரி சரி...இந்த கேள்விக்கு பதில் தேடி அனாவசியமா உங்களோட பொன்னான நேரத்தை வீணாக்குவானேன்?

இப்ப விஷயத்துக்கு வருவோம். போன வருஷம் நான் வறுத்த மிக்சரை கொஞ்சம் சுவை பார்த்திருந்தீங்கன்னா உங்களுக்கு எங்க ஊர் ஊத்தப்பம் கதை பத்தி நல்லா தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு இதோ ஒரு குட்டி அறிமுகம். போன வருஷம் எங்கூர் தமிழ் பெண்கள் புதுசா கட்டுப்படும் இந்து கோவிலுக்கு நிதி திரட்ட அன்னலட்சுமி ஓட்டல்காரனே மூக்கில் விரல் வைக்கறா மாதிரி பொட்டிக்கடை வச்சு, ஆயிரக்கணக்கில் ஊத்தப்பம் வார்த்து, அதை சாம்பார்ல குளுப்பாட்டி ஜொள்ளோழுகும் பல வட இந்தியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் வித்து கல்லாப்பெட்டியை ரொப்பினாங்க. இந்த வருஷமும் நம்ம கலாசாரத்தை விட்டு குடுக்காம சாம்பாரை காமிச்சே எல்லோர் பான்ட் பாக்கெட்ல கை விட்டு பர்சை எடுக்கறதுன்னு தீர்மானம் பண்ணி மறுபடி போட்டோம் பொட்டிக்கடையை. ஒரே ஒரு குட்டி வித்யாசம் தான்.

ஊர் பெண்கள் எல்லாருமா சேர்ந்து காந்தித் தாத்தாவின் நினைவு நாளை ஒட்டி 'வாய் மூடா பட்டினி' ன்னு ஒரு புதிய ஸத்யாக்ரஹ மறியல் போராட்டத்தை தொடங்கி இந்த வருஷம் ஊத்தப்பத்தை வெற்றிகரமா கவுத்துட்டாங்க. 'இனியொரு ஊத்தப்பம் வார்க்க மாட்டோம், இது சத்தியம்' அப்படீன்னு எல்லார் நெத்தியிலும் சுலோகம் எழுதி ஒட்டிக்காத குறை ஒண்ணு தான். எங்கூர் தாய்க்குலத்தின் இந்த சினத்தோட வீரியத்தை தாங்க முடியாம வீட்டில் எல்லாக் கணவர்களும் பயந்து போய் தோசைக்கல்லையும், கரண்டியும் தலையை சுத்தி தூக்கி போட்டுட்டாங்கன்னு கேள்வி. 'ஊத்தப்பம் போயே போச்சு' ன்னு பகவத்கீதை புஸ்தகத்து மேல அடிச்சு சத்தியம் பண்ணினப்பரம் தான் புடவையை இழுத்து சொருகிண்டு பொட்டிக்கடைக்குள்ள நுழையவே நுழைஞ்சாங்க எங்க பெண்கள்.

ஊத்தப்பத்துக்கு டாடா காமிச்சிட்டு போர்ட்ல இந்த வருஷம் நாங்க எழுதின புது மெனு - இட்லி, மெதுவடை, சாம்பார், சட்னி, சாம்பார் வடை மற்றும் தயிர் வடை. சரவணபவன் chef ஐ அழ வைக்கணும்னு கங்கணம் கட்டிண்டு களத்துல இறங்கின எங்க பெண்களோட கை மணத்துல ஊரே வெங்காய சாம்பார்ல மணத்துது அந்த இரண்டு நாட்களும். சிசிங் சிசிங் ன்னு கல்லாப்பெட்டி சத்தம் போட போட உற்சாகமா வேலை நடந்துக்கிட்டிருந்த அந்த இரண்டாம் நாள் தான் அது நடந்தது.

நானும் என் தோழியும் ஆளுக்கு கிட்டத்தட்ட நூறு இட்லி வீட்டில் செய்து கொண்டு போய் விற்பனைக்கு பொட்டிக்கடையில் கொடுக்க வேண்டிய நாள் அது தான். நாலு நாளுக்கு முன்னாடியே போய் பொன்னி புழுங்கல் அரிசி, முழு உளுந்து எல்லாம் புதுசா வாங்கி 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' ரேஞ்சுல எங்க கடமையை செய்ய நாங்க தயாரா இருந்தோம். முதல் நாள் மாவை அரைத்தும் ஆச்சு. சில பேர் அவங்க அரைச்சு முடிச்சு திரும்பரத்து முன்னாடி அவங்க வீட்டு மாவு பொங்கி வழியறது ன்னு அலுத்துக்கறதை நான் கேள்விப்பட்டிருக்கேன். அதென்னவோ எங்க ரெண்டு பேருக்கும் அந்த மாதிரி பிரச்சனை என்னிக்குமே இருந்தது இல்லை.

போருக்கு போன கணவன் திரும்புவானான்னு வழி மேல் விழி வைச்சு பார்க்கும் மனைவி மாதிரி நாங்களும் முதல் நாள் அவங்கவங்க வீட்டு இட்லி மாவு அண்டாவை ஏக்கத்தோட ரொம்ப நேரம் பார்த்துகிட்டு உக்காந்திருந்தது தான் மிச்சம். மாவு மேல் நோக்கி நகர்றா மாதிரி எனக்கு தெரியலை. எனக்கு வயத்துல புளி கரைக்க ஆரம்பிச்சது அப்ப தான். அண்டாவுக்கு குளுருதோன்னு ஒரு சந்தேகத்துல ஒரு போர்வையை எடுத்து அதுக்கு இதமா போர்த்தி விட்டேன் முதல்ல. வீட்டில் எல்லாரும் சூடு தாங்காம உடம்பில் போட்ட முக்கால் வாசி துணியை உருவி விட்டுட்டு நெத்திக்கண்ணை திறந்து என்னை சுட்டுண்டே கைவிசிரியை தேடி அலயறதை கண்டும் காணாம நான் வீட்டு சீதோஷன (heater setting) பெட்டியை இன்னும் பெருசா தட்டி விட்டு கூட பார்த்தேன். ஊஹூம்......சூட்டுல தலை மயிர்க்கால் பொசுங்கினதே தவிர மாவு பொங்கரத்துக்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை.

கஷ்டத்துல கடவுள் கிட்ட முறையிடறது காலம் காலமா நடக்கற ஒரு விஷயம் தானே. கூவி அழைத்தால் அந்த குமரன் குரல் குடுக்காமலா போயிடுவான்? இப்படி நினைச்சு நான் அவன் கிட்ட புலம்பிண்டே தூங்கி அலாரம் வைத்து முழிச்ச போது காலை மணி நாலு. உயிரை கைல பிடிச்சுகிட்டு வந்து அண்டாவை திறந்து பார்த்ததும் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதென்னவோ உண்மை தான். சந்தோஷத்துல நம்ம அவ்வைப்பாட்டி மாதிரி கணீர்னு சத்தமா 'பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா' ன்னு பாட துடிச்ச என் குரலை விடிகாலை தூக்கத்துல எழுப்பினா பக்கத்து வீட்டுக்காரங்க விளக்குமாத்தால விளாசுவாங்க அப்படீங்கற ஒரே பயம் தான் தான் தடுத்து நிறுத்தினது. எப்படியோ சந்தோஷக்கண்ணீர் கண்ணை மறைக்க முதல் 28 இட்லியை அடுப்பில் ஏத்தின போது மணி காலை நாலரை.

நமக்கு ஒரு வழியா நல்ல காலம் பொறந்திடுத்துன்னு நம்பிக்கையோட ஒரு கப் காப்பி கலந்து குடிச்சிட்டு தெம்பா மறுபடி அடுத்த ஈடு இட்லி வைக்க பானையை திறந்தா அந்த கால சிவாஜி படத்துல அவர் ரெண்டு கையாலே நெஞ்சை பிடிச்சிண்டு தடுமாறி சாயறா மாதிரி ஒரு அதிர்ச்சி சீன். பானைக்குள்ள ஒரு இட்லியை கூட காணும். என்னோட 28 இட்லியும் எங்க போச்சு? ஒ......ஒரு நிமிஷம்.....இதென்ன இட்லி தட்டுல ஏதோ வழ வழன்னு ஒட்டிண்டு இருக்கு? ஆ...............என் இட்லி. மொட்டை மாடில கார்த்தால காயப் போட்ட கூழ் வடாம் மாதிரி இதென்ன இப்படி சப்பையா இருக்கு? அந்த பிரம்மன் வெத்தலையை வெள்ளையா படைச்சிருந்தான்னா இப்படி தான் இருந்திருக்குமோ?

துக்கம் தொண்டையை அடைக்க பின்னாலே சலனம் கேட்டு நான் திரும்பி பார்த்தா எங்க வீட்டு நாய் யாரு தனக்கு போட்டியா வீட்டுல ஊளையிடரான்னு பார்த்திட்டு போக உள்ள வந்திருந்தது. அந்த விடிகாலை நேரத்துல என் துக்கத்தை பகிர்ந்துக்க ஆளில்லாமல் என் நாயை கட்டிண்டு ஒ ன்னு கொஞ்சம் அழுது முடிச்சேன். ஒரு மூச்சு அழுது மனசை கொஞ்சம் தேத்திண்டு ஒரு tray யில் என் சப்பை இட்லிகளை (ஈசா இது என்ன சோதனை???) வரிசையா அடுக்கி அதை மறைக்க ஒரு அம்பது குண்டு ரவா இட்லியை செய்து set up பண்ணி மறைச்சு வச்சேன்.

ஒரு வழியா பொழுது விடிஞ்சது. டான்னு ஒன்பது மணிக்கு ஒரு தோழர் வந்து என் இட்லிகளை பொட்டிக்கடைக்கு எடுத்துப் போக வந்தார். நான் மட்டும் இப்படி கொஞ்சம் கூடுதலா வறுத்த ரவை மாதிரி மாநிறமா இல்லாமல் வெள்ளையாய் இருந்தேன்னா நிச்சயம் எனக்கு அன்னிக்கு வெக்கத்துல காது மடல் சிவந்திருக்கும் ன்னு நான் பரிபூரணமா நம்பறேன். ஒரு வழியா அவர் கிட்ட இட்லிகளை அனுப்பிட்டு நானும் பின்னாடியே அங்க போக தயாராகி கிட்டிருந்த போது தான் என் தோழி போன் செய்தாள். அமெரிக்கா மிலிடர்யில bomb தயார் பண்ணனும்னா தன்னை தான் ரெசிபி கேட்கணும்னு வாயில துப்பட்டாவை பொத்திண்டு அழுதா அவ. அவளோட இட்லிக்கு எதிரா உலகத்துலேயே எந்த ஆயுதமும் இருக்காதுன்னு அவளோட கணவர் அடிச்சு சொல்லறதா வேற சொல்லி வருத்தப்பட்டா. 'போனா போறது, விட்டுத்தள்ளு' ன்னு நான் என் சோக சப்பைக்கதையை அவளோட பகிர்ந்திண்டு சமாதானப்படுத்தினேன்.

அடுத்த பிரச்சனை ஊர் மக்களை எந்த முகத்தோட போய் பாக்கறது? இட்லி சகோதரிகள்னு கிண்டலடிச்சு கை கொட்டி சிரிக்க மாட்டாளா? பாம்பே படத்துல மனீஷா கொய்ராலா போட்டுக்கறா மாதிரி அழகா முக்காடு போட்டுண்டு பொட்டிக்கடைக்கு போகலாமான்னு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் யோசனை செய்து பின்னாடி அதை கைவிட்டுட்டு 'சத்யமேவ ஜெயதே'ன்னு தைர்யமா முகத்திரை இல்லாமையே அங்க போய் பார்த்தா என்ன ஆச்சர்யம்! எங்களோட அவமானச் சின்னமான ஒரு இட்லி கூட பொட்டிக்கடையில காணும். விசாரிச்சதுல கல்லோ சப்பையோ ஒரு இட்லியை கூட மிச்சம் வைக்காம வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடாங்க எங்க ஊர் வட இந்தியர்கள்னு தெரிஞ்சுகிட்டோம். நாங்க பேசிட்டு இருக்கும் போதே ஒரு தட்டு இட்லியோட எங்களை கடந்து நடந்து போன ஒரு சர்தார்ஜியை 'அண்ணா'ன்னு பாசமலர் ஸ்டைல்ல கட்டிக்கணும்னு தோணித்து ஆனா ஏனோ செய்யலை. திடீர்னு லேசான மனசுடன் நானும் என் தோழியும் வடை தட்ட ஆரம்பிச்சோம்.

Tuesday, October 5, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - ஐந்தாவது பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கூப்பர்டினோவில் உள்ள செந்தில், மைதிலி தம்பதியினரின் வீடு

மைதிலி: வலது கால் எடுத்து வச்சு உள்ள வா குஞ்சம்மா.

செந்தில்: ஏன் ஆர்த்தி கரைச்சு உள்ள கூப்பிடலையா? அந்த குறை எதுக்கு உனக்கு? அதையும் பண்ணிடேன். நான் வேணும்னா 'கௌரி கல்யாணம் வைபோகமே' பாடவா?

குஞ்சம்மா: யக்கா, வூட்டு வாசல்ல வச்சு அய்யாவ பாட்டெல்லாம் பாட சொல்லாதே. அவரு பேசினாவே செங்கலை சொரண்டரா மாதிரி இருக்கு. பாடினா நான் ரொம்ப டென்சன் ஆயிருவேன்.

மைதிலி: சும்மாவா உங்க பிரெண்ட்ஸ் உங்கள 'லொள்ளாதிபதி' ன்னு கூப்பிடறாங்க? இப்போ அனாவசியமா லொள்ளு பண்ணி குஞ்சம்மாவை டென்சன் பண்ணாதீங்க சொல்லிட்டேன். நீ வா உள்ள போகலாம் குஞ்சம்மா.

செந்தில்: வீட்டுக்கு அதிபதி தான் கனவாப் போச்சு. சரி தான் ஒரு இத்துனூண்டு அவுட் அவுசுக்காவது அதிபதியாகலாம்னா அதுக்கும் வழியில்லை. லொள்ளாதிபதியா நான் இருக்கறதுல உனக்கு என்னம்மா பிரச்சனை? சரி சரி உள்ள போவோம் வாங்க.
--------------

(பத்து நாட்களுக்கு பின்)

செந்தில்: மைதிலி, நான் சொல்றேனேன்னு நீ தப்பா நெனைக்காதே. பத்து வருஷமா ஜிம்முக்கு போயும் இளைக்காதவள் என் மனைவின்னு நான் கூப்பர்டிநோவுக்கே உன்னை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன். நம்ம ஊரு படத்துல கிராமத்து தேவதைன்னு உக்கிரமான ஒரு அம்மன் சிலையை காமிப்பாங்களே, அது மாதிரி எப்படி கம்பீரமா இருப்ப நீ! இப்ப என்னடான்னா காதும் கண்ணும் பஞ்சடைச்சு போய் இப்படி ஆயிட்டியேம்மா!

மைதிலி: நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க. இந்த குஞ்சம்மாவுக்கு என்னிக்கு ஜெட் லாக் போய் என்னிக்கு வேலை செய்ய போறாளோ தெரியலையே? கல்யாணமாகி இந்த பதினஞ்சு வருஷத்துல உங்களுக்கு கூட நான் இவ்வளவு சிசுரிஷை செஞ்ச நியாபகமில்லைங்க.

செந்தில்: (மெதுவாக) செஞ்சிருந்தாத்தானே நியாபகம் வர்றதுக்கு.

மைதிலி: என்னது?

செந்தில்: அது ஒண்ணுமில்லை. குஞ்சம்மா எள்ளுன்னா நீ எண்ணையா நிக்கறையே அதை நினைச்சு நான் பெருமைப்படறேன்.

மைதிலி: (கோபமாக) கிண்டலா உங்களுக்கு?

செந்தில்: சரி சரி கோவிச்சுக்காதே. இவளுக்கு நீ வேலை செய்யவா வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கான்கார்ட் கோவில் முருகனை அப்படி வேரோடு பிடுங்கின? இது சரி வராது மைதிலி. நேத்து என்ன ஆச்சுன்னு சொன்னேனா? ஆபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தா நீ இல்லை, கடைக்கு போயிட்ட. எனக்கு ஒரே தலை வலி. சரி தான் குஞ்சம்மாவை கெஞ்சி ஒரு கப் காப்பி போட்டு தர சொல்லுவோம்னு தேடினா எங்க இருந்தா சொல்லு பார்ப்போம்?

மைதிலி: எங்க?

செந்தில்: பக்கத்து வீட்டுல Mars லேந்து புதுசா போன வாரம் குடி வந்திருக்காங்களே MRS8462 குடும்பம் அவங்க வீட்டு பிள்ளைக்கு தலை முடி வெட்ட உதவி பண்ண இவ போயிட்டா.

மைதிலி: இவளுக்கு தலை முடியெல்லாம் வெட்ட தெரியுமா?

செந்தில்: இவகிட்ட கத்தரிய குடுத்தால் கதை கந்தல் தான். இவ ஒண்ணும் முடியெல்லாம் வெட்டலை. அந்த வீட்டு பிள்ளைக்கு ரெண்டு தலை இருக்கே. ஒரு தலையை யாராவது அசைக்காம பிடிச்சா தான் இன்னொரு தலையில் முடி வெட்ட முடியுமாம். நம்ம வீட்டு மதர் தெரிஸா தன் பிடி உடும்பு பிடின்னு பெருமையா சொல்லிட்டு அங்க போய் உக்காந்து அரட்டை அரங்கம் நடத்திகிட்டு இருந்தா. நான் போய் அவங்க கதவை தட்டி 'குஞ்சம்மா எனக்கு காப்பி போட்டு தரியா'ன்னு கேட்டதுக்கு அவங்க பிரிஜ்ஜை தொறந்து ஒரு தம்ளர் ஜூஸ் விட்டு கொடுத்து 'காப்பியெல்லாம் வேணாம், ஒடம்புக்கு இது தான் குளிர்ச்சி' ன்னு கூசாம சொல்லறா.

