Tuesday, May 10, 2016

காமாவுக்கு சோமா!

இப்படி ஒரு சவாலை நான் எதிர்ப்பார்க்கவே இல்லையே!  இந்த மனுஷனை என்ன தான் செய்யறது?

சின்ன வயசுல என் கூட பிறந்தவங்களோட  நான் போடாத போட்டியா? ஜெயிக்காத சவாலா?  ஒவ்வொரு ராத்திரியும் வீட்டு கூடத்துல தொங்கற அந்த ஒத்த உஷா சீலிங் fan நேர் அடியில இடம் பிடிச்சு படுக்கற போட்டியில  எவ்வளவு தில்லுமுல்லு பண்ணி என் தமக்கையோட ஜெயிச்சிருப்பேன்? சரி அப்படியே ஏதோ ஒரு போட்டியில தோத்து போயிட்டா கூட கவுந்து படுத்து அழாம இதெல்லாம் ஒரு மேட்டரா அப்படீன்னு தட்டி விட்டுட்டு அடுத்த சவாலை தேடிப்போற நான் இன்னிக்கு வாழ்க்கைல எதிர்ப்பாராத வந்த இந்த போட்டியில் ஸ்தம்பிச்சு போய் நிக்கறது என்னவோ உண்மை.

இந்த நூற்றாண்டிலேயே விஷயத்துக்கு வருவியா இல்ல நான் போயிட்டு நிதானமா அப்புறமா வரட்டான்னு நீங்க கோபமா கேக்கறது எனக்கு காதுல விழறது. ஏன்னா எனக்கு தான் பாம்பு செவியாச்சே!  உங்க நெற்றிக்கண் என் ஐயன் திருச்சிற்றம்பலத்துது  மாதிரி அம்சமா தான் இருக்கு. இருந்தாலும் அதை நீங்க தயவு செய்து மூடியே வைங்க.  இதோ வந்துட்டேன் விஷயத்துக்கு.

இன்னிக்கி என் புலம்பலின் காரணகர்த்தா எங்க ஊர் சாஸ்த்ரிகள்.   நல்ல மரியாதைக்குரிய மனிதர்.  வேதங்களை கரைச்சு குடிச்சவர்.   எங்க குடும்பத்தோட வைதீக காரியங்களை முன்னின்று அருமையா செய்து வைப்பவர்.  ஆனால் அதோட நிறுத்தாம  கல்யாணம் ஆகி கடல் தாண்டி வந்த என் வாழ்க்கைல கடந்த பத்து வருஷமா தமிழ் சீரியல் வில்லி மாதிரி விளையாடுவது தான் முடியலை.

இவர் சாதுர்ய போன் (அதான் smart phone) எப்போ வாங்கினாரோ அப்போ ஆரம்பிச்சது எனக்கு ஏழரை நாட்டு சனி.  இந்த குட்டி டப்பாவுக்குள்ள இத்தனை அதிசயமான்னு ஆச்சர்ய குறி போட்டு அதுக்குள்ள முழுசா ஐக்கியமானவர்  சில வாரங்களுக்கு பின்னாடி  அந்த குகையிலேர்ந்து வெளியே தலை தூக்கின போது இன்றைய கல்லூரி பசங்களை எல்லாம் தூக்கி சாப்படற மாதிரி சமூக வலைத்தள வல்லுநரா தான் வெளியே வந்தார்.   இன்னிக்கு வைதீகம் போக மிச்ச நேரம் எங்க குடும்ப மரத்தில் (family tree) இருக்கற எல்லாரோட (குஞ்சு குளுவான் உட்பட) பிறந்த நாள், மண நாள் மேலும் பல முக்கிய நாட்களுக்கு whatsapp, facebook மற்றும் ஈமெயில் மூலமா முதல் ஆளா வாழ்த்து சொல்வதை தொழிலாக செய்கிறார்.

