Friday, December 8, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 1

சாம்பார் வடைக்கு அப்புறமா நான் அதிகமா ஜொள்ளு விட்டுக்  கணட  கனவு, மார்கழி மாசத்துல சென்னைக்கு  வந்து தினமும் ஆசை தீர பாட்டு கச்சேரிகள் கேட்பது தான்.  நான் இத்தனை நாளா கஷ்டப்பட்டு விட்ட ஜொள்ளுக்கு பலனில்லாம போகலை.  கடவுள் ஒரு வழியா இந்த வருஷம் என் கனவை நனவாக்கிட்டார்.

பெட்டி நிறைய புடவையும் மனசு நிறைய கச்சேரி ஆசையுமா நேத்து சென்னை வந்து இறங்கின எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி.  பல வருஷங்களா நானும்  சென்னைக்கு வந்து போயிண்டு இருக்கேன்.  எப்பவும் நெத்திக் கண்ணை திறந்து உக்கிரமா முறைச்சு பார்த்து, தமிழ் சீரியல் மாமியார்களை நினைவுபடுத்தும்  சூரியனை பார்த்தே பழக்கப்பட்ட  எனக்கு இந்த இளம் சூட்டோட இனிமையா வரவேற்கும் மார்கழி மாச சூரியன் புதுசு.  பயணம் ஆரம்பமே மனசுக்கும் உடம்புக்கும் இதமா இருந்தது.

காப்பி குடிச்ச கையோட கச்சேரி லிஸ்ட்டை பார்க்க காலை பேப்பரை புரட்டின எனக்கு கண்ணை இருட்டிண்டு வந்தது தான் மிச்சம்.  ஒரு ஊர்ல  இவ்வளவு சபாக்களா? ஒரே நாள்ல, ஒரே நேரத்துல இவ்வளவு கச்சேரியா? எதுக்கு போறதுன்னு  ரொம்ப நேரம் குழம்பி ஒரு வழியா இங்கி பிங்கி பாங்கி தயவுல ரெண்டு கச்சேரியை தேர்வு செய்து நிமிர்ந்த போது ஏதோ மலையை புரட்டின உணர்வு.

அடுத்தடுத்து நடக்கப் போகும் ரெண்டு கச்சேரிகளை கேட்க ஆவலா (ஆனா கொஞ்சம் லேட்டா) அரங்கத்தில் நுழைஞ்ச நானும் என் கணவரும்  ஆச்சர்யத்தில் அப்படியே நின்னுட்டோம் .  நாலு தக்காளியை தூக்கி கும்பலுக்கு நடுவில்  போட்டா மிக்சி இல்லாமலே நிமிஷமா சட்னி ரெடியாரா மாதிரி ஒரு மக்கள் சமுத்திரம்!  இதே வித்வான் எங்க ஊருக்கு வந்து கச்சேரி பண்ணின போது ஹாலில் ஈ ஓட்ட தனியா ஆள் போட்ட ஞாபகம். சொத்தில்  பாதி எழுதி வைக்கறேன்னு சத்தியம் பண்ணாக்கூட கச்சேரிக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்கற எங்க ஊர் மக்களை பார்த்தே பழகிட்ட எனக்கு இது ஒரு புது அனுபவம்.

எங்களுக்கு முன்னாடியே வந்து எங்களுக்காக  ரெண்டு சீட் போட்டு வச்சிருந்த என் தங்கைக்கு நான் கணக்கில்லாமல் கடன் பட்டிருக்கேன். காலேஜ் போற காலத்துல  காலை நேர அவசரத்தில்  எனக்கு பிளவுசுக்கு பட்டன் தச்சு தந்ததிலேர்ந்து இப்போ வருஷா வருஷம் நான் இந்தியா வரதுக்கு முன்னாடியே எனக்காக  பார்த்து பார்த்து துணிமணி வாங்கி, நான் ஒவ்வொரு முறையும் கண்டதையும் சாப்பிட்டு வயித்த வலியில் சுருண்டு படுக்கும் போது  விடாம என்னோட ஆஸ்பத்திரிக்கு அலைவது வரை பாசத்தில் அவளை மிஞ்ச நான் பல பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.