மைதிலி: இவளை எப்படி வேலை செய்ய வெக்கறதுன்னு எனக்கு தெரியலையே! ராத்திரி சமையலுக்கு இவ கொஞ்சம் காய் வெட்டி தந்து பாத்திரம் அலம்பி போட்டா நல்லா இருக்கும் ஆனா இந்த பூனைக்கு யார் மணி கட்டறது?

-தொடரும்

Saturday, September 25, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - நாலாவது பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம். பயணிகள் களைப்பாறும் தனி அறை.)

{முழங்கால் வரை தூக்கி கட்டியிருந்த பச்சையில் சிகப்பு கோடு போட்ட சின்னாளம்பட்டு புடவையில் ரெண்டு ஜப்பானிய சூமோ விளையாட்டு வீரர்கள் கால் நீட்டி உட்காரக்கூடிய அளவு பெரிய வட்ட சோபாவின் நடுவில் குஞ்சம்மா சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்கிறாள். அறைக்குள் 'குஞ்சம்மா, உனக்கு காப்பி போட தெரியுமாம்மா?' என்று கேள்வியுடன் வேகமாக நுழைந்த செந்திலின் பின்னால் மைதிலி ஓட்டமும் நடையுமாக வருகிறாள்.}

குஞ்சம்மா: யோவ், இன்னாத்துக்கு இந்த ஓட்டம் ஓடற? காந்தி தாத்தான்னு நெனப்பா ஒன் மனசுல? ஒங்க ஊட்டம்மா பாவம்யா. மலை மேலேந்து உருட்டி விட்ட கல்லாட்டமா எப்படி உருண்டுகிட்டு வருது பாரு. யக்கா, இப்படி குந்து நீ மொதல்ல.

மைதிலி: (மூச்சிரைக்க கையால் நெஞ்சை நீவி விட்டபடி) குந்தறேம்மா குந்தறேன்.

செந்தில்: அது ஒண்ணும் இல்லை குஞ்சம்மா. எனக்கு ரெண்டு வேளை காப்பி சாப்பிடலைனா உடம்பும் மூளையும் லேசா மரத்து போயிடும். இவ கிட்ட நாளை காப்பிக்கு இன்னிக்கே ஆர்டர் பண்ணியாகணும். அதான் உனக்கு காப்பி போட தெரியுமான்னு கேக்க ஓடி வரேன்.

குஞ்சம்மா: காப்பியா? அந்த கண்ணராவியயா நீங்கல்லாம் குடிக்கிறீங்க? அதுக்கு ஒரு கப்பு எலி மருந்த குடிச்சுட்டு போய் கட்டய நீட்டுங்களேன்.

செந்தில் மற்றும் மைதிலி: (அதிர்ச்சியோடு) என்னது?

குஞ்சம்மா: பின்ன காப்பீல இன்னாயா சத்திருக்கு? ஊர்ல என் தங்கச்சி குப்பம்மா இப்படி தான் காப்பி காப்பின்னு அலைஞ்சிகிட்டு குடிக்கும். இன்னா ஆச்சு? ஒரு நாள் சோர்வு சாஸ்தியாயி மயக்கம் போட்டு விழுந்திருச்சு. ஊட்டாண்ட இருக்கிற ஒரு நர்சம்மா வந்து பாத்து காப்பி குடிச்சு குடிச்சு குப்பு ஒடம்புல ரத்தத்துக்கு பதில கழனி தண்ணி தான் ஓடுதுன்னு சொல்லிட்டு போயிருச்சு.

மைதிலி: அய்யய்யோ அப்புறம்?

குஞ்சம்மா: அப்புறம் இன்னா, காப்பிய கடாசிட்டு நாங்க குடும்பத்தோட பாதாம்கீர்ல எறங்கிட்டோம். ஆனா எனக்கு இந்த பவுடர் பாதாம் பாலெல்லாம் தொண்டை குழிககுள்ள எறங்காதுக்கா. காலைல நல்லா ஒரு பிடி பாதாம் பருப்ப ஊற வச்சு, அரைச்சு, சூடா ஒரு தம்ளர் பால்ல கரைச்சி குடிக்கணும். இல்லைனாக்க ஒரு வேலை ஓடாது. நல்லா லண்டன் பாதாமா வாங்கி வச்சிருக்கா எனக்கு. அமரிக்கா ஆப்பரிக்கா பாதாம்லாம் சொத்தை. என் ஒடம்புக்கு ஆவாது.

மைதிலி: அதுக்கென்ன வாங்கிட்டா போறது குஞ்சம்மா.

செந்தில்: நாங்களாவது காப்பி குடிக்கலாமா குஞ்சம்மா? இல்ல உனக்கு அதுவும் ஒத்துக்காதா?

குஞ்சம்மா: தோ பாருயா. நெருப்பு சுடும்னு தான் சொல்ல முடியும். இல்ல குளுருது, நான் தீக்குளிச்சு தான் தீருவேன்னு நீ அடம் பிச்சா நா இன்னா செய்ய முடியும், சொல்லு? நீயே போட்டு குடிப்பென்னா அந்த கண்ணராவிய தாராளமா குடிச்சுக்க.

மைதிலி: குப்புவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டீங்கல்ல? இனிமே வீட்டுல யாருக்கும் காப்பி கிடையாது. நம்மளும் பாதாம்கீரே குடிக்கலாம்.......................... அய்யய்யோ ஏன் கால் செருப்பை கழட்டறீங்க?

செந்தில்: சும்மா உள்ள சங்கை ஊதி கெடுத்தானாம்னு கூட்ஸ் வண்டி வேகத்துல வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டுருந்ததை நானே அநியாயமா கெடுத்துண்டேனே, அதை மெச்சிக்க என் மூளையைநானே நாலு சாத்து சாத்திக்கலாம்னு பாக்கறேன்.

மைதிலி: ஏர்போர்ட்ல வந்து அச்சுபிச்சுன்னு ஏதாவது பண்ணாதீங்க.

குஞ்சம்மா: அக்கா, அண்ணே ஏதோ சொல்லிட்டு போவட்டும், விட்டிரு. ஒன் பாதாம்கீர் சூப்பரா இருந்திச்சுக்கா. அதான் தேர்வுக்கு கூட்டியார சொன்னேன். ஒரு நாலஞ்சு முக்கியமான விஷயத்த பேசிட்டோம்னா ஊட்டுக்கு கிளம்பிரலாம். எது இருக்கோ இல்லையோ, மொதல்ல எனக்கு ஒரு laptop குடுத்துருங்க என்ன? MAC இருந்திச்சுனா ரொம்ப நல்லது. இல்லேனா அதுக்குன்னு டென்சன் ஆவாதீங்க. PC வச்சிக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். இன்டர்நெட் ஸ்பீட் மட்டும் ஒரு 120 mbps இருக்கணும். தெனமும் Facebook ல தங்கச்சி குப்பு, என் ஆயா செல்லாயி, சித்தி மவளோட ஓரவத்தி ராசாத்தி எல்லாரையும் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன். அதனால காலையில நான் வேலைக்கு வர கொஞ்சம் லேட்டாவும். நாஷ்டா சாப்பிடாம எனக்காக குந்தியினு இருக்காதீங்க. நான் தப்பால்லாம் நெனைக்க மாட்டேன், சரியா? பாதாம் பால் பண்ணி ஒரு லோட்டாவுலஎனக்கு விட்டு வச்சிட்டு ஒங்க ஜோலியை பாத்துக்குனு போய்கினேயிருங்க. பால் சூடா இல்லேன்னா நோ டென்சன். நா வந்து சுட பண்ணிக்குவேன்.

செந்தில்: பாத்தியா மைதிலி? எவ்வளோ நல்ல மனசு குஞ்சம்மாவுக்குன்னு. அவளே சுட பண்ணிப்பாளாம்! உன் பிரார்த்தனைக்கு முருகன் செவி சாய்ச்சுட்டான் பாரு. குஞ்சம்மா இருக்கறப்போ இனிமே என்ன கவலை உனக்கு?

-தொடரும்

Friday, September 17, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - மூன்றாவது பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

{வரவேற்ப்பு அறையின் நடுவில் மைதிலி, செந்தில் தம்பதியினர் அமெரிக்காவுக்கு வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் ஆட்களுக்கு முன்னால் கை கட்டி பணிவாக நிற்கிறார்கள்.}

மைதிலி: உங்க எல்லோருக்கும் வணக்கம். விமான பிரயாணம் முடிஞ்சு நீங்க ரொம்ப களைச்சிருப்பீங்கன்னு தெரிஞ்சு தான் உங்களுக்கு இந்த ஐஸ் பாதாம்கீர் கொண்டு வந்திருக்கேன். எல்லோரும் முதல்ல இதை கொஞ்சம் குடிங்க (ஒரு பெரிய கூலரையும் பேப்பர் கப்புகளையும் விநியோகம் செய்கிறாள்).

செந்தில்: அடேங்கப்பா ஐஸ் போதுமா? முறைக்காதே, பாதாம்கீர்ல ஐஸ் போதுமான்னு தான் கேட்டேன்.

மைதிலி: வீட்டுக்கு போய் எப்படா படுப்போம்னு அலுப்பா இருக்கா உங்களுக்கு? எங்களை தேர்ந்தேடுத்தீங்கன்னா உங்களை வீட்டுக்கு கூட்டிகிட்டு போக Honda Podpuller பறக்கும் காரை கொண்டு வந்திருக்கோம். ஆட்டோ போல அலுங்கல் குலுங்கல் எல்லாம் இல்லாம சுகமா பறந்து போயிடலாம். அது மட்டுமா? பிரயாண களைப்பு போக இன்னிக்கு ராத்திரி நீங்க "சூசூசீசீ" கம்பனியின் புது கண்டுபிடிப்பான 'மிதக்கும் மெத்தையில்' படுத்து தூங்கலாம். புது டிசைனர் விரிப்பெலாம் கூட போட்டு வச்சுட்டு வந்திருக்கேன். உங்க களைப்பெல்லாம் பஞ்சா பறந்து போயிடும்.

செந்தில்: உங்களுக்கு வேணும்னா இவ நல்லா கால் கூட பிடிச்சு விடுவா. அதை சொல்ல மறந்துட்டயேம்மா மைதிலி.

மைதிலி: (செந்திலின் காதுக்கு மட்டும் கேட்கும் படி) வீட்டுக்கு வாங்க உங்களை நான் பிடிக்கிறேன். எங்கே இப்ப ஒரு அம்பது தோப்புக்கரணம் போட்டு இவங்களை சந்தோஷப்படுத்துங்க பார்ப்போம்? ஒண்ணு, ரெண்டு.....

(சத்தமாக) கால் தானே, பிடிச்சு விட்டா போச்சு! அப்புறம் நான் வெஜிடரியன் புட் மணக்க மணக்க நல்லா சமைச்சு போடுவேன். உங்களுக்கு அதிக சிரமம் குடுக்க மாட்டேன். சமைக்கும் போது பாதி பாத்திரம் நானே தேயச்சுடுவேன். மிச்சத்தை நீங்க தேய்ச்சா போதும். துணிமணி தோய்ப்பதை பத்தி கவலைப்படாதீங்க. இதோ என் வீட்டுக்காரர் நல்லா தோய்ப்பார். அவர் தோச்சது போக மீதி ஏதாவது இருந்தா நீங்க தோச்சா போதும். உங்களுக்கு அதுவும் ரொம்ப அலுப்பாக இருந்தா சொல்லுங்க. நாங்களெல்லாம் வாரத்துக்கு ஒரே ஒரு துணியையே போட்டுக்க பழகிக்கிறோம். ஒண்ணும் பிரச்சனையே இல்லை.

செந்தில்: ஐயோ கப்படிக்குமே? சரி பரவாயில்லை விடு. சென்ட் அடிச்சுக்குவோம்.

ஏஜன்சி அதிகாரி: உங்கள் நேரம் முடிந்து விட்டது. அடுத்ததாக சுஷ்மா, சுரேஷ் குடும்பத்தை அரங்கத்தின் நடுவில் வந்து பேச அழைக்கிறோம்.

மைதிலி: (அவசர அவசரமாக) அறை சுவர் அடைக்கறா மாதிரி ரூமுக்கு ஒரு பெரிய டி.வி இருக்கு எங்க வீட்டுல. கிட்டத்தட்ட 500 channel ல படங்கள் வரும். வாரத்துல மூணு நாள் விடுமுறை தருவோம். நல்ல டிசைனர் துணிமணி வாங்கி ........

செந்தில்: போதும் வா. விட்டா நீ சொத்தையே இந்த வேலையாளுக்கு எழுதி வச்சிடுவியோன்னு எனக்கு இப்போ பயம்மா இருக்கு. அந்தப் பக்கம் போய் தரைல உக்காரணும் போல இருக்கு. வா போகலாம். ஆ...

மைதிலி: என்ன ஆச்சு?

செந்தில்: என்ன ஆச்சா? என் இடுப்பு கடோத்கஜன் கடுச்சு துப்பின கரும்பு சக்கையாட்டம் ஆச்சு. பிள்ளையாருக்கே தோப்புக்கரணம் போடாம டிமிக்கி கொடுத்துட்டு இருந்த என்னை இன்னைக்கு இப்படி டிங்கு வாங்கிட்டீங்களே! (இடுப்பை பிடிச்சுகிட்டு முனகறார்)

ஏஜன்சி அதிகாரி: வாழ்த்துக்கள், நீங்கள் தேர்ந்தெடுக்க பட்டிருக்கீங்க. உங்களை தேர்ந்தெடுத்த பணியாளர் குஞ்சம்மா உங்களை தனியாக நேர்முக தேர்வு செய்ய ரெடியாக இருக்கிறார். என்னோடு இந்த பக்கம் வாங்க.

மைதிலி: (சந்தோஷத்தில் கண் பணிக்க) எனக்கு தெரியும் என் முருகன் என்னை கைவிட மாட்டான்னு. வேலும் மயிலும் தான் நமக்கு துணை. வேகமா வாங்க, குஞ்சம்மாவை அனாவசியமா வைட் பண்ண வைக்க கூடாது. ஏன் நின்னுட்டீங்க?

செந்தில்: குஞ்சம்மாவை அனாவசியமா வைட் பண்ண வைக்க கூடாதா? என்ன அநியாயம்! தினம் ஆபீஸ் போயிட்டு வந்து நான் ஒரு கப் காப்பிக்கு ஒரு யுகம் வைட் பண்ணறேனே, அது மட்டும் பரவாயில்லையா? எனக்கு ஒரு சந்தேகம் மைதிலி. அது எப்படி தினம் சாயந்திரம் ஆறு மணி ஆச்சுன்னா சொல்லி வச்சா மாதிரி உனக்கு உன் தோழிங்க கிட்ட இருந்து புடலங்காய் மாதிரி நீள நீளமா போன் கால்கள் வருது?

மைதிலி: அது வேற ஒண்ணும் இல்லைங்க. எங்க லேடீஸ் க்ளப்ல சமீபத்துல 'கணவர்களுக்கு தினம் ரெண்டு கப் காப்பி அவசியமா?" அப்படீன்னு பட்டிமன்றம் நடத்தினோம். நடுவர் 'அவசியம் இல்லை' ன்னு தீர்ப்பு கொடுத்திட்டார். அதான் எல்லோரும் இப்ப கொஞ்சம் பிசியா 'கணவர் காப்பி கட்' அப்படீன்னு ஒரு petition தயார் பண்ணி கூப்பர்டினோ பெண்கள்கிட்ட கையெழுத்து வாங்கிகிட்டிருக்கோம்.

செந்தில்: லேட்டா வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டு இருந்தது. அதுக்கும் ஆப்பு வச்சிட்டீங்களா? சரி மசமசன்னு நிக்காதே. குஞ்சம்மா கிட்ட முக்கியமா ஒரு விஷயம் கேக்கணும் எனக்கு.

(விறுவிறுன்னு நடந்தபடியே செந்தில்) குஞ்சம்மா.........காப்பி போட தெரியுமாம்மா உனக்கு?

-தொடரும்
__________________

PS: This was originally published in the RTS blogpage in Dec 2009.

Sunday, September 12, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - இரண்டாம் பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

ஒலிபரப்பியில் ஆங்கில அறிவிப்பு: ஜெட் ஏர்வேஸ் விமானம் 985 வந்து இறங்கியுள்ளது. பிரயாணிகள் கஸ்டம்ஸ் ..........

மைதிலி: (பரபரப்புடன்) அதோ வராங்க அதோ வராங்க. நீங்க கொஞ்சம் பேனரை தூக்கி பிடிங்க. (கண் மூடி முணுமுணுக்கிறாள்) காக்க காக்க கனக வேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க...........

செந்தில்: நீ வேணா பாரு, உன் தொல்லை தாங்காம அந்த முருகன் கூடிய சீக்கிரத்துல ஒரு நாள் ஓடி போய் லேக் டாஹோ (Lake Tahoe) பனிமலைல ஏறி ஐசாண்டவனா உக்காந்துக்க போறார். பின்ன என்ன? வீட்டுல பாத்ரூம் flush பண்ணலை, ஏசி ரிப்பேர், கார்பெட்ல கறை - இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க' ன்னு அவரை நோண்டினா பாவம் அவரும் தான் என்ன செய்வார், சொல்லு?

மைதிலி: இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! Benz car வாங்கி தருவோம்னு பேனர் எழுத சொன்னா அதை கோட்டை விட்டுட்டீங்க. அந்த குடும்பத்தை பாருங்க Hawaaii cruise டிக்கெட் வாங்கி தருவோம்னு அம்சமா பேனர் எழுதிண்டு வந்திருக்காங்க. நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே சொல்லிட்டேன் நீங்க தான் இனி நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மா.

சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி அதிகாரி: (கையில் பெரிய மைக்ரோபோனில்) வணக்கம் பெண்கள் மற்றும் சாதுஆண்களே (Ladies and gentlemen)! சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது. இன்னும் சற்று நிமிடத்தில் உங்கள் தேர்வு தொடங்கி விடும். எங்கள் வேலையாட்கள் அறையின் இந்த பக்கத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்வார்கள். ஒவ்வொரு குடும்பமாக வந்து அவர்கள் முன் பேனருடன் 5 நிமிடங்களுக்கு நின்று உங்களை பற்றிய சில வார்த்தைகள் பேசலாம். பணிவோடு கைகட்டி நிற்பது, தோப்புக்கரணம் போடுவது, மரியாதையுடன் பேசுவது போன்ற விஷயங்கள் தேர்வில் உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் நேரம் முடிந்தவுடன் அறையின் ஓரத்தில் போய் தரையில் உட்காரவும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலையாளுடன்ஸ்பெஷல் நேர்முக தேர்வுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

செந்தில்: அடடா முக்கியமானதை கொண்டு வர மறந்து போயிட்டேனே!

மைதிலி: என்னத்தை மறந்துட்டு வந்தீங்க?

செந்தில்: சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்டி. நிச்சயம் வேலைக்கு ஆள் கிடைச்சிருக்கும் நமக்கு. அவங்கல்லாம் நாற்காலி நாமெல்லாம் தரையா? சபாஷ் சபாஷ்.

மைதிலி: ஷ்ஷ்..யார் காதுலயாவது விழப்போறது, சும்மா இருங்க. அப்புறம் அவங்க முன்னாடி நிக்கரச்ச கொஞ்சம் இடுப்பு வளைஞ்சு பதவிசா நில்லுங்க, சரியா?

ஏஜன்சி அதிகாரி: செந்தில், மைதிலி குடும்பம் இப்பொழுது அரங்கத்தின் நடுவில் வந்து பேசலாம்.

மைதிலி: நம்பள தான் கூப்பிடறாங்க, வாங்க போகலாம். இதோ வந்துட்டோம்...(பீ.டி. உஷா போல ஓடுகிறாள்)

-தொடரும்

PS: This was originally published in the RTS blogpage in Dec '09.

Saturday, August 28, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - முதல் பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

உங்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான விஷயம்: நான்கு மாதம் முன்பு வெள்ளைவீட்டு சட்ட சபையில் காங்கரெஸ் ஆசீர்வதித்த ஒரு புது மனுவின் படி பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவது, துணி தோய்ப்பது போன்ற வீட்டு வேலைகள் செய்வதற்கு அயல் நாட்டிலிருந்து வேலையாட்களை கூப்பிட்டு கொண்டு வரலாம். இந்த மனுவிற்கு அமெரிக்காவில் வந்து குடிபுகுந்துள்ள இந்திய மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

மைதிலி: இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு விமானம் வந்து இறங்க. சீக்கிரமா வாங்க. க்யூவுல முதல் இடம் கிடைச்சா தானே நம்பள யாராவது தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கு? ஆமாம் அந்த ஏஜன்சி பேரு என்ன சொன்னீங்க?

செந்தில்: சபீனா ஸர்ப் சர்வதேச ஏஜென்சி. இவங்க இந்தியாவோட எல்லா மாநிலத்திலையும் நல்லா அலசி வீட்டு வேலைக்கு ஆட்கள் திரட்டி நேர்முகத்தேர்வேல்லாம் பண்ணி இப்போ அமெரிக்காவுக்கு அழைச்சுகிட்டு வராங்களாம். வேலையாட்கள் ப்ளேன்ல வந்து இறங்கினப்பரம் ஏர்போர்ட்ல அந்த காலத்து சுயம்வரம் போல ஏதோ நடக்குமாம். வேலையாட்கள் எல்லா குடும்பங்களையும் நல்லா அலசி பல கேள்விகள் கேட்டு அவங்களுக்கு பிடிச்ச ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுப்பாங்களாம் . நம்பள தேர்ந்தெடுத்தாங்கன்னா ஏஜன்சி கிட்டே கையெழுத்து போட்டுட்டு நம்ம அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டு வேலைக்கு ஆளை அழைச்சுகிட்டு போக சொல்லியிருக்காங்க.

மைதிலி: புண்ணியவான்கள் அந்த ஏஜன்சிகாரங்க. கடவுள் கடாக்ஷம் என்னிக்கும் இருக்கும் அவங்களுக்கு. மனசு குளிர்ந்து சொல்லறேங்க.

செந்தில்: சரி சரி போதும் வா. ரொம்ப குளிர்ந்தா ஜன்னி வந்திட போகுது. விட்டா சபீனா ஸர்ப் ஏஜென்சி பெயர்ல Trust Fund ஆரம்பிச்சு ஏழை பாழைங்களுக்கு தர்ம காரியங்களே பண்ணுவ போல இருக்கே.

மைதிலி: நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க? போன வாரம் ஜிம்முல நாலு பேர் என்னை மடக்கி 'மொத்தத்துல நீ உருண்டையா இருக்கிறப்போ எப்படி உன் கை மட்டும் தனியா இப்படி இளைச்சு போயிருக்கு' ன்னு கேட்டானுங்க. பாத்திரம் தேய்ச்சு தேய்ச்சு தான்னு பளிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.

செந்தில்: ஆமாம், கிளம்பறத்துக்கு முன்னாடி பூஜை அறைல அவ்வளவு நேரம் கண்ணை மூடி என்ன தான் வேண்டிகிட்ட?

மைதிலி: வேறென்ன, யாராவது ஒரு வேலயாளுக்காவது நம்ம குடும்பத்தை பிடிக்கணுமேன்னு கவலை எனக்கு. நம்மளை யாராவது தேர்வு செய்தாங்கன்னா இன்னிக்கு சாயந்திரமே Concord முருகன் கோவிலுக்கு வந்து பதினோரு தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிகிட்டு இருக்கேன். அந்த முருகன் மேல தான் பாரத்தை போட்டிருக்கேன். வேலும் மயிலும் தான் நமக்கு துணை.

செந்தில்: விட்டா நீ ஏர்போர்ட்ல உட்கார்ந்து கந்த சஷ்டி கவசமே பாடிடுவ. நீ கொஞ்சம் நேரம் இந்த பேனரை தூக்கிண்டு வரியா? எனக்கு கை வலிக்கறது. பொணம் கணம் கணக்கறது இது.

மைதிலி: அபசகுனமா இப்படி அச்சுபிச்சுன்னு பேசாதீங்க. அந்த பேனரை இப்படி என்கிட்டே குடுங்க. __________________அய்யய்யோ முக்கியமானதை எழுத விட்டுட்டீங்களே? நம்மள தேர்ந்தெடுத்தா Benz கார் வாங்கி தருவோம்னு எழுத சொன்னேனே. இதுல காணுமே. என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே!

செந்தில்: உனக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியல? நான் வேணும்னா இனிமே பாத்திரம் தேய்க்கிறேன். எனக்கு Benz வாங்கி கொடு முதல்ல. சரி சரி பேசினது போதும் வா. நல்ல காலம் க்யூவில் ரொம்ப பேர் இல்லை. வீட்டை விட்டு சீக்கிரம் கிளம்பினது நல்லதா போச்சு.

(தொடரும்)

ps: This was written and published originally in the RTS blogpage in October 2009.

Tuesday, August 24, 2010

ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்!

சென்னையில் ஒரு பத்து பெண்கள் பொது இடத்தில் கூடும் போது இப்படி பேசித்தான் நீங்க கேட்டிருப்பீங்க - "போத்தீஸ்ல இப்போ ஆடி தள்ளுபடி நடக்குதாம். நீ போக போறியா?", "தங்க மாளிகையில் இந்த வாரம் ஆர்டர் குடுத்தால் கூலி சேதாரமே கிடையாதாம். டீவியில் ஒன்பது மணி செய்தி வாசிக்கற பத்மஜா போட்டுக்கற மாதிரி கழுத்தை ஒட்டி மாங்காய் மாலை இன்னிக்கு போய் ஆர்டர் பண்ண போறேன். நீயும் வரியா?" மற்றும் "நேத்தி கோலங்கள் சீரியல் பாத்தியா? இப்படி கூட ஒரு அநியாயம் நடக்குமா? பாவம் இந்த அபியும் தொல்காப்பியனும்". இதெல்லாம் சகஜமா கோவில், கல்யாணம் போன்ற பொது இடங்களில் நம்ம காதில் விழும் சுவாரசியமான பேச்சுகள்.

எங்க ஊர் ரிச்மணட் தமிழ் பெண்கள் எங்கேயாவது கூடினால் பேச்சு கொஞ்சம் வித்யாசமாக போகும். "புளியோதரை நாலு கப்பா அஞ்சு கப்பா?", "கேசரியா சர்க்கரை பொங்கலா?", "பத்து பவுண்ட் வெங்காயம் வெட்ட முடியுமா இல்லேன்னா ஆறு கட்டு கொத்தமல்லி நறுக்க முடியுமா?" இந்த ரேஞ்சுல தான் எல்லோரும் பேசுவாங்க. என்னடா எல்லாமே சாப்பாட்டு விஷயமா இருக்கேன்னு யோசனை பண்ணறீங்களா? சாப்பாடு தான் எங்களுக்கு ரெண்டாவது மதம். சர்டிபிகேட் இல்லாத சமையல் கலை வல்லுனர்களான எங்க ஊர் பெண்கள் சமூக உணர்வு அதிகம் உள்ளவங்க. வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க. கோவிலில் சஷ்டியா? பெருமாளுக்கு கல்யாணமா? தோழியின் பெண்ணோட அரங்கேற்றமா? எடு பேப்பரையும் பென்சிலையும். விறுவிறுன்னு மெனு போடுவதும், போன் மேல் போன் போட்டு ஆட்கள் திரட்டி இரு நூறு அல்லது முன்னூறு பேருக்கு சமைப்பதும் எங்க ஊர் பெண்களுக்கு காலை காப்பி கலப்பது போல அல்வா வேலை. இவர்களின் இந்த திறமையை எப்படி மிஞ்சுவதுன்னு அடுத்த ஊர்க்காரங்க ரூம் போட்டு யோசிப்பதா கேள்விப்பட்டேன்.

உதாரணத்துக்கு இந்த வாரக்கடைசியில் எங்க ஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு நிதி திரட்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்க இருக்கு. கல்யாண சத்திரம் போல் உள்ள பெரிய ஹாலில் பல குட்டி கடைகள் போட்டு இட்டிலியிலிருந்து கச்சோரி வரைக்கும் சுட சுட உணவு வகைகளை பரப்பி, ஜொள்ளு விட்டுக் கொண்டு வரும் அமெரிக்கர்களுக்கு விற்று (கோவிலுக்கு நிதி திரட்டி) இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி. இதில் நம்ம தமிழ் மக்கள் நடத்தப்போகும் கடை ஊத்தப்பம்/குழிப்பணியாரம்/இட்டிலி கடை.

கடந்த பத்து நாட்களாகவே இதுக்கு ரெடியாக எங்கூர் பெண்கள் மும்முரமா வேலை செஞ்சுட்டு வராங்க. ரெண்டு நாள் முன்னாடி பால் வாங்க கடைக்கு போனேன். காய்கறி செக்ஷன் பக்கம் நாலு பெண்கள் நிற்பதும் அதில் ஒரு பெண் பேசுவதும் காதுல விழுந்தது. "நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க." மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!

எங்க ஊருக்கு வர்றதா இருந்தீங்கன்னா இதெல்லாம் கேட்டு பயந்து போய் டிக்கெட்டை ரத்து செஞ்சுராதீங்க. சமூக சேவை மாதிரியே விருந்தோம்பலிலும் எங்க பெண்களை மிஞ்சவே ஆள் கிடையாது. உதாரணத்துக்கு புதுசா ஊருக்கு ஒரு தமிழ் குடும்பம் வந்திருப்பது தெரிஞ்சால் எங்க வரவேற்ப்பு குழு உடனே போய் அவங்களை பார்த்து பேசி வரவேற்று அப்படியே சில பல முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டு வருவாங்க. அந்த வீட்டு பெண்ணிடம் எத்தனை பெரிய குக்கர் இருக்கு, மூணு தோசையாவது வார்க்க கூடிய மாதிரி பெரிய தோசைக்கல் இருக்கா, ஒரு எழுபத்தைந்து பேருக்காவது சாம்பார் வைக்க தோதான பாத்திரம் இருக்கா - இது போல அத்தியாவசியமான விஷயங்களை தெரிந்து கொண்டு, இதெல்லாம் இருந்தால் மிகப் பெரிய வரவேற்ப்பு கொடுத்து விட்டு வருவாங்க. இப்ப சொல்லுங்க. எப்ப வரீங்க எங்க ஊருக்கு?

நீங்க புதுசா கல்யாணம் ஆனவரா? உங்க மனைவி செய்யும் சமையல் அவங்க அளவுக்கு அம்சமா இல்லையா? வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் ரசவாங்கியும் கனவா போச்சேன்னு கவலைப்படரீங்களா? டேக் இட் ஈசி. எங்க ஊருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி வையுங்க. ஒரே மாசம் தான். கல்யாண சமையலுக்கே கான்ட்ராக்ட் எடுக்க தயாராகிடுவாங்க உங்க மனைவி.

தூக்கத்தில் கூட இல்லாத கரண்டியை பிடித்து ஐந்நூறு மைசூர்பாக் கிண்டும் ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?

-----
ps: This was published in the RTS blogpage in October 2009.

Tuesday, August 10, 2010

சரித்திர நாயகி நானா சாவித்திரியா?

உலகத்தில் எல்லா மனைவிகளும் அவங்க வாழ்க்கையில் ஒரு முறையாவது கிடைக்குமான்னு ஏங்கும் ஒரு வாய்ப்பு எனக்கு வந்த போது நான் வேண்டாம்னு முகம் திருப்பிக்கிட்டேன்னு நினைச்சால் எனக்கே என்னை நினைத்து பெருமையா இருக்கு. என்னுடைய இந்த பெருந்தன்மையை பற்றி கேள்விப்பட்டாங்கன்னா நம்ம ஊரு 'அமர்சித்ர கதைகள்' கம்பெனிகாரங்க 'சத்தியவான் சாவித்ரி' கதையோடு சேர்த்து என் கதையையும் வெளியிட்டுருவாங்க. அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் புத்தகமா வெளி வந்து நம்மூர் நண்டு சிண்டெல்லாம் படிக்க நேர்ந்தால் கணவர் மனம் நோகுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல வந்து இந்த கதையை சொல்லறேன்.

மூணு வருஷத்துக்கு முன் நடந்த இது ஒரு உண்மை சம்பவம்.

---------------------------------------------------------------------------------

இந்தியாவுக்கு கோடைகால விடுமுறைக்கு கிளம்ப எல்லா ஆயத்தங்களும் செய்தாச்சு. நாளை விடிந்தா பெட்டி படுக்கையை தூக்கி கொண்டு விமானதளத்துக்கு போக வேண்டியது தான். இந்த நேரத்தில் நீங்களா இருந்தா என்ன செய்வீங்க? நிம்மதியா படுத்து தூங்கி கனவில் அபிமான நடிகர் 'ஹாரிசன் போர்ட்' கையை குலுக்கி விட்டு எழுந்து ஊருக்கு போய் சேருவீங்க. அதை செய்யாமல் விட்டு விட்டு பொழுது போகலைன்னு நான் வாசல் பக்கம் குழந்தைகளுடன் விளையாட போனதை விதின்னு சொல்லாமல் வேறெப்படி சொல்லறது?

முப்பது வயசில் மூணு வயசு குழந்தையின் ஆர்வத்தோட ஸ்கூட்டர் விட்டு விளையாடினால் என்ன நடக்குமோ அது தான் நடந்தது. தார் ரோட்டில் தலை குப்புற விழுந்து வலது கண் பக்கம் பயங்கர அடி. வீங்கிய முகத்துக்குள்ளே புதைஞ்சு போன கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்த போது எதிரில் கலங்கலாய் தெரிஞ்சது வீடு. ஒரு இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தில் ஆடி ஆடி நடக்கும் சினிமா ஹீரோ போல் ரத்த சிவப்பான கண்களோடு ஆடிக்கொண்டே வீட்டுக்குள் வந்த என்னை பார்த்து பதறி போன என் கணவர் என்னை பக்கத்து ஆஸ்பத்திரியின் எமர்ஜென்சி அறைக்கு அழைத்து போக அங்கே ஆரம்பிச்சது அவருடைய கெட்ட நேரம்.

கரு ரத்தம் கட்டி போய் வீங்கியிருந்த என் முகத்தை பார்த்த நர்சுகளும் டாக்டர்களும் கோபத்தில் திரும்பி என் கணவரை பார்த்த பார்வையில் இருந்த உக்கிரத்தை பாண்டிய நாட்டு சபையில் நடந்த திருவிளையாடல் காட்சியில் சிவன் "நக்கீரா என்னை நன்றாக பார்" அப்படீன்னுதன் நெற்றிக்கண்ணை கோபத்தில் திறந்த போது கடைசியாக பார்த்த ஞாபகம். அவங்களோட கோவத்தின் காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்த என் கணவரை வெளியே உட்கார சொல்லி விட்டு ஸ்கேன் செய்யும் ரூமுக்கு என்னை அழைத்து போய் அனுதாபத்தோடு பார்த்த நர்சை கண்டு எனக்கும் குழப்பம் தான். ஆனால் மேலே யோசனை பண்ண முடியாமல் முகம் பத்து விசில் வந்த ப்ரெஸ்டீஜ் குக்கர் போல வலியில் தெறித்தது.

ஒரு வழியாக ஸ்கேன் முடிந்து டாக்டர் வந்து பார்த்து வலிக்கு மாத்திரை குடுத்து முடித்த போது தான் என் கணவர் கவலையோடு கதவுக்கு வெளியே நின்னு எட்டி பார்ப்பது தெரிந்தது. அவரை உள்ளே கூப்பிட சொல்லி நான் சொன்ன போது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட டாக்டரும் நர்சும் மெதுவாக என்னிடம் பேச்சை ஆரம்பித்தார்கள். வீட்டில் ஏதும் பிரச்சனை என்றால் தைரியமாக சொல்லலாம். பயப்பட வேண்டாம். என்னை போல பெண்களுக்கு பல காப்பகங்கள் இருக்கு. கை நீட்டும் கணவருக்கு பயந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் என் பக்கம் தான். இந்த ரீதியில் இன்னும் பல விஷயங்களை கனிவாக பொறுமையாக சொல்லி கொண்டே போனாங்க. ஒன்றும் புரியாமல் முதலில் விழித்த எனக்கு விஷயம் விளங்க ஆரம்பித்த போது அடி வயத்திலிருந்து பொங்கிய சிரிப்பை மீறி ஒரு விஷயம் உறைத்தது.

