Tuesday, July 13, 2010

கண்டு பிடிச்சேன், கண்டு பிடிச்சேன்!

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு இந்த விளம்பரத்திற்கு பின் தொடரும்.

"அம்மா...இன்னிக்கு டின்னருக்கு என்ன? இட்டிலியா? வேண்டாம். தோசையா? வேண்டவே வேண்டாம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ்ஸில் பீட்சா வாங்கலாமா? தேங்க்ஸ் அம்மா. நீ தான் என் செல்ல அம்மா."

இட்டிலி தோசையெல்லாம் அந்தக் காலம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ் பீட்சா வாங்கி கொடுங்கள். நல்ல அம்மா என்று பெயர் எடுங்கள்.
-----

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு.

வணக்கம். இன்றைய காணாமல் போனவர் அறிக்கையில் முதலிடம் பெறுவது எளிமையில் பொலிவுடன் ஜொலித்த அழகுச் சென்னை. இந்நகர் தொலைந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. காணாமல் போன இந்நகரை கண்டு பிடிக்க உதவும் சில முக்கிய அடையாள அம்சங்கள் - தெருவில் பல்பத்தில் கோடு கிழித்து பாண்டி விளையாடும் குழந்தைகள், பாவடை சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம் பெண் குழந்தைகள், செல் போனில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் செய்து சுற்றியுள்ள உலகத்தை மறக்காத நகர் மக்கள், இடிக்காமல் நடக்க இடமில்லாத ஊரில் அடுக்கடுக்காக கட்டடங்கள் கட்டி 'ஷாப்பிங் மால்' என்று நெரிசலை அதிகரிக்காத கடைகள், பாஸ்ட் புட் அல்லது காபி அரங்கங்களை விடுத்து தெருவோர கல்வெட்டில் கூடி அரட்டை அடிக்கும் கல்லூரி மாணவர்கள். இந்நகரைக் கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு 'காணாமல் போனவர் நிதியில்' இருந்து தகுந்த சன்மானம் வழங்கப்படும். இந்த காணாமல் போன நப(க)ரைப் பற்றிய விவரம் தெரிந்தால் நீங்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 555-5555.

----

ட்ரிங் ட்ரிங்......ஹலோ, யாரு பேசறது? மீனா சங்கரனா? ஆமாம் காணாமல் போனவர் தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி எண் இது தான். சொல்லுங்க. என்னது, காணாமல் போன சென்னையை கண்டு பிடிச்சுட்டீங்களா? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. (தொலைபேசியின் வாயை மூடி கொண்டு சுற்றியுள்ளவர்களிடம் பரபரப்புடன் "யாரோ மீனா சங்கரனாம்....தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சுட்டாராம்." சக ஊழியர் "முதலில் எல்லா விவரங்களையும் லைன் கட்டாகரத்துக்கு முன்னாடி வாங்கு. அப்புறம் சந்தோஷப்படலாம்."

"மேடம், சொல்லுங்க. எங்க பாத்தீங்க சென்னையை? மைலாப்பூர் கபாலீச்வரர் கோவில் தெப்பக்குளம் பக்கத்திலா? நீங்க பார்த்த அடையாளங்களைச் சொல்லுங்க....நான் எழுதிக்கறேன்.

சந்நிதி தெருவுல நடக்கவே இடமில்லாமல் நிரம்பி இருந்த தெருவோரக் கடைகள்ள பூஜை சாமான்கள், அர்ச்சனைக்கு தேங்காய், மண் பானைகள், பச்சை காய்கறிகள், மல்கோவா மாம்பழம், முல்லை, மல்லி, சாமந்தி பூக்கள் எல்லாம் விற்பனைக்கு பரத்தி வச்சிருக்கும் போது , இதுக்கு நடுவுல பூந்து எப்படியோ நாலு கார்கள், ரெண்டு சக்கர வண்டிகள், எட்டு ஆட்டோ எல்லாம் போட்டி போட்டுண்டு இடிச்சுண்டு போறதை பார்த்தீங்களா?

அப்புறம்? திருவெல்லிக்கேணி வீடுகள் மாதிரி இரும்புக் கம்பி வெச்ச ஜன்னல்கள் கொண்ட பழங்கால வீடுகள் அங்கே இருந்ததா? அதில் பல வீடுகளில் வாசல் திண்ணைகளில் அம்மாக்கள் உட்கார்ந்து அவங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு எண்ணை வச்சு இழுத்து வாரி மணக்கும் பூச்சரங்களை வெக்கரதைப் பார்த்தீங்களா. வெரி குட், வெரி குட்.

