Thursday, December 14, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 2

நான் வெளிநாட்டிலேர்ந்து சென்னைக்கு  வந்து இறங்கி இன்னியோட ஒரு வாரம் ஆகிறது.  தினமும் தேடித் தேடி கச்சேரி சபாக்களை விஜயம் பண்ணினதுல  இப்போ எந்த கச்சேரிக்கு போனாலும் கண்ல படற மாமா மாமிகளை பார்த்து சிரிச்ச முகமா ''சௌக்கியமா, இன்னிக்கு கேன்டீன்ல என்ன மெனு'' ன்னு கேக்கற அளவுக்கு என் நட்பு வட்டம் பெருகியிருக்குன்னா பாருங்களேன்!

ஊருக்கு வந்திறங்கிய ரெண்டாம் நாள் சாயந்திரம் நான் போன இடம் இன்னிக்கு சங்கீத உலகத்தின் சிகரத்தில் இருக்கும்  ஒரு சகோதரிகளின் கச்சேரிக்கு.  அதெப்படி வாயை திறந்தாலே இவங்க  ரெண்டு பேருக்கும் பாட்டு சும்மா காசி அல்வா மாதிரி  வழுக்கிக் கொண்டு வந்து விழறது. அப்படிங்கற அதி முக்கிய ஆராய்ச்சியை அதிக நேரம் செய்யாமல் கச்சேரியை ரசிக்க ஆரம்பிச்ச நான் உட்கார்ந்திருந்தது எட்டாவது வரிசையில்.

தர்பார் ராக வர்ணத்திலே சபையை சுண்டி இழுக்க ஆரம்பித்த   ரெண்டு பேரும் அடுத்தடுத்து ஆரபி, ஹிந்தோளம் மற்றும் பந்துவராளி கீர்த்தனைகளை அருமையாய் பாடி ஒட்டு மொத்தமா மக்களை மயக்கி கை தட்டலை வாங்கினது குறிப்பிடத்தக்கது..  ரசிப்போட உச்சத்துல  தலையை இப்படியும் அப்படியுமா ஆட்டினதுல நாலாவது பாட்டு முடியறதுக்குள்ள எனக்கு கழுத்துல சரியான சுளுக்கு.  எனக்காவது பரவாயில்லை. பக்கத்துல ஒரு மாமா  சபாஷ், பலே சொல்லி சொல்லியே நாக்கு வறண்டு, ஓய்ந்து போய் உக்காந்திருந்தார் பாவம்.

எல்லா சங்கீத வித்துவான்களுக்கும்  விதூஷிகளுக்கும் இந்த  ரசிகையோட பணிவான வேண்டுகோள் இது தான்.  அடுத்தடுத்து எல்லாப் பாட்டையும் நீங்க அசத்தலா பாடிக்கொண்டே போனா   ரசிகர்களோட நிலைமை என்னன்னு கொஞ்சமாவது நீங்க  யோசனை பண்ணி பார்க்கணும்.  அப்பப்போ நடுவுல கொஞ்சம் சுமாரா ஒரு பாட்டு பாடினா தானே நாங்களும் ஒரு வாய் மோரோ, தண்ணியோ குடிச்சு  ஆசுவாசப்படுத்திக்க முடியும்?  நீ இரங்காயெனில் புகல் ஏது அப்படீன்னு அடுத்த சபாவுக்குள்ள நுழைஞ்சு உங்களை பார்த்து நான் பாடறதும் பாடாததும் உங்க கைல தான் இருக்கு, சொல்லிட்டேன்.

முதல் நாலு பாட்டு வரை  தெம்பா தலை ஆட்டிண்டு இருந்த  எனக்கு வந்த சோதனை அடுத்ததா சகோதரிகள் பாடின சஹானா ராக ''கிருபை நெலகொன்ன'' கீர்த்தனை மூலமா தான்.  சஹானா ராகம் சும்மாவே சொக்குப் பொடி போடும்.  எனக்கோ ஜெட் லாக்.  இந்த சகோதரிகள் வேறு  தேன்ல குழைச்சு நெய்ல தோச்ச குரலில்  மக்களை அசத்தித் தான் ஆவோம்னு  கங்கணம் கட்டிண்டு பாடினா நானும் தான் என்ன செய்ய முடியும்? 