என் கணவரின் குடுமி அந்த ஒரு வினாடி என் கையில். என் ஒரு தலை அசைப்பில் பாவம் அவர் மாமியார் வீட்டு களியை ருசி பார்க்க வேண்டி இருக்கும். ஆஹா! எப்பேர்பட்ட ஒரு அரிய வாய்ப்பு! கோடானு கோடி மனைவிகள் உலகத்தில் தங்கள் வலது புருவத்தை வெட்டி கொடுக்க தயாராக இருக்கும் (மாசம் ரெண்டு தரம் அழகு நிலையம் சென்று தீட்டி விட்டு கொண்டும் வரும் அதே புருவத்தை தான் சொல்லறேன்) இந்த ஒரு வாய்ப்பு தேடாமல் கனிந்த பழம் போல என் மடியில் விழுந்த போது மனம் சஞ்சலப்படாமல் நெஞ்சில் உரமுடன் 'இவர் இதற்கு காரணமில்லை. இவர் நிரபராதி' ன்னு சொல்லி சட்டத்தின் கொடும் பிடியில் சிக்காமல் என் கணவரை மீட்டு கொண்டு வந்த நானா இல்லை சத்யவானின் சாவித்ரியா சரித்திர நாயகி?

Thursday, July 29, 2010

வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை!

சமீபத்தில் நண்பர் ஒருவர் "வார இறுதியில் மலை ஏற போகிறோம், வரீங்களா" ன்னு எங்களையும் சேர்த்து சில குடும்பங்களை கேட்டிருந்தார். விடுமுறை கழிஞ்சு வந்த களைப்பா இருக்குன்னு சாக்கு சொல்லி நான் ஜாலியா படுத்து தூங்கிட்டேன். மிச்ச குடும்பங்களும் வேறு சில காரணங்களால் போகவில்லை.

நாங்க எல்லோரும் இப்படி கழுத்தறுத்த பின்னும் கூட மனம் தளராமல் சென்று மலை ஏறி வெற்றி வாகை சூடி வந்தாங்க இந்த நண்பர் குடும்பத்தார். இவர்கள் மலை மேல் ட்ரெக்கிங் செய்வதில் கால் தேர்ந்தவர்கள் (கை தேர்ந்தவர்கள்னு சொன்னா ஏதோ இலக்கண பிழை போல இடிக்கிறதே!). எங்க குடும்பத்தின் கோட்டாவையும் சேர்த்து இவங்க அவ்வப்போது ஏதாவது மலை அல்லது குன்றின் மேலே ஏறி கொடி நட்டு விட்டு வந்திடுவாங்க. (கொடி நடுவாங்கன்னு தான் நினைக்கிறேன். அவ்வளவு தூரம் கால் கடுக்க ஏறி கொடி நடாமல் திரும்பி வந்தால் என்ன பிரயோசனம்?) இந்த காலத்தில் நாற்காலி உருளைகிழங்காக (அதாங்க couch potato) உள்ள முக்கால்வாசி குடும்பங்களுக்கு நடுவில் இந்த குடும்பத்தின் 'outdoor activities' என்னை கவர்ந்த ஒன்று.

இதில் அதிசயம் என்னன்னா ஏற்கனவே ஒருதரம் எங்கள் குடும்பத்தோடு ட்ரெக்கிங் செய்த அனுபவம் இருந்தும் இந்த நண்பர் மறுபடி எங்களை கூப்பிட்டது தான். என்னை மலை ஏறக் கூப்பிடறதும் பூனையை மடியில் வைத்து கொண்டு சகுனம் பாக்கறதும் ஒண்ணு தான். ஏணியில் நாலு படி ஏறினாலே நான் அசந்து போய் ஸ்டூல் கொண்டு வரச்சொல்லி உட்கார்ந்து நீர்மோர் கேட்கற ரகம். போன மாசம் சென்னை போயிறந்தப்போ கூட நல்லி கடைக்குள்ள போய் சில்க் காட்டன் செக்ஷன்லேந்து தஸ்ஸர் சில்க் செக்ஷன் போறதுக்குள்ள காத்து போன பலூன் போல தொஞ்சு போய் ஒரு பன்னீர் சோடா குடிச்சுட்டு அரைமணி உட்காராமல் இனியொரு புடவை பாக்க மாட்டேன்னு என் தங்கை கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன். அவளும் உடனே என்கிட்டே கண்டிப்பா சொல்லிட்டா - இனி ஒருதரம் நான் அவளை கடைக்கு போகலாம் வான்னு கூப்பிட்டால் உடனே நாட்டு எல்லையை தவழ்ந்தாவது கடந்து பாகிஸ்தானுக்கு குடிபோயிடுவாள்னு. அவளை சொல்லி குத்துமில்லைங்க பாவம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் பாண்டிபஜார்ல ஒரு சின்னக் கடைக்கு என் துணிகளுக்கு மாட்சிங்கா வளையல் வாங்க போயிருந்தோம். என்னை விட எனக்காக அதிக சிரத்தையோடு எல்லாக்கலர் வளையலையும் எடுத்து காமிக்க சொல்லி என் தங்கை கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கிட்டு ரொம்ப முக்கியமா உட்கார ஒரு பெஞ்சும் குடிக்க ரெண்டு சோடாவும் கொண்டு வர சொல்லி கேட்டேன். கோவம் வருமா வராதா சொல்லுங்க? ஒரு வழியா இனி எங்கே கிளம்பினாலும் நாலு சோடா பாட்டிலும் மடக்குற நாற்காலியும் மறக்காமல் கொண்டு வருவேன்னு சத்தியம் பண்ணினப்புறம் தான் என் தங்கை கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

இதுக்கு முன்னாடி ஒருதரம் நாங்களும் இன்னும் சில நண்பர்கள் குடும்பங்களும் இதே நண்பரின் ஊக்குவித்தலில் ட்ரெக் செய்ய கிளம்பிச் சென்றோம். கையில் எலுமிச்சம்பழசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ், பழவகைகள், ஜூச்வகைகள், சோடாவகைகள் எல்லாத்தையும் பாத்து பாத்து பாக் பண்ணிண்டு கிளம்பிப்போனோம் (பின்ன மலை ஏறிட்டு வந்தா பசிக்காதா? கண்ணு போடாதீங்க). போய் மலை அடிவாரத்தில் ஒரு பிக்னிக் ஏரியாவில் சாப்பாட்டு மூட்டையை இறக்கி விட்டு ஒரு கும்பலாக ஏற ஆரம்பித்தோம். முதல் கொஞ்சம் நேரம் கேலியும் சிரிப்புமா ஜாலியாக தான் இருந்தது. அப்புறம் தான் ஆரம்பிச்சது அவஸ்தையே. முதலில் குதி கால் வலிக்கற மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் பின்னங்காலும் பங்க்சர். அப்புறம் கீழ்கால் தசைகளில் தபலா அடிக்கும் எபெக்ட். குழந்தைகளால் புகழ்பெற்ற "Are we there yet?" கேள்வியை நான் திருடி கெஞ்ச ஆரம்பித்த போது எனக்கு கிடைத்த ஒரே பதில் "இதோ வந்துடும். ரொம்ப தூரம் இல்லை." மந்திரி குமாரி படத்தில் மாதுரி தேவிக்கு "வாராய் நீ வாராய்" பாட்டின் போது எப்படி இருந்திருக்கும்னு எனக்கு அப்போ நல்லா புரிஞ்சது. ஒரு பெரிய கதையை சுருக்கனும்னா கடைசி அரை மைல் இருக்கும் போது கடவுள் என் கதறலை கேட்டு தாங்க முடியாமல் ஒரு பெரிய பாறையை கண்ல காமிச்சார். அவ்வளவு தான். நானும் எங்கள் கும்பலில் இருந்த குழந்தைகளும் தாவி ஏறி அதில் உட்கார்ந்து இனி நடக்க மாட்டோம்னு உற்சாகமா மறியல் பண்ணினோம். வேறு வழியில்லாமல் மத்தவங்க எல்லோரும் மிச்ச தூரம் இறங்கி போய் காரை எடுத்துண்டு வந்து எங்களை கூட்டி கொண்டு போனாங்க.

என்னை மலை ஏற நீங்க கூப்பிடுவீங்களா?

Tuesday, July 20, 2010

அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்பு?

அதிர்ச்சி அடையாமல் கேட்பீங்கன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுவேன். எதுக்கும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தே கேளுங்க. நீங்கள் கர்ப்பிணியாகவோ, இருதய நோய் உடையவராகவோ இருந்தால் இந்தப் பதிவை மேற்கொண்டு படிக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ரெடியா? இதோ கேளுங்க.

நான் உல்லாச விடுமுறைப் பயணம் ஒன்றை முடித்து கொண்டு ஊர் வந்து சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆகியிருக்கும். ஜெட் லாக் என்று பேர் பண்ணி கொண்டு என் தோழிகளின் அருமையான நளபாகத்தை அனுபவித்து கொண்டிருந்த போது தான் அந்த போன் கால் வந்தது. வாரக்கடைசியில் நடக்கவிருக்கும் கோவிலுக்கு நிதி திரட்டும் நாட்டிய விழாவில் பங்கு கொள்ள முடியுமா என்று என்னை கேட்க ஊரில் நாட்டிய ஆசிரியையாக இருக்கும் என் தோழி தான் கூப்பிட்டாள்.

அச்சச்சோ! என்னங்க ஆச்சு? மூச்சு விட மறந்துட்டீங்களா? பரவாயில்லை ஆசுவாசப் படுத்திக்கோங்க. உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க. பரதக்கலைக்கும் எனக்கும் அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் உள்ள அதே தொடர்பு தான். (சும்மா ர்ய்மிங்கா இருக்கட்டுமேன்னு சொன்னேங்க. வேற ஒண்ணும் இல்லை..ஹி ஹி). அதுவும் நடிகை ஊர்வசியின் தங்கையா அப்படீன்னு பலரால் கேட்கப்பட்ட எனக்கு பரத நாட்டிய மேடைக்கு அழைப்பா? மேடை தான் தாங்குமா? அதுவும் சமீபத்தில் தான் ஒரு சின்ன பூகம்பம் வந்து உலுக்கி விட்டு போன எங்க ஊருக்கு இப்படி ஒரு கெட்ட நேரமா? அப்படியே ஆடி போயிட்டேன்.

தொலைபேசியின் அந்தப்பக்கத்தில் இருந்து மூச்சு பேச்சு இல்லாமல் போகவே பதறிப் போன என் தோழி அவசரமாக விஷயத்தை சொன்னாள். மேடை ஏற சொல்லி கூப்பிட்டது நாட்டியமாட இல்லையாம். முருகன் தெய்வானை கல்யாணம் பற்றிய நாட்டியத்தில் கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் போல வந்து மணமக்களை பூப்போட்டு ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு சின்ன ரோல் தான், பயப்பட வேண்டாம்னு சொன்னாள். அப்பாடா.....கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில் அடித்து கொண்டிருந்த என் பல்ஸ் நிதானப்பட்டு மூச்சு சீராகி முகம் தெளிய முழுசா முப்பது நொடி ஆச்சு. விஷயம் சொல்லிவிட்டு போனை வைக்கும் முன் மாலை ரிஹர்ஸலுக்கு கட்டாயம் வந்துவிடும்படி சொன்னாள்.

ரிஹர்ஸலா? இந்த ஜுஜுபி ரோலுக்கா? எப்படி யோசிச்சாலும் நின்னு பூப்போடுவதில் சொதப்ப முடியும்னு எனக்கு தோணலை. நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சூப்பர் பட்டு புடவை கட்டி ஜிலுஜிலுன்னு நகை போட்டு மேடை ஏறி கை நிறைய பூவெடுத்து தூவணும். அவ்வளவு தானே? இதுக்கு எதுக்கு ரிஹர்ஸல்? இப்படி நினைச்சு தான் கொஞ்சம் கொழுப்பும் மிச்சம் நமுட்டு சிரிப்புமா ரிஹர்ஸலுக்கு போனேன். என் ஆணவத்தை பாத்து கலியுக கிருஷ்ணன் கண் மறைவா நின்னு கை கொட்டி சிரித்திருப்பான் போல இருக்கு.

மேடை ஏறி நாலு தப்படி நடந்து சிரித்த முகத்தோடு எங்கே நிக்கணும்னு சொல்லி கொடுத்தாங்க. மேடை ஏறுவது வரை எல்லாம் சூப்பரா செய்தேன். பிறகு தான் எல்லாமே ரிப்பேர். பளிச்சுன்னு பத்து விளக்குக்கு அடியில் நின்னு சிரிக்கணும்னா எவ்வளவு கஷ்டம்னு தெரியணும்னா என்னை கேளுங்க, நான் சொல்லறேன். இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? கண்ணாடியில் பார்க்கா விட்டால் கூட என் முகம் அப்படித் தான் அப்போ இருந்திருக்கும்னு என்னால அடிச்சு சொல்ல முடியும். சரி அதை விடுங்க. நாலு தப்படி எடுத்து மேடைக்கு அந்தப் பக்கம் போகணுமே? நடக்க முடியாமல் பின்னி போயிருந்த கால்களோடு நின்றிருந்த எனக்கு அந்த சின்ன மேடை கிரிகெட் மைதானம் போல விரிஞ்சு தெரிஞ்சது. ஒருவழியா மேடைக்கு அந்தப்பக்கம் வந்தவுடன் அடுத்த பிரச்சனை பூப்போடும் வரை கைகளை என்ன செய்யறது? மொத்தத்துல அந்த அஞ்சு நிமிஷம் முடியறதுக்குள்ளே சொதப்பி தள்ளினேன். இதுல அக்கிரமம் என்னன்னா எனக்கு முன்னால் மேடையில் நடனம் ஆடிக்கொண்டு இருந்த பதினைந்து இருபது வயசு கலைஞர்கள் எல்லாம் நூறு பேர் முன்னாடி மேடையில் ஆடுவது என்னவோ அவர்கள் தினமும் செய்யும் டெக்ஸ்ட் மெசேஜிங் போல யதார்த்தமா, இயல்பா, அற்புதமா செய்தாங்க.

மேடை ஏறி பத்து பேர் முன்னாடி நின்று ஆடியோ, பாடியோ, நடித்தோ மக்களை மகிழ்விக்கும் perfoming artists அனைவருக்கும் என் தொப்பி தூக்கி வணங்கி (hats off ) விடைபெறுகிறேன்.

Saturday, July 17, 2010

அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா?

சிலரோட பேச்சில் தேன் ஒழுகும் அப்படீன்னு சொல்லி கேட்டுருக்கேன். இரண்டு நாட்கள் முன்னாடி சன் டீவியில் ஒரு பெண்மணி குழந்தை வளர்ப்பு பற்றி அப்படித்தான் ரொம்ப அழகாக, இனிமையாக, தெளிவாக பேசினாங்க. குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் அன்பாக பேசி நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியத்தை ரொம்ப வலியுறுத்தி சொன்னாங்க. இன்று பல அம்மாக்கள் கொத்தனார் சிமென்ட் பூசுவது போல் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதை பார்த்தால் நாம் சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்து விடும் போல இருக்குன்னு வருத்தத்தோட சொன்னாங்க. இன்னும் குழந்தை வளர்ப்பு பற்றி ஆச்சரியத்தக்க விஷயங்கள் நிறைய சொன்னாங்க. இவங்களை மட்டும் நான் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமா காலில் விழுந்திடுவேன். அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடிய ஒரு விஷயம் தானா? நினைத்தால் எட்டாக்கனி போல் ஏக்கமாக இருக்கு எனக்கு.

தினமும் இருபத்து நாலு மணி நேரத்தில் எப்படியாவது ஒரு எட்டு மணி நேரமாவது என் குழந்தைகளைத் திட்டாமல் இருக்க நான் முயற்சி செய்வேன். ஏதோ கடவுள் புண்ணியத்தில் இரவு எட்டு மணி நேரம் அவங்க தூங்கரதாலே இது முடியறது. மீதியுள்ள நேரமெல்லாம் வாளும், அம்பும் இல்லாத போர்களம் போல் அமர்க்களப்படும் எங்கள் வீடு. பீஷ்மரும், துரோணரும் மறுபிறவி எடுத்து வந்தால் கலியுக குருக்ஷேத்ரம்னு எங்க வீட்டு வாசல்லதான் தேரோட வந்து நிப்பாங்க. பள்ளி நாட்களில் காலையில் குழந்தைகளை எழுப்பி தயாராக சொல்லி கழிவறைக்குள் தள்ளி விட்டு சமையலறைக்குள் நான் வந்த பத்தாவது நிமிடம் சங்கு ஊதாமலே போர் தொடங்கி விடும் எங்க வீட்டில்.

"மணி ஆறு அம்பது. Breakfast ready. சீக்கிரம் வாடா கண்ணம்மா கீழே."

"-----------------------------"

"ஏழு பத்து. பல் தேச்சாச்சா இல்லியா? நான் வரட்டா மாடிக்கு?"

"--------------------------------"

"ஏழு பன்னண்டு. மாச மசன்னு என்னடீ பண்ணிண்டு இருக்க அங்க? "

"இன்னிக்கு Spirit wear டே அம்மா. என் ஸ்பெஷல் ஷர்ட் எங்கே?"

"எதுக்கு இவ்வளவு சீக்கிரமா கேக்கற? இன்னும் அரை மணி கழுச்சு கேக்கறது தானே? கழுதை. நேத்து ராத்திரி என்ன பண்ணின இத பாத்து எடுத்து வச்சுக்காம?"

"----------------------------------"

"வாயில் என்ன கொழுக்கட்டையா? பதில் சொல்லேண்டி."