இதென்னடா காமெடி படம் போட்டா பாசமலர் படம் ஓடுதேன்னு நீங்க நினைக்கறது எனக்கு புரியாம இல்லை. அப்பப்போ சீரியஸ் சீன் இல்லைனா காமெடிக்கு என்ன வேல்யூ சொல்லுங்க?  சரி சரி  இதோ அடுத்த சீன் மாற்றம்.

ஜன சமுத்திரத்தில் நீச்சல் அடிச்சு ஒரு வழியா எங்களுக்கான சீட்டுக்கு வந்து சேர்ந்த போது ஒரு பன்னீர் சோடா பாட்டிலை நினைச்சு நான் ஏக்கப்பட்டது உண்மை தான் ஆனால் மேடையில் மோஹனம் ராக ஆலாபனா சூடு பிடிக்க ஆரம்பிச்சதுல பன்னீர் சோடா நினைவை  தற்காலிகமா ஒத்தி வைக்க முடிவு பண்ணி உட்கார்ந்தேன்.  ஆ......என்னதிது? இந்த பிளாஸ்டிக் சேரோட மிச்ச பாதி எங்கே போச்சு? அவசரமா மத்தவங்க சேரையெல்லாம் எட்டிப் பார்த்ததுல சேர் கம்பெனிக்காரன் ஒட்டு மொத்தமா எல்லார்க்கும் கரும்புள்ளி செம்புள்ளி அடிச்சுட்டான்னு புரிஞ்சது.  வாழ்க்கைல நான் அதிகமா எதுக்கும் ஆசைப்பட்டது கிடையாது. உட்காரற சேர்ல சீட் கொஞ்சம் பெருசா இருக்கணும்னு ஆசைப்படறது அவ்வளவு பெரிய தப்பா? தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடி ஆடி எவ்வளவு நேரம் தான் ஒருத்தர் பாலன்ஸ் பண்ண முடியும் சொல்லுங்க?

முன் சீட் சேரை பிடிச்சிண்டு ஒரு வழியா சமாளிச்சு உட்கார்ந்த போது தான் அதை கவனிச்சேன்.  கண்ணுக்கு தெரிஞ்ச வரைக்கும் எனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்தது எல்லாம் மாமாக்களும் மாமிகளும்  தான்.  சொல்லி வச்சா மாதிரி எல்லா மாமிகளின்  கொண்டையிலும் சின்னதா கிள்ளிய மல்லிப்பூ சரம்.  மாமாக்கள் எல்லோரும் இசைக்கு ஏற்ற மாதிரி தலையையும் கையையும் ஆட்டி ஆட்டி ரசிப்பதை பார்க்க ரொம்ப அழகா இருந்தது.  ஒரு சிலர் தாளம் கூட போட்டார்கள் ஆனா யார் பாடற பாடலுக்குன்னு தான் சரியா புரியலை.

மாமிகளில் ஒரு சிலர் ரொம்ப trendy யா ப்ளௌஸ் போட்டிருப்பதை என் தங்கை தான் சுட்டி காமிச்சா.  எனக்கு அதிலெல்லாம் கொஞ்சம் விவரம் பத்தாது. அவ சொல்லி தான் எனக்கு தெரியும் இப்போதைய trend புடவைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம ப்ளௌஸ் போடுவது அப்படீன்னு.  பச்சை புடவைக்கு நீல கலர் ப்ளௌஸ் போட்டு கலக்கிய மாமிக்கு தான் முதல் பரிசுன்னு என் தங்கையோட கலந்தாலோசிச்சதுல புரிஞ்சுண்டேன்.  குனிஞ்சு என் புடவை பிளவுசை பார்த்ததுல வெக்கமா போச்சு. யூனிபோர்ம் மாதிரி மாட்சிங்கா போட்டுண்டு வந்திருந்தேன்.  அரங்கத்துல என்னை மாதிரி மாட்சிங்கா புடவை ப்ளௌஸ் போட்டிருந்த சில பெண்களை பார்த்து 'பாவம் NRI ' யா இருக்கும்னு நினைச்சு பெருமூச்சு விட்டு மேடையில் கவனத்தை வைத்தேன். 