எட்டாவது வரிசைல  கண் சொக்கி போய் உட்கார்ந்திருந்தது என் குத்தமா?  பிரிய மாட்டேன்னு அடம் பிடிச்ச இமை ரெண்டயும்  கையால எத்தனை நேரம் தான் நானும் பிரிச்சு பிரிச்சு விட முடியும்?  எடுத்த முயற்சியில் கை  விடா விக்ரமாதித்தன் போல என் கன்னத்தை நானே வேகமா பட்டு பட்டுன்னு அடிச்சு கூட பார்த்தேன்.  மேடையிலிருந்த சகோதரிகள் என்னை மரியாதையா (?) பார்த்தது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த மாமா மாமி எல்லாம்  என் கிட்டேர்ந்து  நைசா நகர்ந்து அடுத்த வரிசைக்கு போய் உட்கார்ந்தது தான் மிச்சம். தூக்கம் கலைஞ்ச பாடு இல்லை.

சரி, கான்டீன் பக்கம் போய் ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு வருவோம்னு நினைத்து கடிகாரத்தை பார்த்தா ராத்திரி மணி ஏழே முக்கால்.  அடடா எட்டாக போறதான்னு  உடனே பாய்ஞ்சு கான்டீனுக்கு தலை தெறிக்க ஓடினேன்.  ஏன் என்ன அவசரம்னு விவரமில்லாம நீங்க கேட்டாலும் நான் பொறுமையா தான் உங்களுக்கு பதில் சொல்லுவேன்.

இந்த ஒரு வாரத்துல நான் அனுபவப்பட்டு கற்றது இது தான்.  ராத்திரி சரியா மணி எட்டு அடிச்சா சபாவில் உள்ள பாதி மாமாக்களும் மாமிகளும் கொண்டு வந்த துணிப்பையை தூக்கிண்டு கும்பலா வெளிநடப்பு பண்ணிடுவா.  அந்த சரஸ்வதியே பூலோகம் இறங்கி வந்து கச்சேரி பண்ணினாலும் இதே கதி தான்.  என்னோட காப்பி கொட்டை சைஸ் மூளையை கசக்கி நான் யோசனை பண்ணதுல தான் தெரிஞ்சுது இவா எல்லாம் சாப்பிட்டுட்டு சுகர் மாத்திரை போடற நேரம் அதுன்னு.  கிளம்பர கும்பல்ல பாதி பேர் தோசை கனவோடு வீட்டுக்கு போனா மிச்ச பேர் கான்டீன் டேபிள்ல மாத்திரை டப்பாவை திறந்துண்டு உட்கார்ந்திடுவா. இவாளுக்கு முன்னாடி போய்  கர்சீப் போட்டு சேர் பிடிக்க தான் நான் அப்படி தலை தெரிக்க ஓடினேன்.

வந்ததோ வந்தோம், காப்பிக்கு துணையா இருக்கட்டுமேன்னு ஒரு தட்டு குழிப் பணியாரத்தையும் சேர்த்து சொல்லிட்டு தான் உட்கார்ந்தேன். இந்த சகோதரிகளோ  இன்னும் குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது மேடையில் கலக்குவா போல தெரியுது.  கை  தட்ட எனக்கும் தான் தெம்பு வேண்டாமா சொல்லுங்கோ?

-மீனா சங்கரன்


3 comments:

Mythili Sivakumar said...

Ha ha, loved the reason for kuzhipaniyaram

Anonymous said...

Nice, I am going to Chennai end of this Month. Let me see, how many katcheries I can attend. Good luck keep going maa. Waiting for your next post. :)

Meena Sankaran said...

@Mythili - There is always a reason to have kuzhippaniyaaram. I strongly believe that. :-)

@Anonymous - Thanks for stopping by, my friend. May your upcoming Chennai trip be as wonderful and memorable as mine has been. Enjoy the Kutcheri season!