இப்படியாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் ஒரு சாதாரண நாள் இரவு நாங்கள் படுக்கும் முன் என்னை ராட்சசியாக ஆக்கி விட்டு தான் முடியும். பொறுமையை மட்டும் கவர்மென்ட் ரேஷனில் கொடுத்தால் முதல் நாளே போய் படுத்து க்யூவில் இடம் பிடித்து ஒரு பத்து கிலோ அதிகமா வாங்கிடுவேன் நான். எங்க வீட்டில் அரியதொரு பண்டம் அது தான். சிரித்த படியே குழந்தைகளை கண்டிக்கும் முறை அறிந்த தாய்மார்கள் போர்ட் மாட்டி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தால் ரெஜிஸ்டர் பண்ண நான் தயார். ஆனால் நரசிம்ம அவதாரம் போல் காட்சி கொடுத்து பழகிய நான் பழக்கமில்லாமல் சிரித்து அன்பா பேசினால் என் குழந்தைங்க திடுக்கிட்டு போய் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சேர்த்துடுவாங்க. இந்த அஹிம்சா முறை குழந்தை வளர்ப்பை படிப்படியா தான் செயல் முறைல காட்டணும்னு நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் குழந்தை வளர்ப்பு எப்படீ? அஹிம்சை முறையா? மீனா முறையா? சும்மா சொல்லுங்க.

----------

ஜூலை 2009 RTS ப்ளாக் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

Tuesday, July 13, 2010

கண்டு பிடிச்சேன், கண்டு பிடிச்சேன்!

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு இந்த விளம்பரத்திற்கு பின் தொடரும்.

"அம்மா...இன்னிக்கு டின்னருக்கு என்ன? இட்டிலியா? வேண்டாம். தோசையா? வேண்டவே வேண்டாம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ்ஸில் பீட்சா வாங்கலாமா? தேங்க்ஸ் அம்மா. நீ தான் என் செல்ல அம்மா."

இட்டிலி தோசையெல்லாம் அந்தக் காலம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ் பீட்சா வாங்கி கொடுங்கள். நல்ல அம்மா என்று பெயர் எடுங்கள்.
-----

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு.

வணக்கம். இன்றைய காணாமல் போனவர் அறிக்கையில் முதலிடம் பெறுவது எளிமையில் பொலிவுடன் ஜொலித்த அழகுச் சென்னை. இந்நகர் தொலைந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. காணாமல் போன இந்நகரை கண்டு பிடிக்க உதவும் சில முக்கிய அடையாள அம்சங்கள் - தெருவில் பல்பத்தில் கோடு கிழித்து பாண்டி விளையாடும் குழந்தைகள், பாவடை சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம் பெண் குழந்தைகள், செல் போனில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் செய்து சுற்றியுள்ள உலகத்தை மறக்காத நகர் மக்கள், இடிக்காமல் நடக்க இடமில்லாத ஊரில் அடுக்கடுக்காக கட்டடங்கள் கட்டி 'ஷாப்பிங் மால்' என்று நெரிசலை அதிகரிக்காத கடைகள், பாஸ்ட் புட் அல்லது காபி அரங்கங்களை விடுத்து தெருவோர கல்வெட்டில் கூடி அரட்டை அடிக்கும் கல்லூரி மாணவர்கள். இந்நகரைக் கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு 'காணாமல் போனவர் நிதியில்' இருந்து தகுந்த சன்மானம் வழங்கப்படும். இந்த காணாமல் போன நப(க)ரைப் பற்றிய விவரம் தெரிந்தால் நீங்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 555-5555.

----

ட்ரிங் ட்ரிங்......ஹலோ, யாரு பேசறது? மீனா சங்கரனா? ஆமாம் காணாமல் போனவர் தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி எண் இது தான். சொல்லுங்க. என்னது, காணாமல் போன சென்னையை கண்டு பிடிச்சுட்டீங்களா? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. (தொலைபேசியின் வாயை மூடி கொண்டு சுற்றியுள்ளவர்களிடம் பரபரப்புடன் "யாரோ மீனா சங்கரனாம்....தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சுட்டாராம்." சக ஊழியர் "முதலில் எல்லா விவரங்களையும் லைன் கட்டாகரத்துக்கு முன்னாடி வாங்கு. அப்புறம் சந்தோஷப்படலாம்."

"மேடம், சொல்லுங்க. எங்க பாத்தீங்க சென்னையை? மைலாப்பூர் கபாலீச்வரர் கோவில் தெப்பக்குளம் பக்கத்திலா? நீங்க பார்த்த அடையாளங்களைச் சொல்லுங்க....நான் எழுதிக்கறேன்.

சந்நிதி தெருவுல நடக்கவே இடமில்லாமல் நிரம்பி இருந்த தெருவோரக் கடைகள்ள பூஜை சாமான்கள், அர்ச்சனைக்கு தேங்காய், மண் பானைகள், பச்சை காய்கறிகள், மல்கோவா மாம்பழம், முல்லை, மல்லி, சாமந்தி பூக்கள் எல்லாம் விற்பனைக்கு பரத்தி வச்சிருக்கும் போது , இதுக்கு நடுவுல பூந்து எப்படியோ நாலு கார்கள், ரெண்டு சக்கர வண்டிகள், எட்டு ஆட்டோ எல்லாம் போட்டி போட்டுண்டு இடிச்சுண்டு போறதை பார்த்தீங்களா?

அப்புறம்? திருவெல்லிக்கேணி வீடுகள் மாதிரி இரும்புக் கம்பி வெச்ச ஜன்னல்கள் கொண்ட பழங்கால வீடுகள் அங்கே இருந்ததா? அதில் பல வீடுகளில் வாசல் திண்ணைகளில் அம்மாக்கள் உட்கார்ந்து அவங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு எண்ணை வச்சு இழுத்து வாரி மணக்கும் பூச்சரங்களை வெக்கரதைப் பார்த்தீங்களா. வெரி குட், வெரி குட்.

வடக்கு, தெற்கு மாட வீதிகளில் பல கடைகளில் சீசன் இல்லாத போது கூட கொலு பொம்மை வச்சு விக்கறாங்களா? பெப்சியும், கோக்கும் குடிச்சு அலுத்து போன உங்களுக்கு அருமையான கரும்பு ஜூஸ் கிடைச்சுதா? பேஷ், பேஷ். சொல்லுங்க மேடம். எப்படி, எப்படி? எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாத செருப்பு தையல்காரரை அங்கு பார்த்தீங்களா? கிரி ட்ரேடிங் கடைக்குள் நுழையும் போதே தசாங்கம் வாசனை மூக்கை துளைக்கிறதா? கோவில் பக்கத்தில் வீட்டில் செய்யறது போல வெல்லக் கொழுக்கட்டையும், உப்புக் கொழுக்கட்டையும் வாங்கி சாப்டீங்களா?

மேடம், தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சு விவரம் சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. சன்மானம் விவரத்துக்கு இன்னொரு நாள் கால் பண்ணுங்க.(!!!!!?????)

------------------------

போன வருஷம் 2009 கோடை விடுமுறைக்கு இந்தியா சென்ற போது, அங்கிருந்து எழுதி ஜூலை மாதம் RTS ப்ளாக் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

Tuesday, July 6, 2010

பாம்பு செவியா? எனக்கா?

எனக்கு பாம்பு செவின்னு நேத்து பேச்சு வாக்குல யாரோ சொன்னா. அதாவது அந்த அளவு துல்லியமா எனக்கு காது கேட்கிறதாம். மனசுக்குள்ளே நான் சிரிச்சுண்டேன். ஒரு இருபது வருஷத்துக்கு முன் என் காது அடிச்ச கூத்து இவங்களுக்கு எப்படி தெரியும்? இல்லை இல்லை. சரியா சொல்லணும்னா என் காதை வச்சுண்டு என் அம்மாவும், ஒரு காது மூக்கு தொண்டை வைத்தியரும் அடிச்ச கூத்துன்னு சொல்லணும். எனக்கு காது சரியா கேக்கும்னு நம்பிக்கை போய் வீட்டுல எல்லோரும் Charades விளையாட்டு ஆடி சைகை செய்ய பழக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாருங்களேன். சுருக்கமா சொல்லணும்னா.......அனாவசியமா எதுக்கு சுருக்கணும்? அப்புறம் பதிவை நான் எப்படி ஜவ்வாட்டம் இழுக்கறது? முழுசாவே சொல்லறேன். கேளுங்க.

----------------------------------------------

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போதே எனக்கு முணுமுணுன்னு ஒரே காது வலி அன்னிக்கு. பையை வீசி விட்டு நேரா அம்மாகிட்ட போய் சொன்னேன். அம்மியில் ஏதோ துவையல் அரைச்சிண்டு இருந்த அம்மா நொடியில் டாக்டரா மாறி "மார்கழி மாச குளுரில் ஜில்லுனு தண்ணியில் காலங்கார்த்தால தலைக்கு குளிக்காதேன்னு நான் சொன்னா யார் கேக்கறா? அதான் சளி பிடிச்சு காது வலிக்கறது" அப்படீன்னு பளிச்சுன்னு டியாக்னோசிஸ் கொடுத்தா. "அதெல்லாம் இல்லைம்மா. காதுக்குள்ள ஒரு கட்டி இருக்குன்னு நினைக்கிறேன்" ன்னு நான் சொன்னேனோ இல்லையோ அம்மா மட மடன்னு வீட்டுக்குள்ளே போய் டார்ச் எடுத்துண்டு வந்தா .

இதை டார்சுன்னு சொல்லறதை விட பீமனோட கதைன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அத்தனை பெருசா இருக்கும். இந்த டார்ச் கூடிய சீக்கிரத்தில் மைகல் ஜாக்சனை விட பிரபலமாக போகுதுன்னு எங்களுக்கு அப்போ தெரியலை. சொர்கலோகத்து கதவு திறந்தால் என்ன மாதிரி ஒளி வரும்னு எங்க வீட்டு டார்ச் லைட் அடிச்சு பார்த்தா உங்களுக்கு புரிஞ்சுடும். டார்ச்சை என் காதுக்குள் அடித்து பார்த்த அம்மா அதிர்ந்து போனாள். "என்னடி இது, பிள்ளையார் சதுர்த்தி வெல்ல கொழுக்கட்டை சைசுக்கு இருக்கு இந்த கட்டி" அப்படீன்னு கவலையில் ஆழ்ந்தாள். இதை தொடர்ந்து நாலு நாட்கள் மஞ்சளும், உப்பும் அரைத்து கை வைத்தியம் செய்து பார்த்து தோற்ற அம்மா இனி டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

எங்க குடும்ப வைத்தியரை பத்தி தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. விடிகாலை சூரியன் உதிக்கும் முன் அவர் க்ளினிக்குக்குள்ளே போய் டென்ட் கட்டி கயித்து கட்டில் போட்டு படுக்க தயாரா இருந்தா தான் அங்கே போகணும். அதுக்கு நேரமோ பொறுமையோ இல்லாமல் நானும் என் அம்மாவும் நாலு தெரு தள்ளி புதுசா திறந்திருந்த ஒரு காது, மூக்கு, தொண்டை வைத்தியரிடம் போக தீர்மானித்தோம். "கோடியாத்து மாமி நேத்தி என் கிட்ட சொன்னா...இந்த டாக்டர் ரொம்ப படிச்சவராம். அதுவும் காதை பத்தி மட்டுமே ரெண்டு வருஷம் தனியா படிச்சிருக்காராம். நிச்சயம் சரி பண்ணிடுவார்." அம்மாவின் மனசு நிறைய நம்பிக்கையோடு என் காது நிறைய கட்டியோடு நாங்க இந்த டாக்டரிடம் நேரம் குறித்து கொண்டு ஒரு வழியாக செக்கப்புக்கு போனோம்.

என் அம்மாவை பத்தி ஒரு விஷயம் இங்கே சொல்லணும். கொடுக்குற காசு வீணாகாம டாக்டர்கிட்ட நிறைய கேள்வி கேட்பா. நிறைய விஷயம் சொல்லுவா. இந்த காது டாக்டர் முன் போய் உட்கார்ந்ததும் அம்மா பேச்சை துவங்கினாள். "வணக்கம் டாக்டர். என் பொண்ணுக்கு நாலு நாளா காதுல கட்டி. புதன்கிழமை அன்னிக்கு ஆரம்பிச்சது. அன்னிக்கி கார்த்தால ரசம் சாதம் சாப்டுட்டு போனா ஸ்கூலுக்கு. கொஞ்சம் மாம்பழம் நறுக்கி கொடுத்தேன். அதனால சூடு ஜாஸ்தியாகி இந்த கட்டி வந்ததோன்னு சந்தேகமா இருக்கு. எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை ஜாஸ்தி டாக்டர். இவள் காதை நன்னா செக் பண்ணி உள்ளுக்கு சாப்பிட நாலு மாத்திரையும், வெளியே தடவ ஒரு களிம்பும் எழுதி குடுத்திடுங்கோ. அடிக்கடி வந்துட்டு போறது கொஞ்சம் சிரமம். ஆனா பாவம் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். அதனால பாத்து நல்ல மாத்திரையா எழுதுங்கோ." அம்மா மூச்செடுத்து மறுபடி ஆரம்பிக்கறதுக்குள்ளே டாக்டர் புகுந்தார். "முதல்ல செக் பண்ணலாம் அம்மா. அப்புறம் எப்படி ட்ரீட் பண்ணனும்னு நான் சொல்லறேன்." என்னை பக்கத்து நாற்காலியில் உக்கார சொல்லி வாயை திறந்து நாக்கை நீட்ட சொன்னார். அவ்வளவு தீவிரமா அவர் என் வாய்க்குள்ளே டார்ச் அடித்து பார்ப்பதை பார்த்தால் கோகுல கிருஷ்ணன் வாய்க்குள் தெரிந்த உலகம் என் வாய்க்குள்ளேயும் தெரியுதோன்னு எனக்கு பயங்கர சந்தேகம். அப்படியே திறந்த வாக்கில் உறைஞ்சு போயிடுமோன்னு பயந்திருந்த என் வாயை ஒரு வழியா மூடிய போது, டாக்டர் டார்ச்சை மூக்கின் பக்கம் திருப்பினார். மூக்கை செக் செய்து விட்டு மருந்து சீட்டு எழுதி அம்மா கையில் கொடுத்தார். "இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டுட்டு பத்து நாளைக்கப்புறம் வாங்க" ன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சுட்டார். வெளியே வந்த நாங்க குழம்பி போய் நின்னோம். கிளினிக் வாசலில் இருந்த பெரிய போர்டை மறுபடி படித்து பார்த்தால் "காது" டாக்டர்னு தான் போட்டிருந்தது. ஹ்ம்ம்...காதை தவிர மத்ததை தானே இவர் செக் பண்ணினார்? நிஜமாவே பெரிய டாக்டர் தான் போல இருக்கு. கட்டியை பாக்காமலே மாத்திரை குடுத்துட்டாரே?

அடுத்த பத்து நாளும் வீடு ஒரே சர்க்கஸ் தான். மாத்திரை சாப்பிட்டு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது கட்டி சௌபாக்யமா இருந்தது. ஒரு நாளைக்கு நாலு தரம் அம்மா என் காதுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்து புலம்புவா. அதோட நிக்காமல் வாசல் கதவை திறந்து உள்ளே வரும் ஒருவரையும் விட்டு வைக்காமல் கூப்பிட்டு "கொஞ்சம் இப்படி வாங்கோளேன். எங்க மீனா காதுல கட்டி. பெரிய காது டாக்டரிடம் காமிச்சும் ஒண்ணும் சரியா போற மாதிரி இல்லை. இதோ டார்ச். மீனாவை கூப்பிடறேன். நீங்க கொஞ்சம் செக் பண்ணுங்கோ, சரியா? மீனா.....இங்க வந்து உன் காதை கொஞ்சம் காமிம்மா." என்னவோ பெருமையா ரிப்போர்ட் கார்ட் கொண்டு வந்து காமின்னு சொல்லரா மாதிரி அம்மா என்னை கூப்பிடுவா. ஒரு நாள் எங்க தெரு கீரைக்காரி கஷ்டப்பட்டு தலையில் இருந்த கூடையை இறக்கி வச்சுட்டு என் காதை டார்ச் அடிச்சு பார்த்து விட்டு தனக்கு தெரிந்த நாலு கை வைத்தியத்தை சொல்லிட்டு போனாள். வாசக்கதவு பக்கமா டார்ச் வைக்க ஸ்பெஷல் தட்டு ஒண்ணு கட்டலாமான்னு கூட வீட்டில் பேச்சு நடந்தது. ஒரு வாரம் அம்மா கூப்பிடவுடன் வந்து டார்ச் வெளிச்சத்தில் காதை காமித்து பழகி போய் அப்புறம் நானே வாசக்கதவு திறக்குற சத்தம் கேட்டால் டக்குனு போய் டார்ச் எடுத்துண்டு நின்னுடுவேன்னா பாருங்களேன்.

ஒரு வழியா பத்து நாள் மாத்திரை சாப்பிட்டு முடித்து விட்டு கட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது டாக்டரிடன் மறுபடியும் போனோம். இந்த முறை அவரிடம் காதை எப்படியாவது காட்டி விடணும் அப்படீங்கற தீர்மானத்தோடு போனோம். போய் நாற்காலியில் உட்காரும் போதே திரும்பி காது அவர் கண்ணுக்கு தெரியும் படி உட்கார்ந்தேன். இப்ப அவராலே எப்படி மிஸ் பண்ண முடியும்? ஆனால் அவர் "நேரா உட்கார்ந்து வாயை திறந்து நாக்கை நீட்டும்மா" ன்னாரு. வேறு வழியில்லாமல் அவர் சொன்ன படி உட்கார்ந்தால் பழைய படி தொண்டையையும், மூக்கையும் செக் செய்து விட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சார். நொந்து போய் "டாக்டர், எனக்கு கட்டி காதுல" ன்னு மெதுவா சொன்னேன். "ம்ம் தெரியும்மா. இந்த மாத்திரையை ஒரு அஞ்சு நாள் சாப்பிட்டுட்டு வா. கட்டி கரயலைனா கீறி எடுத்துடலாம்." என்னவோ மைசூர் பாகை கீறல் போடற மாதிரின்னாவது சொல்லறார். அங்கே நாங்க எடுத்த ஓட்டம் எங்க குடும்ப வைத்தியர் கிளினிக் வாசல்ல தான் நின்னுது. என் காது கூத்தை கேட்டு சிரிச்சுண்டே ஒரு களிம்பு எழுதி கொடுத்த எங்க வைத்தியர் "உனக்கு காசு ரொம்ப இருந்தா போய் அட்மிட் ஆகி ஆபரேஷன் எல்லாம் பண்ணிக்கோ. இல்லைன்னா இதை தடவிப்பாரு" அப்படீன்னாரு. ரெண்டே நாளுல கட்டி இருந்த இடம் தெரியாமல் போயிடுத்து. டார்ச்சை நல்லா துடைச்சு உள்ளே வச்சோம். அதுக்கும் தான் பாவம் ஓய்வு வேண்டாமா?