காமாவுக்கு சோமா அப்படீங்கற வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?   என் பெரியப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சொற்சொடர் அது.  எங்க வீட்டு மூணாவது தெருவில் உள்ள ஒரு மாமி ஒரு நாள் அவங்க நாத்தனாரோட மச்சினர் பெண் கல்யாணத்துக்கு எங்களுக்கு பத்திரிகை வச்சு கூப்டுட்டு போனா.   அந்த மாமி கிளம்பி வாசல் கேட் கூட மூடியிருக்காது.  நானும் என் தமக்கையும் உடனே ஓடி போய் உள் அலமாரியை திறந்து அந்த கல்யாணத்துக்கு  எந்த புடவை கட்டலாம்னு முக்கியமான ஒரு சர்ச்சையில இருந்த போது தான் எங்க பெரியப்பா 'காமாவுக்கு சோமா' வை பத்தி எங்களை உக்கார வச்சு விளக்கமா சொன்னார்.   அதை சிரத்தையாக கேட்டுட்டு நாங்க விடாம கல்யாணம் போய் வந்தோம்ங்கறது வேற விஷயம்.

போன மாசம் என் சின்ன பெண்ணோட பிறந்த நாள்.  நான் பார்த்து பார்த்து அவளுக்கு பிடிச்ச பரிசுகள்  மற்றும் துணிமணிகள் வாங்கி முதல் நாளே பாக் செய்து ஆசையா அவள் எழுந்ததும் முதல் ஆளா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருந்தா, எங்க சாஸ்த்ரிகள் கத்தி கபடா இல்லாமலே என் கழுத்தை சூப்பரா வெட்டி சாய்த்தார்.   நடு ராத்திரி  12 மணிக்கு போர் களத்தில் படை வீரர்கள் மாதிரி வரிசையா whatsapp, email மற்றும் facebook மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை சகட்டு மேனிக்கு தட்டி விட்டிருக்கார்.  ஒரு தாய் என்ன தான் செய்ய முடியும்?

போன வருஷம் கொந்தளிச்சு எழுந்தேன் நான். இன்னிக்கு நானா நீங்களா பார்க்கலாம்னு கங்கணம் கட்டி எங்க திருமண நாளுக்கு என் கணவர் கண் திறந்ததும் அவர் போன் பாக்கறதுக்கு முன்னாடி நான் வாழ்த்து சொல்லி "அப்பாடா, ஒரு வழியா சாஸ்திரிகளை beat பண்ணிட்டேன்" னு சந்தோஷமா கை தட்டி கெக்கலி கொட்டின என்னை 'ஐயோ பாவம்' ங்கற மாதிரி பார்த்தார் என் கணவர். விசாரித்ததுல முதல் நாள் இரவே சாஸ்திரிகள் ஈமெயில் வாழ்த்து அனுப்பிட்டாராம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு இல்லைன்னு என் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லற நான் காந்திஜியின் கொள்கைகளை கடைசி வரை விடாமல்  கடைப்பிடிக்க  சாஸ்த்ரிகள் விடுவாரா?  காலம் தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும்.

-- மீனா சங்கரன்

Note:  There is absolutely no offense intended towards the subject of the post.  He is a highly revered man in the family and has my utmost respect.  The post is simply meant as light entertainment and should be taken as such with a pinch of salt. :-)

6 comments:

Anonymous said...

Meenakka nambittomm....

viswa said...

நகைச்சுவை எழுத்து நடை இயல்பாக வருகிறது தொடருங்கள்

வாழ்த்துக்களுடன்

விஸ்வநாதன்

தனிமரம் said...

அருமையான நகைச்சுவைப்பகிர்வு.

Meena Sankaran said...

@ அனானி - என் மேல இப்படி ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானமா? நெஞ்சு பொறுக்குதில்லையே!

@ விஸ்வா & @ தனிமரம் - நன்றிகள் பலப்பல! :-)

Meena Sankaran said...

ரொம்ப நன்றிங்க தனிமரம்.

Unknown said...

nowadays these sastrigal invade our privacy also
once i had to firmly tell our sastrigal to mind his work only
when i come to know his interference in our family matters...