காப்பி ராகம் காதில் தேனா பாய்ந்ததில் திடீர்னு வயித்துக்கும்  ஏதாவது பாய்ந்தா நல்லா இருக்கும்னு தோணித்து.  இந்த அரங்கத்தில் சாப்பிட எதுவும் கிடைக்காதுன்னு நல்ல காலம் முன்னாடியே விசாரிச்சு கண்டுபுடிச்சதுல  நான் வரும்  வழியிலேயே அடையார் ஆனந்தபவன் ல காரை நிறுத்தி கார போண்டா, கார கொழுக்கட்டை மற்றும் சமோசா எல்லாம்  பாக் பண்ணி சமயோஜிதமா வாங்கிண்டு வந்துட்டேன்.  செவிக்கு மட்டும் உணவு போதும்னு சொல்ல நான் என்ன லூசா? காபியோடு ஒரு கார போண்டாவை உள்ள தள்ளின போது தேவாம்ருதமா தான் இருந்தது.

எனக்கு முன்னாடி உட்கார்திருந்த மாமா கார போண்டா வாசனைல திரும்பி  பார்த்து எங்களை கொஞ்சம் முறைச்சா மாதிரி இருந்தது.  மாமா நீங்க தப்பு தப்பா தாளம் போட்ட போது நான் உங்களை முறைச்சேனா? அப்போ நீங்க மட்டும் ஏன் என் கார வடைல கண் போடறேள்?  அப்படீன்னு நான் mind வாய்ஸ் ல மாமாவோட செல்லமா சண்டை பிடிச்ச முடிச்ச போது மேடையில்  கமாஸ் அமர்க்களப்பட்டுண்டு இருந்தது.  வித்வான் கமாஸோட இண்டு இடுக்குல எல்லாம் பூந்து விளையாடிண்டு இருந்தார்.  தமிழக் கடவுளான முருகன் மீது அழகான ஒரு தமிழ்ப் பாட்டு.  கார போண்டாவை காத்தோடு  விட்டுட்டு பாட்டில் ஐக்கியமாகி கச்சேரி சுருட்டி ராகக் கீர்த்தனையோடு முடியும் போது தான் நான் நிஜவுலகுக்கு திரும்பினேன்.

கச்சேரி முடிஞ்சு கும்பலோட வெளியில் வந்த போது தான் கவனிச்சேன் என்னை சுத்தி எத்தனை அருமையான சங்கீத வித்வான்கள் நடந்து வராங்க அப்படீன்னு.  வலது பக்கம் ஒரு மாமா வராளியை கிழிக்க இடது பக்கம் ஒரு மாமி பைரவியை முணுமுணுக்க  என்னோட கச்சேரி கனவை இவ்வளவு அருமையா நனவாக்கிய கடவுளுக்கு நன்றி கூறி நானும் ஏதோ பாட்டை முணுமுணுத்துண்டே என் கணவரோடு வீட்டை பார்த்து நடையை கட்டினேன்.

-தொடரும்

3 comments:

Anonymous said...

அருமையான பதிவு, மீனா.

சரியான தலைப்பு. கச்சேரியவிட கலாட்டாதான் ஜாஸ்தி :)
- நாகு

வேதாந்தி said...

காபியும் காரவடையும் எவ்வளவு நேரம் கையில் இருந்ததுன்னு தெள்ளத் தெளிவாத் தெரியுது. நீங்கள் காப்பியில் ஆரம்பித்து பேப்பரை சுருட்டி போடும் போது, காப்பியில் ஆரம்பித்த கச்சேரியும் சுருட்டியோடு முடிந்தது. என்ன பொருத்தம்

Meena Sankaran said...

@ Nagu - கச்சேரியை critique பண்ண எனக்கு ஞானம் பத்தாது நாகு. அதனால தான் கச்சேரியை விட கலாட்டாவை பத்தியே அதிகமா எழுதறேன். :-)

@ Vedanthi - கலக்கறீங்களே வேதாந்தி. என்ன ஒரு அழகான அலசல்! சூப்பர் போங்க!