Friday, July 2, 2010

வைத்தியரே! என்னைய வச்சு காமடி கீமடி பண்ணிறாதீங்க ஐயா

கீழே காணப்படும் பதிவு போன வருஷம் கோடைகால விடுமுறைக்கு நான் இந்தியா போன போது அங்கிருந்து எழுதி RTS ப்ளாக் தளத்தில் வெளியிட்டது.

----------------------------

இரண்டு வாரங்களுக்கு முன்பு சூளுரைத்து நான் எடுத்த சபதத்தில் ஓரளவு வெற்றி கண்டேன். அது என்ன ஓரளவு வெற்றின்னு யோசனை பண்ணறவங்களுக்கு இதோ என் விளக்கம். விளக்கம் சொல்லரத்துக்கு முன் ஒரு விஷயம். இது ஒரு நகைச்சுவை பதிவுன்னு நினைச்சு படிக்க வந்திருந்தீங்கன்னா என்னை மன்னிச்சுக்கங்க. இது ஒரு சோக கதை. இதே ஒரு சினிமாவா இருந்தா வயலின்ல சோககீதம் வாசிச்சு உங்க மனசை பிழிஞ்சிருப்பாங்க. ஏதோ என்னால முடிஞ்சது ஒரு விளக்கம் தான்.

பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபதம் எடுத்தேன். விமானம் ஏறி இந்தியா சென்ற ரெண்டு நாளுக்குள் சரவண பவன் போய் சாம்பார் வடை சாப்பிடாமல் எந்த ஒரு நகைக்கடைக்கும் செல்ல மாட்டேன் அப்படீன்னு. என் சபதத்தை முதலில் படிச்சிட்டு ஒரு தோழி வெளியூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து கேட்டாள். அது என்ன நகைக்கடை? அழகா பாஞ்சாலி சபதம் மாதிரி விரித்த கூந்தலை முடிய மாட்டேன்னு கம்பீரமா சபதம் எடுக்க கூடாதான்னு. அவளுக்கென்ன தெரியும்? இந்தியாவுல வேர்க்கும் அப்படீன்னு ரெண்டு நாள் முன்னாடி தான் தலைமுடி வெட்டிண்டு வந்தேன். இருந்தா முடிய மாட்டேனா? வெச்சுண்டா வஞ்சகம் பண்ணறேன்? சரி அது போகட்டும். சொன்னபடியே இந்தியா வந்த மறுநாள் சரவண பவனுக்கு போனேன். என் பல நாள் கனவான சாம்பார் வடையை ஜொள்ளோழுக சாப்பிட்டேன். இது வரையில் என் சபதம் வெற்றி தான். அப்புறம் தான் ஆரம்பிச்சது என் தொல்லைகள்.

என் கனவு நனவான மறுநாள் காலையில் இருந்து வயிற்று வலி, வாந்தி, சுரம் போன்ற பல உடல் உபாதையில் சுருண்டு போன நான் சுமார் காலை ஒன்பது மணிக்கு என் தங்கையின் உதவியோடு எங்கள் குடும்ப வைத்தியரை தேடித் போனேன். திருப்பதி வெங்கடாசலபதியை கூட சுலபமாக பார்த்து விடலாம். எங்க வைத்தியரை தரிசிப்பதற்கு ஜாதகத்தில் குரு பலம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். என் போறாத நேரம், என் ஜாதகத்தில் குரு மட்டும் இல்லை சனி, கேது, ராகு எல்லோருமே அன்னிக்கு குப்புற படுத்து தூங்கி விட்டார்கள் போல இருக்கு. சுமார் ஒன்பதரை மணிக்கு கிளினிக் உள்ளே போய் நாங்கள் எடுத்த டோக்கன் எண் 45. கம்பவுண்டரிடம் விசாரித்ததில் அதுவரை 30 டோக்கன்களை தான் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிய வந்தது.

இந்த கிளினிக் பற்றி சில விஷயங்களை இங்கே நான் உங்களுக்கு சொல்லியாகணும். இந்த கிளினிக்கில் பல அறைகள் உண்டு. வைத்தியரை பார்க்கும் அறை. ஊசி போடும் அறை. மருந்து வாங்கும் அறை என்று பல அறைகள். ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார். உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள். மூணு எண்ணுக்கு எப்படி முப்பது பேர் போக முடுயும்னு நான் பல முறை யோசனைப் பண்ணி விடை தெரியாமல் பின்பு நமக்கு தான் கணக்கு சரியா வரலைன்னு விட்டிருக்கேன். இந்த முப்பது பேரையும் எங்க வைத்தியர் ஆற அமர செக் செய்து மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஊசி போடும் அறைக்குள் அனுப்புவார். அங்கு ஒரு முக்கால் மணி தவம் கிடந்த பின்பு தான் அவர் வந்து ஊசி போடுவார். பிறகு மருந்து அறைக்குள் க்யூவில் நின்று மருந்து வாங்கி கொண்டு வீடு செல்ல வேண்டும். ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி. பின்னேஇவரை ராசியான வைத்தியர்னு சும்மாவா சொல்லறாங்க?

என் விஷயத்துக்கு வருவோம். நாப்பத்தைந்தாவது டோக்கனை வைத்து கொண்டு மலையூர் மம்முட்டியான் ஸ்டைல்ல ஒரு போர்வையை போத்திக் கொண்டு நான் சுருண்டு போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கம்பவுண்டர் எங்கள் எண்ணை கூப்பிட காத்திருக்க ஆரம்பித்த போது சுமார் மணி ஒன்பதரை. சோர்வில் கண்ணை மூடி மறுபடி கண் திறக்கையில் மணி ஒன்று. பக்கத்தில் இருந்த தங்கையிடம் விசாரித்தால் 30 எண்ணுக்கப்பரம் இன்னும் வேறு டோக்கன் எண்களை கூப்பிடவே இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கு மேல் பொறுமையோ தெம்போ இல்லாமல் நாங்க கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம்.

ஸ்டெதஸ்கோப் மாட்டிண்டு ஒரு குச்சி நடந்து வந்தா கூட அது கால்ல விழ தயாரா இருந்த எங்க கண்ணுக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரி தென்பட்டது. உள்ளே போய் விசாரிச்சா ரெண்டே நிமிஷத்தில் வைத்தியர் அறைக்குள் கூட்டி கொண்டு போனார்கள். நிமிர்ந்து என்னை பார்த்த வைத்தியர் டக்குனு சொன்னார் "அதுக்கென்ன அட்மிட் பண்ணிடலாம்" அப்படீன்னு. அசந்தே போனேன் நான். இவரென்ன தீர்கதரிசியா? நாங்க இன்னும் என்ன வியாதின்னே சொல்லலை. அவர் இன்னும் என் நாடி கூட பார்க்கலை. அதுக்குள்ள அட்மிஷனா? அரை நொடியில் வீல் சேர் வந்தது. நாலு நர்ஸ் வந்து என்னை அறைக்கு அழைத்து கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு போனார்கள். அவங்க போறச்சே 'பல்ஸ்பலவீனமா இருக்கு' அப்படீன்னு சொன்ன மாதிரி இருந்தது. சுத்தி முத்தி பார்த்தா தங்கையை வேற காணலை. திடுக்கிட்டு போனேன். என்ன செய்யறது? சரி நம்ம குடும்ப பாட்டை பாடுவோம், (இது போல அவசர நிலைக்கு தயாரா நாங்க நாலு குடும்ப பாட்டு எப்பவும் வச்சிருக்கோம்) தங்கை எங்க இருந்தாலும் சலோ மோஷன்ல ஓடி வந்திடுவான்னு வாயை திறந்தா தேவர் மகன் படத்துல வந்த ரேவதி சொன்ன மாதிரி காத்து தானுங்க வந்தது. நல்ல காலம் என் தங்கை ஏதோ கையெழுத்து போட்டுட்டு அப்ப தான் வந்தா.

அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஒரே கலவரம். கண்ணில் பட்ட நர்செல்லாம் கையில் ஒரு ஊசியோடு வந்து குத்தி விட்டு போனார்கள். பல முறை குத்தி பார்த்து ஊசி நல்லா வேலை செய்யறதுன்னு தீர்மானம் பண்ணின பிறகு ஒரு வழியா ஐ. வீ. ஊசியை குத்தி மருந்து மற்றும் க்ளுகோஸ் தண்ணீர் எல்லாம் ஏத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பயங்கர சந்தேகம். இவங்கல்லாம் நமக்கு குத்தி பார்த்து தான் ட்ரைனிங் எடுத்துக்கராங்களோ அப்படீன்னு. கையுல ஊசியோட திரியரவங்களை அனாவசியமா பகைச்சுக்க கூடாதுன்னு வாய் திறக்காமல் படுத்திருந்தேன். குத்தி களைச்சு போய் நர்சுங்கல்லாம் ஓய்வெடுக்க போனதும் வைத்தியர் வந்து "ஏம்மா நீ வெளிநாட்டுலேந்து வந்திருக்கியா? உனக்கு பன்னி ஜுரம் இருக்குதா?" அப்படீன்னு கேட்டார். கண்டிப்பா இல்லைன்னு அடிச்சு சொன்னேன். உடனே நம்பி சரின்னு சொல்லிட்டு போய் சில நிமிஷங்கள்ல திரும்பி வந்து "ஏம்மா நீ வேணும்னா ரெண்டு நாள் இங்க தங்கிகிட்டு ஓய்வா இருந்துட்டு போயேன்" அப்படீன்னாரு. இது என்ன ஐந்து நட்சத்திர ஹோட்டலா? சொகுசா தங்கிட்டு போக. "அதெல்லாம் வேணாம் டாக்டர். நாலு மாத்திரை எழுதி குடுங்க. நான் வீட்டை பார்த்து போறேன்" தீர்மானமா சொல்லிட்டேன். ரொம்ப ஏமாத்தமா திரும்பி போனார் அவர். "இவர் எதுக்கு இப்படி வருந்தி வருந்தி நம்மளை இங்க தங்க சொல்லறார்? நம்மள வச்சு ஏதாச்சும் காமடி கீமடி செய்ய போறாரோ" அப்படீன்னு நான் கவலையோடு அறையில் கண்களை சுழல விட்ட போது தான் விஷயமே புரிஞ்சுது. அது ஒரு புத்தம் புதிய ஆஸ்பத்திரி. திரும்பின எல்லா இடத்திலும் ஒரு பளபளப்பு. நான் தான் முதல் கிராக்கி போல இருக்கு. அதான் பார்த்த உடனே கோழி மாதிரி அமுக்கி படுக்க போட்டுட்டாங்க. எது எப்படியோ வைத்தியர் நல்லவர். மாத்திரை எழுதி கொடுத்து ஒரு ஆறு மணி நேரத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். அங்கே உள்ளே நுழைந்ததை விட அதிக தெம்போடு வெளியே வந்து காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

---------------------------------------

அவ்வளவு தாங்க என் சோக கதை. கண்ணை துடைச்சுகிட்டு போய் ஆக வேண்டிய வேலையே கவனியுங்க.

Wednesday, June 30, 2010

வெள்ளிக்கிழமையா? பூசாரியை கூப்பிடுங்க!

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

தெனாலி மாதிரி லிஸ்ட் போட்டு சொல்லற அளவு பல பயங்கள் எனக்கு இருந்தா கூட, நம்ம பாரதி சொல்லற இந்த உச்சி மீது வானம் இடிஞ்சு விழற ஜுஜுபி வேலைக்கெல்லாம் நான் அனாவசியமா பயப்படறது இல்லை. அது பாட்டுக்கு விழுந்திட்டு போகட்டும்னு விட்டுடுவேன். நான் அதிகமா பயந்து நடுங்கறது ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் தான். அது தான் வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை விடிஞ்சாலே நான் 'உலக மகா கோழை' அப்படீங்கற பட்டத்தை வாங்க தயாராயிடுவேன். ஊர் உலகத்துல எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா "அப்பாடா, இனி ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டாம், ஸ்கூல் போக வேண்டாம்"னு சந்தோஷமா இருப்பாங்க. நான்? அம்மன் கோவில் பூசாரியை வேப்பிலை அடிக்க கூப்பிடும் நிலையில் இருப்பேன். என்னோட இந்த பயத்துக்கு என்ன காரணம்னு சொல்லறேன் கேளுங்க.

என் குழந்தைகளுக்கு 102 டிகிரி ஜுரம் வந்தா, அது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் வரும்னு ஒரு தீர்கதரிசியோட தீர்மானத்தோட என்னால சொல்ல முடியும். திங்கள் லேந்து வெள்ளி சாயந்திரம் வரை ஒரு பூச்சி பொட்டு கூட கடிக்காம மிகச்சிறந்த உடல் நிலையில் இருக்கும் என் குழந்தைங்களுக்கு வெள்ளிகிழமை ராத்திரிக்குள் ஜுரம், வாந்தி, பேதி, தலை வலி, வயித்த வலி, பல் வலி மற்றும் இதர பல உடல் உபாதைகள் வரக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம். ஐந்து மணிக்கு குழந்தை வைத்தியர் ஆபீஸ் இழுத்து மூடியாச்சா என்று உறுதிப்படுத்திண்டு தான் எல்லா உபாதைகளும் ஆரம்பிப்பது போல இருக்கும்.

அது மட்டும் இல்லை. வாழ்க்கைக்கு எங்களுக்கு அதி அவசியமா தேவைப்படும் எல்லா இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா சொல்லி வச்சா மாதிரி பட்டுன்னு உயிர் விட்டுடும். வெய்யில் காலத்தில் குளிர் சாதன பெட்டி வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான் விறைத்து போய் நிற்கும். குளிர் காலத்தில் வெப்ப நிலை பெட்டி பொசுங்கி சாம்பலாவது வெள்ளி அன்று தான். பாத்ரூம் பைப்பெல்லாம் உடைஞ்சு வீட்டை வெள்ளத்துல ஆழ்த்துவது சர்வநிச்சயமா வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான். ரிப்பேர் செய்பவர்கள் இனி இரண்டு நாள் கழித்து திங்களன்று தான் வேலைக்கு வருவார்கள் அப்படீன்னு உறுதிப்படுத்திண்ட பின்பு தான் எங்கள் வீட்டு துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்வதை நிறுத்தும். உயிரில்லாத இந்த இயந்திரங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு புத்திசாலித்தனம் வருதுன்னு எவ்வளவு யோசனை பண்ணியும் எனக்கு புரியலைங்க.

என் கணவரின் புத்தம் புது நூறு டாலர் சூட்டில் அரை கப் சாம்பாரை நான் கொட்டினால் அது சர்வ நிச்சயமா வெள்ளி இரவாய் தான் இருக்கும். Dry Cleaners கடை திறந்திருக்கும் போது ஏன் இப்படி நடக்கமட்டேங்கறது அப்படீங்கற என் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கலை. மொத்ததுல என்னை கதறடிக்க கூடிய திறன் வெள்ளிக்கிழமையிடம் தான் இருக்கு.

அடடா, நாளைக்கு வெள்ளிகிழமையா? ஒக்க நிமிஷம் வைட்டீஸ் ப்ளீஸ். பக்கத்து கோவில் பூசாரிக்கு ஒரு போன் பண்ணி ஒரு கொத்து வேப்பிலைக்கு ஆர்டர் கொடுக்கணும்.

உங்களோட தெனாலி லிஸ்ட் எவ்வளவு நீளம்? யோசிச்சு வைங்க இதோ வந்திடறேன்.

ராக்பெல்லர் மாமி எங்கே? நரிக்கொரவாஸ் எங்கே?

சில வருஷங்களுக்கு முன்னாடி நான் கலிபொர்னியாவில் வசித்த போது ஒரு தோழியின் தங்கைக்கு கல்யாணம் நிச்சயித்து பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலிலேயே செய்வதா சொன்னாங்க. ஒரு மாதம் முன்பே கல்யாண பத்திரிகை குடுத்து எங்களை அவசியம் வர வேண்டும் அப்படீன்னு சொல்லிட்டு போனாங்க.

உங்களைப் பத்தி எனக்கு தெரியாதுங்க ஆனா எனக்கு நம்மூர் கல்யாணம்னாலே எப்பவும் ஒரு தனி குஷி. அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்க போற முதல் இந்திய கல்யாணம் இது தான். சின்ன வயசில் எழுத்தாளர் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' ங்கர புத்தகத்தை நான் படிச்சு படிச்சு கிழிச்சதுல என் தொல்லை தாங்காம ஒரு நாள் அந்த புத்தகம் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு சந்நியாசம் வாங்கிண்டு போயிடுத்து.

அமெரிக்காவுல கல்யாணம்னா சும்மாவா? பெண் வீட்டுக்காரங்களுக்கு தான் எத்தனை வேலை இருக்கும்? இந்தியாலேந்து வண்டி(விமானத்த தான் சொல்லறேங்க) வச்சு எத்தனை சாமான் கொண்டு வரணும்? எத்தனை பேரை கூட்டிண்டு வரணும்? அதான் நம்ம எழுத்தாளர் சாவி அமெரிக்காவில் கல்யாணம் செய்தா என்னென்ன பண்ணனும்னு அவர் புத்தகத்துல பிட்டு பிட்டு வச்சிருக்காரே.