வடக்கு, தெற்கு மாட வீதிகளில் பல கடைகளில் சீசன் இல்லாத போது கூட கொலு பொம்மை வச்சு விக்கறாங்களா? பெப்சியும், கோக்கும் குடிச்சு அலுத்து போன உங்களுக்கு அருமையான கரும்பு ஜூஸ் கிடைச்சுதா? பேஷ், பேஷ். சொல்லுங்க மேடம். எப்படி, எப்படி? எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாத செருப்பு தையல்காரரை அங்கு பார்த்தீங்களா? கிரி ட்ரேடிங் கடைக்குள் நுழையும் போதே தசாங்கம் வாசனை மூக்கை துளைக்கிறதா? கோவில் பக்கத்தில் வீட்டில் செய்யறது போல வெல்லக் கொழுக்கட்டையும், உப்புக் கொழுக்கட்டையும் வாங்கி சாப்டீங்களா?

மேடம், தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சு விவரம் சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. சன்மானம் விவரத்துக்கு இன்னொரு நாள் கால் பண்ணுங்க.(!!!!!?????)

------------------------

போன வருஷம் 2009 கோடை விடுமுறைக்கு இந்தியா சென்ற போது, அங்கிருந்து எழுதி ஜூலை மாதம் RTS ப்ளாக் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

8 comments:

எல் கே said...

sanmaanam kidachutha illaya atha sollunga

மீனாமுத்து said...

ஹல்லோ.. மீனா!

சும்மா.. தூள் கிளப்பறீங்க!
என்தோழி துளசி(டீச்சர்)மாதிரி!

எதேச்சையா இந்த நெற்குப்பை தும்பியை பார்த்தேனா.. அப்படியே தும்பியை தொடர்ந்தா... இங்க கொண்டு வந்து விட்டுருச்சு!

சரி வந்தது வந்துட்டோம் இதை மட்டும்...,இல்லை இதை மட்டும் ..., அட.. இது நல்லாருக்கே! இது... ? இப்படியே... என்னமா உள்ளுக்கு இழுத்துகொண்டு போயிட்டீங்க! எழுத்தில் நகைச்சுவை
தானா வருது!ஒவ்வொரு பதிவையும் மிகவும் ரசித்தேன்.நன்றி மீனா.
மீனா

நானும்தொடர ஆரம்பிச்சுட்டேன்.. :)

soundr said...

//... பல வீடுகளில் வாசல் திண்ணைகளில் அம்மாக்கள் உட்கார்ந்து அவங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு எண்ணை வச்சு இழுத்து வாரி மணக்கும் பூச்சரங்களை வெக்கரதைப் பார்த்தீங்களா.....

எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாத செருப்பு தையல்காரரை அங்கு பார்த்தீங்களா? //

:(

http://vaarththai.wordpress.com

Meena Sankaran said...

நல்லதுக்கு காலமில்லைன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க எல்.கே.? சமானமாவது சென்னையிலாவது கிடைக்காரதாவது, நல்லா கேட்டீங்க போங்க.

Meena Sankaran said...

வாங்க மீனாமுத்து! தும்பியை எங்கயாவது பிடிச்சீங்கன்னா நான் ரொம்ப நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க. அவர் இல்லைனா நீங்க எங்க இந்த பக்கம் வர்றது? :-)

//எழுத்தில் நகைச்சுவை
தானா வருது!ஒவ்வொரு பதிவையும் மிகவும் ரசித்தேன்.நன்றி மீனா.//

பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி மீனா. (மாத்தி மாத்தி நாம நன்றி சொல்லிகிட்டே இருப்போம் போல இருக்கே!)

Meena Sankaran said...

ஏன் வருத்தப்படறீங்க சவுண்ட்.ஆர்? உங்க செருப்பு பிஞ்சு போச்சா? ஒரு நடை பாக்காம மயிலாப்பூர் பக்கம் போங்க, தெச்சிரலாம்.

Shobha said...

சொர்கமே ஆனாலும் அது மயிலாப்பூரை போல வருமா

வார்த்தை said...

//ஏன் வருத்தப்படறீங்க சவுண்ட்.ஆர்? உங்க செருப்பு பிஞ்சு போச்சா? ஒரு நடை பாக்காம மயிலாப்பூர் பக்கம் போங்க, தெச்சிரலாம்//
ஆ.... மேடம் அது "சமுதாயம்" மேல இருக்குற ரியல் பீலிங்....
(சே, இந்த உலகம் நம்மள சீரியஸாவே எடுத்துக்க மாட்டேங்குதே....)

http://vaarththai.wordpress.com