* தட்டானை வரவழைச்சு கல்யாண பெண்ணுக்கு வேண்டிய ஒட்டியாணம், வங்கி, வளையல்கள், ஹாரம், திருமாங்கல்யம் போன்ற நகைகளை செய்தாகணும்.
* வயசான பல பாட்டிகளை கூட்டி கொண்டு வந்து அப்பளம் இட்டு காய வைத்து கல்யாண விருந்துக்கு தயார் பண்ணியாகணும்.
* இட்ட அப்பளங்களை காய வைக்க பெரிய கட்டடங்களோட மொட்டை மாடியை வாடகைக்கு எடுத்தாகணும்.
* மடிசார் கட்டிக்க ஆசைப்படற பெண்களுக்கு, (ராக்பெல்லர் மாமி உட்பட) அதை சொல்லித்தர பாட்டிகளை ஏற்பாடு செய்தாகணும்.
* புரோகிதர்களை வரவழைத்து அவங்க தங்கரத்துக்கு இட வசதிகள் செய்து கொடுத்தாகணும்.
* வைதீக காரியங்களுக்கு மடியா தண்ணி வேணும்னு சொல்லற புரோகிதர்களுக்கு புதுசா கிணறு வெட்ட ஆட்களை வரவழைக்கணும்.
* மாப்பிளையை கார்ல ஊர்வலமா அழைச்சுண்டு போற ஜானவாச ரூட்டுக்கு கவர்மென்ட் பர்மிட் வாங்கணும்.
* ஜான்வசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.
* நலங்கில் பெண்ணும், மாப்பிள்ளையும் உருட்டி விளையாட தேங்காய் வரவழைக்கணும்.
* கல்யாண சத்திரம் வாசல்ல கட்ட வாழை மரம் வரவழைக்கணும்.
* பந்தியில் பரிமாற வாழை இலை வரவழைக்கணும். வடு மாங்காய் வரவழைக்கணும். வெள்ளைக்காரர்கள் பந்தியில் உட்கார்ந்து வடு மாங்காய் சாப்பிட்டு விரலை கடித்து கொண்டால் அவங்க கைக்கு பேண்ட் ஐட் போட தேவையான first aid boxes வரவழைக்கணும்.

நினைக்கவே எனக்கு மலைப்பா இருந்தது. என் தோழி வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண ஏற்பாடுகள் பண்ண எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க செய்யறேன் அப்படீன்னு சொன்னதுக்கு எல்லாம் 'under control' அப்படீன்னு சொன்னாங்க. சரி தான். நிறைய ஆள்பலம் இருக்கும் போல இருக்குன்னு நானும் விட்டுட்டேன்.

கல்யாண நாள் கிட்ட நெருங்க நெருங்க எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எனக்கு ஒரே பரபரப்பு. தினமும் நான் அலமாரியை திறந்து நாலு தரம் கட்ட வேண்டிய பட்டு புடவைகளையும் நகைகளையும் சரி பார்த்து வைப்பதை பார்த்து என் கணவருக்கு ஒரே குழப்பம். அமெரிக்காவில் பட்டுப் புடவை கட்டிண்டு ஜானவாச கார் பின்னாடி நடக்கவும், நலங்கு போது கலாட்டா பண்ணி பாட்டு பாடவும், வாழை இலை கட்டி மாக்கோலம் போட்டிருப்பதை பாக்கவும் ஒரு குடுப்பினை வேண்டாமா? 'வாஷிங்டனில் திருமணம்' கதை போல நடக்கவிருக்கும் கலிபோர்னியா கல்யாணத்தை பாக்க எனக்கிருந்த ஆர்வம் அவருக்கு புரியலை.

கல்யாணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டுக்காரங்களை விட அதிக கவனத்தோட நான் ஜானவசத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த போது எதேச்சையா என் வீட்டுக்கு வந்த இன்னொரு தோழி என்னை பாத்து குழம்பி போய் நின்றாள். விசாரிச்சா கல்யாணத்துல ஜானவாசமே கிடையாதாம். அது மட்டுமில்லை. அடுத்த நாள் கல்யாணம் ரொம்ப சிம்பிளா தாலி மட்டும் கட்டி அரை மணியில முடிஞ்சுடுமாம். அப்புறம் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் buffet சாப்பாடு சாப்பிட்டு போகணுமாம்.

என்ன அக்கிரமம்க இது? ஒரு ஜானவாச கார் கிடையாதாம். கார் பின்னாடி நடக்கற ஊர்வலம் கிடையாதாம். ஊர்வலத்துக்கு காஸ் விளக்கு தூக்கிண்டு நடக்கும் நரிக்குரவங்க கிடையாதாம். மடிசார் கட்டிய ராக்பெல்லர் மாமி கிடையாதாம். உட்கார வச்சு வாழை இலைல பரிமாரற விருந்து கிடையாதாம். ரொம்ப ஏமாத்தமா இருந்துதுங்க. எனக்கு இருந்த கோவத்துல ஆசை காமிச்சு மோசம் பண்ணினதுக்கு திருவாளர் சாவி மேல கேஸ் போடலாமான்னு கூட யோசனை பண்ணினேன். நல்ல காலம் அப்படியெல்லாம் செய்யாமல் விட்டேன். இல்லேன்னா இப்போ அவர் பேரை சொல்லி ப்ளாக் எழுதினத்துக்கு என் மூக்கறுத்து மொளகாப்படி தூவாம விட்டுருவாங்களா?

பி.கு. - இது ஜூன் 2009 ல் RTS ப்ளாக் தளத்தில் வெளி வந்த என் கட்டுரை.

Tuesday, June 29, 2010

துப்பறியும் சாம்பு இப்பொழுது எங்கே?

ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்ல முடியாட்டாலும் என்னை யாரும் இது வரை சோம்பேறின்னு சொன்னது இல்லைங்க. அடிக்கடி துடைச்சு துடைச்சு சுத்தம் பண்ணாட்டாலும் வீட்டுக்கு நாலு பேர் வரப்போறாங்கன்னு தெரிஞ்சா உடனே வாழும் அறையில் (living room) இறைஞ்சு கிடக்கிற பத்து விளையாட்டு சாமான்கள், அரை டஜன் நாய் பொம்மைகள், ஐந்தாறு அழுக்கு காலணி உறை, நாலு தலையணை, இரண்டு கதை புத்தகங்கள் மற்றும் பற்பல கலர் ரிமோட் கண்ட்ரோல்கள் எல்லாத்தையும் அள்ளி எடுத்துட்டு போய் பக்கத்து அறையில் போட்டு கதவை இழுத்து தாளிட்டு சுத்தம் செஞ்சிடுவேன். வீட்டுக்கு வர்றவங்க மூக்கில் விரல் வச்சு ஆச்சர்யப்படுவாங்க. என் நல்ல பேருக்கு பங்கம் வராமல் என்னுடைய நாய் பக்கத்து அறை வாசலில் உட்கார்ந்து யாரையும் உள்ளே போக விடாமல் காவல் இருக்கும். இப்ப நானே அந்த அறைக்குள் போக பயந்து போகறது இல்லைன்னா பாருங்களேன்!

அப்படிப்பட்ட நான் வீடு நிறைய கூடைகளில் தோய்த்து மடிக்காமல் துணி மணிகளை அப்படியப்படியே போட்டு வைத்திருப்பதை பார்த்து நீங்க ஆச்சர்யப்படறது எனக்கு புரியுது. என்னை மட்டும் இல்லை. எல்லா வீட்டு தலைவிகளையும் கேட்டு பாருங்க. அதுக்கு ஒரு காரணம் தான் சொல்லுவோம். முடிவேயில்லாத ஒரு வேலையை எப்படீங்க செய்ய முடியும்? ஒரு வழியா ஐந்தாறு கூடை துணிகளையும் வாஷிங் மஷினில் போட்டு துவைத்து, காய வைத்து, மடித்து அலமாரியில் வைத்து விட்டு திரும்பினால், எங்கிருந்தோ இன்னும் ரெண்டு கூடையில் அழுக்கு துணி வந்து உட்கார்ந்து என்னை பார்த்து கை கொட்டி கெக்கலிக்கிறது. பல வருஷங்களா 'நீயா நானா பார்ப்போம்' அப்படீங்கற வீராப்பில் நான் அழுக்கு துணியுடன் தனியாக போட்ட குஸ்தியை பார்த்து பரிதாபப்பட்டு என் கணவர் என்னை ஒதுங்கச் சொல்லி இப்போது அவர் இந்த போரில் இறங்கியிருக்கார்.

சில வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் ஆர்வத்துடன் துணி துவைச்சு மடிச்சு வைப்பேங்க. எதையும் சாதிக்க முடியும்னு நம்புகிற வயசு அப்போது. ஆனால் இப்பல்லாம் பெருகி வரும் அழுக்கு துணிகளை வெல்ல எனக்கு சக்தி இல்லைன்னு ஒத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டது. இந்தப் பக்குவம் வந்ததால தான் "துவைத்த துணியை மடிச்சு அலமாரியில் வைத்து என்ன செய்ய போகிறோம்? நம் தலை அந்தப்பக்கம் திரும்பியவுடன் அது குதித்து அழுக்கு கூடையில் உட்கார போகிறது. அதனால் மடிக்காமல் கூடையிலே இருக்கட்டும்" னு விட்டுட்டேன்.

ரொம்ப காலமாவே ஒரு சந்தேகம் எனக்கு. நான் தான் எங்க வீட்டில் துணிகள் வாங்குவேன். அளவாத்தான் வாங்குவேன். அப்படி இருக்கையில் ராத்திரியோட ராத்திரியாக எப்படியோ துணிமணித்தொகை வீட்டில் பெருகிக் கொண்டு வரா மாதிரி தோணுது. நாலு துணி இருந்த அலமாரியில் இருபது துணி இருக்கிற மாதிரி தோன்றுகிறது. இந்த மர்மத்தை துப்பு துலக்க எனக்கு நேரமும் இல்லை. புத்திசாலித்தனமும் பத்தாது. இந்த வேலைக்கு துப்பறியும் சாம்புவைத் தான் கூப்பிடலாம்னு இருக்கேன். அவர் தொலைபேசி எண் உங்ககிட்ட இருக்கா?

பி.கு. - இது RTS ப்ளாக் தளத்தில் மே 2009 ல் வெளிவந்த கட்டுரை.

Monday, June 28, 2010

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்!

காட்சி - 1
எலியூர் அரண்மனை

"யாரங்கே?" இடி போல் முழங்கியது எலியூர் அரசனின் குரல். இரு காவலாளிகள் எங்கிருந்தோ நொடியில் வந்து வணங்கினர்.

"மன்னா, தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்."

"உடனே சென்று ஆஸ்தான புலவரை அரண்மனைக்கு அழைத்து வரவும். இரண்டு நாட்களாக அவர் சபைக்கு வரவில்லை. இன்று பல்லியூரில் இருந்து வந்த புலவரை தர்க்கத்தில் நான்கு கேள்விகள் கேட்க நம் சபையில் ஒருவரும் இல்லை. எலியூருக்கு எத்தனை பெரிய அவமானம்?" கோபத்தில் அரசனின் முடுக்கிய மீசை துடித்தது.

விரைந்து சென்ற காவலாளிகள் சில நிமிடங்களில் புலவருடன் திரும்பினர். அழுது வீங்கி நிராசையுற்ற கண்களுடன் தன் முன்னே நின்ற புலவரைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் மன்னன்.

"புலவரே, என் நாட்டின் குடிமகனின் கண்களில் கண்ணீரா? ஐயகோ, நான் என் கடமையை செய்ய தவறியவன் ஆனேனே. என்ன குறை உங்களுக்கு? என்னிடம் சொல்லுங்கள்."

"சின்னத்திரையில் ஐந்து வருடங்களாக ஓடிக்கொண்டிரும் மெகா சீரியல் இன்றுடன் முடிவடைகிறது மன்னா. ஐந்து வருடங்களாக என் குடும்பத்தின் அங்கமாகவே ஆகி விட்ட சின்னத்திரை நடிகர்களை இனி பார்க்கவே முடியாதே என்ற வருத்தத்தில் அழுது அழுது எனக்கு ஜன்னி கண்டு விட்டது. அதனால் தான் என்னால் சபைக்கு வர இயலவில்லை அரசே."

"என்னது, சின்னத் திரையில் வரும் மெகா சீரியல் நடிகர்களிடம் உங்களுக்கு அவ்வளவு பிரியமா? ஆச்சர்யமாக உள்ளதே! அதன் காரணத்தை சற்றே விளக்கமாக சொல்லுங்கள் புலவரே."

"எலியூர் அரசே, தினமும் சபை முடிந்து வீடு திரும்பினால் எனக்காக மெகா சீரியல் குடும்பங்கள் காத்திருக்கும். ஒவ்வொரு நாளும் அந்த கதாபாத்திரங்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது மன்னா. இவைகளின் கதாநாயகிகள் மாமியாரிடம் உதைப்பட்டு, கணவனிடம் அடிபட்டு, பிறந்த வீட்டார் முன் அவமானப்பட்டு, தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டு, கொலை சூழ்ச்சியில் அகப்பட்டு........அப்பப்பா...அவர்கள் படும் பாட்டை பார்த்து எத்தனை நாட்கள் நான் கண்ணீர் விட்டுருப்பேன். அரசே.....உங்கள் கண்களில் கண்ணீரா?"

"புலவரே...போதும் போதும். இனி சொல்லாதீர்கள். உங்கள் மெகா சீரியலில் நல்லது எதுவுமே நடக்காதா?"

"மன்னா....எலியூரில் சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கலாம்...மெகா சீரியலில் நல்லதாக எதுவும் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை."

"புலவரே, எனக்கு ஒரு நல்ல யோசனை. நாளை பல்லியூர் புலவர் சபைக்கு வரும் போது நீர் இந்த மெகா சீரியல் பற்றி நாலு கேள்வி அவரைக் கேளுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கே."

"அப்படியே செய்யலாம் மன்னா. நாளைக் காலையில் சபையில் பல்லியூர் புலவரை சந்திக்க தயாராக வருகிறேன்."

------------

காட்சி - 2
புலவர்களின் மோதல்
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

பல்லியூர் புலவர்: மன்னாதி மன்னா, பல்லியூர் நாட்டு மக்களின் சார்பாக உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, வருக வருக...இன்று எங்கள் ஆஸ்தான புலவர் உங்கள் பண்டிதத்தை சோதனை செய்வார். ஆஸ்தான புலவரே, தர்க்கத்தை துவக்கலாம்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா.

புலவரே, இதோ உங்களுடைய முதல் கேள்வி. சின்னத் திரையில் வரும் மெகா சீரியலில் ஒரு மாமியார் தன்னுடைய மருமகளுக்கு இன்முகத்துடன் காப்பி பானம் கொடுத்தால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அவருக்கு மருமகளிடம் அபரிதமான அன்பென்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: தவறு. பானத்தில் விஷம் கலந்து கொடுத்து "சென்று வா மகளே" என்று சொல்கிறார் என்று அர்த்தம். இதோ உங்களுடைய அடுத்த கேள்வி. தமிழ் மெகா சீரியலில் கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கும் ஒரு பெரியவர் குனிந்த தலையுடன் அழுகையில் உடம்பு குலுங்க ஒரு துண்டால் வாயை மூடி கொண்டு ஒரு வீட்டை விட்டு வெளியே வருகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அந்த வீட்டில் அவருடைய உறவினர் ஒருவர் தவறி விட்டார் என்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: இல்லை. அவருடைய மகள் புகுந்த வீட்டில் வேலைக்காரியாக உழைப்பதை கண்டு ரத்த கண்ணீர் பெருகி மகளின் கணவரையும், மாமியாரையும் "இது நியாயமா?" என்று கேள்வி கேட்டு அவர்களிடம் அவமானப்பட்டு வீடு திரும்புகிறார் என்று அர்த்தம்.

இதோ உங்களுடைய மூன்றாவது கேள்வி. சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: இந்தக் கேள்வி சற்று கடினமாக உள்ளது. எனக்கு சிறிது நேர அவகாசம் வேண்டும் புலவரே.

எலியூர் அரசன்: ஒரு மணி நேர உணவு இடைவேளைக்கு பின் தர்க்கத்தை மறுபடியும் தொடரலாம்.

புலவர்கள்: அப்படியே ஆகட்டும் மன்னா.

ராஜ சபையை விட்டு அனைவரும் வெளியேறுகிறார்கள்.

---------------

காட்சி - 3
உணவு இடைவேளைக்கு பின் தர்க்கம் தொடர்கிறது
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, ஆஸ்தான புலவரின் மூன்றாவது கேள்விக்கு விடை சொல்லி தர்க்கத்தை தொடர தாங்கள் தயாரா?

வெளிநாட்டு புலவரே: ஆமாம் மன்னா.

எலியூர் அரசன்: ஆஸ்தான புலவரே மீண்டும் ஒரு முறை மூன்றாவது கேள்வியை கேளுங்கள்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா. புலவரே, சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: விளம்பரங்களில் நடித்து பற்பல சாமான் விற்கும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஸ்தான புலவர்: தவறு. அவர்கள் அதற்கு முன் பெரிய திரையில் முன்னிலை கதாநாயகிகளாக நடித்து திருமணமான அடுத்த நாளிலிருந்து அழகையும் கவர்ச்சியையும் இழந்ததாக முத்திரை குத்தப்பட்டு அக்கா, பெரியம்மா, சிறிய தாயார் போன்ற பாத்திரங்களுக்கு ஒதுக்கப்பட்ட சோகத்தில் நொடிந்து போய் நடித்து கொண்டிருந்தார்கள்.

எலியூர் அரசன்: சபாஷ்! சபாஷ்!

ஆஸ்தான புலவர்: நன்றி அரசே! இதோ எனது அடுத்த கேள்வி. ஒரு மெகா தொடரை இன்று பார்த்த பின்பு ஒரு வருடம் சென்ற பின்பு மறுபடி பார்த்தால் கதையில் மாற்றம் இருக்குமா இருக்காதா?

வெளிநாட்டு புலவர்: அது எப்படி ஒரு வருடத்தில் மாற்றம் இல்லாமல் போகும்? நிச்சயம் ஒரு வருடத்தில் பல சம்பவங்கள் முடிந்திருக்கும்.

ஆஸ்தான புலவர்: அது தான் இல்லை. வாரத்தில் ஒரு முறை அரைமணி நேரம் வரும் தொடரில் இருபத்தெட்டு நிமிடம் விளம்பரங்கள் போட்டு இரண்டு நிமிடம் மட்டுமே தொடர் வருவதால் ஒரு வருடத்தில் கதை நகர சிறிதும் வாய்ப்பில்லை.

இதோ எனது கடைசி கேள்வி புலவரே. கொலைக் காட்சி போன்ற ஒரு முக்கியமான காட்சியில் வில்லன் கத்தியை உயர்த்தி பிடித்து குத்துவதற்கு முன்பு அதிர்ச்சி தருவது போல பின்னணி இசை வரும். அப்பொழுது என்ன நடக்கும்?

வெளிநாட்டு புலவர்: இதற்கு விடை எனக்கு தெரியாது புலவரே. உங்கள் புலமைக்கு நான் தலை வணங்கி இந்த தர்க்கத்தை நீங்களே வென்றீர் என ஒத்துக் கொள்கிறேன். உங்களது கடைசி கேள்விக்கு நீங்களே பதிலையும் சொல்லி விடுங்கள் ஐயா.

ஆஸ்தான புலவர்: இதோ அதன் பதில் புலவரே. ஒன்றுமே நடக்காது. மறுபடி அடுத்த வாரம் தொடரும் என்று கூறி நேயர்களை நோகடிப்பார்கள். அவ்வளவு தான்.

வெளிநாட்டு புலவர்: நான் தோற்று விட்டேன் மன்னா. உங்கள் நாட்டு புலவரின் அறிவாற்றலின் முன்பு நான் தலை குனிகிறேன் அரசே. இனி நான் எலியூர் பக்கம் எந்த ஒரு தர்க்கத்திற்கும் வர மாட்டேன் என்று கூறி விடை பெறுகிறேன்.

எலியூர் அரசன்: சென்று வாரும் புலவரே. சின்னத் திரையை கரைத்து குடித்திருக்கும் எங்கள் புலவரிடம் தோற்றது உமக்கு இழிவு அல்ல. பெருமை தான். ஆஸ்தான புலவரே, நன்று செய்தீர், இந்நாட்டின் பெருமையை உயர்த்தினீர். உங்களின் சின்னத் திரை மெகா தொடர்களின் பண்டிதத்தை பாராட்டி 'மெகா புலவர்' என்று பட்டம் அளித்து இந்த பத்து பொற்காசுகளை சமானமாக அளிக்கிறேன்.

ஆஸ்தான புலவர்: கொடைவள்ளல் அழுமூஞ்சிவர்மா! உங்கள் அல்பத்தனத்துக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கேன். வாழ்க எலியூர் மன்னன்! வளர்க அவன் புகழ்!

(முடிவுற்றது)

பிகு: இந்த நாடகம் ரிச்மன்ட் தமிழ் சங்கம் ப்ளாக் தளத்திற்காக மே 2009 ல் நான் எழுதியது.

இது ஒரு குத்தமா? நீங்களே சொல்லுங்க

நீங்க நம்ப மாட்டீங்க. நானும் கடந்த சில மணி நேரங்களா ரொம்ப கடுமையா முயற்சி செய்யறேன். வீட்ல பல அறைகளில் உட்கார்ந்து பாத்துட்டேன் . உட்கார்ந்திருந்த நாற்காலியை மாத்தி பாத்துட்டேன். சோபாவில் சாய்ந்து மோட்டை வெறித்து பாத்துட்டேன். ஆழ்ந்த யோசனைக்கு அறிகுறியா விரல் நுனியால் மோவாய் கட்டையை தட்டி பாத்துட்டேன். வைரமுத்து கணக்குல குறுக்கும் நெடுக்குமா நடந்து பார்த்துட்டேன். ம்ஹூம் ..........பதிவுக்கு ஒரு நல்ல ஐடியா வரக்காணுமே! நம்ம கற்பனை குதிரைய தட்டி ஓட விடலாம்னு பார்த்தா அது சுருண்டு படுத்து தூங்கிடுத்துங்க.

நாட்டுல மக்கள் அரைப்பக்கத்தில் அம்சமா கதையே எழுதறாங்க. நமக்கு மட்டும் மைண்ட் இப்படி லைசால் ஸ்ப்ரே போட்டு தொடச்ச சமையல் மேடை போல இருக்குதேன்னு கவலையோடு நான் ஜன்னல் வழியே தோட்டத்தை பாத்துண்டு இருந்த போது தான் அது மறுபடி கண்ணில் பட்டுது. பத்து நாளைக்கு முன்னாடி பூத்து குலுங்கிய எங்க வீட்டு செம்பரத்தி செடி இப்போ வாடி வதங்கி கொல்லையில் தொட்டியில கிடக்குது.

முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேன். அந்த செம்பருத்தி செடி காலமாப்போனதுக்கு நான் காரணம் இல்லைங்க. எங்க வீட்ல செத்துப்போன வேறு ஐந்தாறு செடிகளுக்கும் நான் பொறுப்பு இல்லீங்க. ஊருல வேறு விதமா பேச்சு இருக்கும். ஆனா நீங்க நம்பாதீங்க. நடந்ததை நான் வெவரமா உங்களுக்கு சொல்லறேன்.

என் கணவர் சில மாசங்களா அடிக்கடி வேலை விஷயமா வெளியூர் போறார். ஊரில் இருக்கும் போது சின்ன குழந்தைகளை பராமரிக்கிற மாதிரி செடிகளுக்கு தண்ணி விட்டு வளர்ப்பார். ஏன் நான் தண்ணி விட மாட்டேனான்னு கேக்கறீங்க, அப்படி தானே? விடக்கூடாதுன்னு எண்ணம் கிடையாதுங்க. சின்ன வயசுல ஞாபக சக்திக்கு சூரணம் குடுத்த போது நான் துப்பிட்டேன் போல இருக்கு. எனக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி. என் நினைவாற்றலின் மேல் நம்பிக்கையற்று தான் என் கணவர் தானே செடிகளுக்கு தண்ணி விட்டு, பூச்சி மருந்து அடிச்சு எல்லாம் செய்வார்.

போன மாசம் ரெண்டு வாரம் வெளியூர் போறதுக்கு முன்னாடி என்னைய உக்காத்தி வெச்சு எந்தச்செடிக்கு எத்தனை கப் தண்ணி விடணும்னு வெவரமா சொல்லிட்டு தான் போனார். இந்த முறையாவது இவர் ஊரிலிருந்து திரும்பும்போது வாய் பிளக்குமாறு நாலு இலை பச்சையாக இருக்கட்டும்னு நானும் ரெண்டு நாள் முனைஞ்சு விட்டேங்க. மூணாவது நாள் செம்பருத்தி செடியோட இலைல கொஞ்சம் ஓட்டைங்க இருந்துது. ரெண்டு தடவை அதை சுத்தி வந்து பாத்துட்டு யோசனையா நகந்து போயிட்டேன். அடுத்த நாள் முழு செடியிலும் பூச்சி கடித்து நம்மூர் சல்லடை மாதிரி ஓட்டைங்க.

இது என்ன அனாவசியமான வம்பு? இந்த செடிக்கு ஒண்ணுன்னா பழி என் மேலல்லவா வரும்? கவலையோட நிமிர்ந்து பார்த்த போது அறை மூலையில் இருந்த விண்டக்ஸ் கண்ணில் பட்டது. ஆஹா, என் கை கொடுக்கும் தெய்வம். எல்லாக்கிருமிகளையும் அழிக்கும் தீர்த்தம். இதன் வீரியத்துக்கு முன்னாடி எந்த பூச்சி ஜெயிக்கும்னு நினைச்சு விண்டக்ஸ் பாட்டிலால் செடியை ஸ்ப்ரே பண்ணி விட்டு 'பகவானே நீ விட்ட வழி' அப்படின்னு போயிட்டேன். மொதல்ல எல்லா பூச்சியும் செத்து போச்சு (நான் சொல்லலை இது வேலை செய்யும்னு?). பிறகு எல்லா இலையும் உதிர்ந்து போச்சு. அப்புறம் செடியே வதங்கி, சுருண்டு படுத்துருச்சுங்க. மனசு நிறைய துக்கத்துல அடுத்த ஒரு வாரம் நானே சரியா சாப்பாடு, தண்ணி இல்லாம வளைய வந்ததுல, மிச்சம் மீதி செடிகளுக்கு தண்ணீர் விட மறந்து போச்சு. இது ஒரு குத்தமா? நீங்களே சொல்லுங்க.

ஊருக்கு போயிட்டு வந்து கோபமா என் மேல் பாய்ந்த கணவரிடம் நிச்சயமா சொல்லிட்டேன். அடுத்த பயணத்தின் போது வீட்டுல இருக்கிற எல்லா செடிகளையும் கூடவே எடுத்துட்டு போக சொல்லி. இவர் பாட்டு ஊருக்கு கிளம்பி போக, இவர் தெரு முனை திரும்பறத்துக்குள்ள செடிகளெல்லாம் மறியல் போராட்டம் செய்து தற்கொலை முயற்சியில் இறங்கினா நான் என்ன செய்ய முடியும், சொல்லுங்க?

பிகு: இது ரிச்மன்ட் தமிழ் சங்கம் ப்ளாக் தளத்திற்காக மே 2009 ல் நான் எழுதிய ஒரு கட்டுரை.

Sunday, June 27, 2010

மட்டை தேங்காய் தெரபி

என்னை மறை கழண்ட கேஸ்னு அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. அடிக்கடி டென்ஷன் ஆகற ஆளா இருந்தீங்கன்னா நீங்க கூட இந்த தெரபியை முயற்சி பண்ணலாம். அது என்ன மட்டை தேங்காய் தெரபி ன்னு கேக்கறீங்களா? அதை ஒரு கதை மூலம் உங்களுக்கு சொல்லறேன். தமிழ் சினிமாவில் flash back காமிக்க வட்டமா ஒரு சக்கரம் சுழன்று சுழன்று போகும் பாத்திருக்கீங்களா? இப்போ உங்க மனக்கண்ல அத பாத்துகிட்டே இந்தக் கதையை கேளுங்க. இது ஒரு உண்மை சம்பவம்.

------------------------------------------------------------------------
"இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம் சமையல் கடையை முடியுங்கோ." பெரியப்பா சொல்லிட்டு பரண் மேல் ஏறி மட்டை தேங்காய்களை இறக்க ஆரம்பித்தார். அப்பா பூஜை அறையில் கணீர்னு ருத்ரம் சொல்லறது கேக்கறது. கடிகாரத்தை பார்த்தேன். இன்னிக்கு தினத்தை விட அப்பா ரொம்ப நேரமா பூஜை பண்ணறா. காரணம் எல்லோருக்கும் தெரியும். அது தான் இன்னும் அரை மணில ஆரம்பிக்கப் போறதே.

"ஸ்கூல் ஹோம்வர்க் எல்லாம் முடிச்சாச்சா? இன்னும் அரை மணியில ஆரம்பிச்சிடும். அப்புறம் உங்க யாரையும் பிடிக்க முடியாது. இப்பவே முடுச்சு வச்சுண்டா உங்களுக்கு தான் நல்லது" அம்மா அங்கலாய்ச்சிண்டே சமையல் அறைக்கு போறா. "இன்னிக்கு மைசூர் பாக் கிண்டிப் பார்ப்போம். சமையலோ சீக்கிரம் முடிஞ்சுடும். என்ன சொல்ற?" பெரியம்மா அம்மாவிடம் கேட்பது காதில் விழுந்தது. "இன்னும் அரை மணியுல இவாள்ளாம் பிசியாயிடுவா. நம்பள யாரும் புடுங்க மாட்டா. அப்போ ஸ்வீட் கிண்டலாம்." அம்மாவும் பெரியம்மாவும் சர்க்கரைப்பாகு எந்த பதத்துல இருக்கணும்னு வாதம் பண்ணறது கோடியாத்து வரைக்கும் கேட்டிருக்கும்.

"வாசல்ல தாழ்பா திறக்கற சத்தம் கேக்கறது. யாருன்னு பாருங்கோ." பெரியப்பா உள் அறையிலேர்ந்து சத்தம் போடறா. எட்டிப் பார்த்தேன். எதிர் ஆத்து மாமா வந்துண்டு இருந்தார். பூஜையை முடிச்சிண்டு அப்பா அப்போ தான் வெளியே வந்தார். "வாங்கோ கோபாலகிருஷ்ணன் சார். பூஜை இப்ப தான் முடிச்சேன். பிரசாதம் எடுத்துக்கோங்கோ." அப்பா தட்டை நீட்டினார். "ஒ இன்னிக்கி ஸ்பெஷல் பூஜையா? வெரி குட் வெரி குட். God is great. கடவுள் துணை நமக்கு இன்னிக்கு ரொம்ப வேணும் சார். இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு. சரியான நேரத்துல எங்காத்துல கரண்ட் போயிடுத்து. மாப்பிள்ளைகள் ரெண்டு பெரும் வேற இதுக்குன்னே இன்னிக்கு வந்திருக்கா." மாமா குரல் கவலையில் கனத்திருந்தது. "அதுக்கென்ன, எல்லாரையும் அழைச்சுண்டு இங்கே வந்துடுங்கோ." அப்பா சொல்ல கூடத்துல நுழைந்த பெரியப்பாவும் ஆமோதித்தார். "இதோ போய் எல்லோரையும் கூட்டிண்டு வந்துடறேன். ரொம்ப தேங்க்ஸ் சார்." மாமா வேக வேகமா சொல்லிட்டு கிளம்பினார்.

நாலு நாற்காலியையும் பின்னால் தள்ளி விட்டுட்டு கூடத்தில் மூணு பாயை தரையில் விரித்து போடும் போதே பக்கத்தாத்துலேந்து என் தோழி ஷோபனா வந்து சேர்ந்தாள். அடுத்த பத்து நிமிஷத்தில் அப்பா, பெரியப்பா, நான், என் அக்கா, தங்கை, ஷோபனா, எதிராத்து மாமா, ரெண்டு அக்காக்கள், அவங்க கணவர்கள், குழந்தைகள்னு கூடத்துல இருபது பேர் ஆஜரானோம். டீவியை ஆன் பண்ணிட்டு பெரியப்பா உட்கார்ந்தார். ரொம்ப டென்ஷனா இருந்தார். இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் மேட்ச் அப்படின்னாலே அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் டென்ஷன் தான்.

டாஸ் ல இந்தியா பேட் செய்ய வேண்டி வந்தது. கவாஸ்கர், ஸ்ரீகாந்த் தான் ஆரம்ப மட்டையாளர்கள். ஸ்ரீகாந்த் வழக்கம் போல பெவிலியன்லேந்து வரும் போது அண்ணாந்து சூரியனை பார்த்துண்டே மைதானத்துக்குளே வந்தார். சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அப்பா ஏதோ சுலோகம் முனுமுனுத்துண்டே பூஜை அறைக்குள் போவது தெரிந்தது. ஆட்டம் ஆரம்பிக்கரத்துக்குள்ள இப்படி டென்ஷன் படராறேன்னு நான் நினைக்கரச்சையே எதிர் ஆத்து மாமா "முருகனின் நாமத்தை சொல்லேண்டா; அந்த முகுந்தன் மருகனை வேண்டினேண்டா; சரவண பவனை கூப்பிடடா; அந்த கார்த்திகேயனை கேளேண்டா" அப்படின்னு பாட ஆரம்பிச்சார். பெரிய முருக பக்தர் அவர். சகலத்துக்கும் முருகனை கூப்பிடுவார்.

ஸ்ரீகாந்த் முதல் பந்தில் ஆறு அடித்து அமர்க்களமாக ஆரம்பிக்கிறார். எங்க எல்லோர் முகத்திலேயும் பரம சந்தோஷம். திடீர்னு எதிர் ஆத்து அத்திம்பேர் ஒரு கையளவு வெங்கடாசலபதி படத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து டீவீயில் ஸ்ரீகாந்த் முன் காமிக்கிறார். பாகிஸ்தான் பௌலேர் படம் டீவியில் வந்தவுடன் சடக்குன்னு வெங்கடாச்சலபதி படத்தை மறைச்சுட்டார். ரொம்ப தீவிர கிரிகெட் பிரியர்னு புரிஞ்சிண்டேன். ஸ்ரீகாந்த் இரண்டாவது பந்தை சுழன்று அடித்து நாலு ரன்கள் குவித்தார். திரும்பிப் பார்த்தேன். பெரியப்பா துண்டால் நெத்தி வேர்வையை துடைக்கறது தெரிந்தது. அடுத்த பந்தை தட்டி விட்டுட்டு ஒரு ரன் ஓட பார்த்து ரன் அவுட் ஆகத் தெரிந்தார் ஸ்ரீகாந்த். நல்ல காலம் மயிரிழையில் தப்பித்தார். டென்ஷனில் முகம் சிவக்க எழுந்த பெரியப்பா தனக்கு தெரிந்த இரண்டு கெட்ட வார்த்தையால் ஸ்ரீகாந்தை திட்டியபடி வேக வேகமாக சமையல் அறைக்கு சென்றார். பரணில் இருந்து காலையில் இறக்கிய மட்டை தேங்காய் ரெண்டை எடுத்துண்டு கொல்லைபுரத்துக்கு சென்று வெறி வந்தது போல அரிவாளால் தேங்காய் உரிக்க ஆரம்பித்தார். சமையல் அறை ஜன்னல் வழியா பார்த்த அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம். ராத்திரி அவியலுக்கு தேங்காய் இல்லைன்னு கவலையா இருந்தா. இந்த கிரிகெட் மேட்ச் முடியரதுக்குளே பத்து தேங்கயாவது நிச்சயம் உரிச்சிடுவான்னு சந்தோஷத்துல வேலையை கவனிக்க போனா. தேங்காய் உரிச்சு முடிச்சதும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த பெரியப்பா மறுபடியும் கூடத்துக்கு சென்று உட்கார்ந்தார்.

-----------------------------------------------

அவ்ளோ தாங்க கதை. மட்டை தேங்காய் தெரபி புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா பரவாயில்லை விட்டுருங்க. அப்படி ஒண்ணும் தலை போற விஷயமில்லை.

PS: This post was originally published in the RTS blogpage in May 2009.